Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் மூன்றாம் திருமணம் செய்ய முயன்ற கணவரை அடித்து உதைத்த முதல் மனைவி

பாகிஸ்தானில் திருமணமாக இருந்த புது மாப்பிள்ளை ஒருவர், மண விழாவில் இருந்து அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதற்கு காரணம் அவருக்கு ஏற்கனவே ஒரு முறை அல்ல இரு முறை திருமணம் நடந்திருந்தது தெரியவந்ததுதான்.

அடி தாங்க முடியாமல் வாகனம் ஒன்றுக்கு கீழே சென்று ஒளிந்து கொண்ட புது மாப்பிள்ளை, பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் மீட்கப்பட்டார்.

பாகிஸ்தானில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ள சட்ட ரீதியாக அனுமதியுண்டு.

ஆனால், ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு தன்னுடன் வாழும் பெண்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அவர்கள் அடுத்த திருமணம் செய்துகொள்ள முடியும்.

ஆனால், ஆசிஃப் ரஃபீக் சித்திக்கி எனும் நபர் தனது முதல் இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள முயன்றுள்ளார்.

ஏற்கனவே இரு முறை திருமணம் முடிந்ததை புதிய மணமகளின் வீட்டினரிடமும் மறைத்துள்ளார்.

கராச்சியில் உள்ள ஒரு விழா மன்றத்தில் திருமணத்துக்கான கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தபோது அங்கு தனது ஆண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து சேர்ந்தார் ஆசிஃப் ரஃபீக்கின் முதல் மனைவி மடிஹா சித்திக்கி.

அங்கு கூடியிருந்த மணப்பெண்ணின் உறவினர்களிடம், “இவர் என் கணவர்; இந்தக் குழந்தையின் தந்தை. மூன்று நாட்களுக்கு ஹைதராபாத் செல்வதாக என்னிடம் கூறிவிட்டு இங்கு வந்துள்ளார்,” என்று அவர் அங்கு இருந்தவர்களிடம் தெரிவித்தார்.

தனது கணவரின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரையும் அங்கு அப்பெண் அழைத்து வந்திருந்தார்.

“இவர் என் கணவர் என்று உனக்கு தெரியுமா? இந்தக் குழந்தையைப் பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை,” என்று புது மணப்பெண்ணிடமும் அவர் சண்டையிட்டார்.

தகவல் தெரிந்தது எப்படி?

கராச்சியில் உள்ள உருது பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஆசிஃப் மடிஹாவை 2016இல் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அதே நகரில் உள்ள ஜின்னா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் செஹ்ரா அஷ்ரஃப் எனும் பெண்ணை முதல் மனைவிக்கு தெரியாமல் 2018இல் திருமணம் செய்துள்ளார்.

ஒரு செல்பேசி குறுஞ்செய்தி மூலம் தனது கணவருக்கு இரண்டாவது முறையும் திருமணமாகியுள்ளது மடிஹாக்கு தெரிய வந்தது. முதலில் அதை மறுத்த ஆசிஃப், பின்னர் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார்.

ஆசிஃப் ரஃபீக்கின் முதல் மனைவி மடிஹாவுக்கு, இரண்டாவது மனைவி செஹ்ரா கொடுத்த தகவலால், அவருக்கு மூன்றாவது திருமணம் நடக்கவிருந்தது குறித்து தெரியவந்துள்ளது.

சண்டையில் கிழிந்த சட்டை

கோபத்தில் இருந்த, ஆசிஃப் ரஃபீக்கின் முதல் மனைவி மடிஹா மற்றும் புது மணப்பெண்ணின் உறவினர்கள் ஆசிஃபை சரமாரியாக தாக்கியதால் அவரது ஆடை கிழிந்ததாக காவல்துறை பிபிசியிடம் தெரிவித்தது.

தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கிருந்த வாகனம் ஒன்றின் கீழ் சென்று அமர்ந்துகொண்டார் ஆசிஃப். அவர் வெளியே வராவிட்டால் வாகனத்தையே தீ வைத்து எரிக்கப் போவதாக ஒரு கும்பல் ஒன்று எச்சரித்தது.

பின்னர் அங்கிருந்த வேறு சிலரால் அவர் மீட்கப்பட்டார்.

ஆசிஃப் மற்றும் புது மணப்பெண்ணின் குடும்பத்தினரை பிபிசி தொடர்பு கொள்ள முயற்சித்தது. எனினும் அவர்கள் யாரையும் தொடர்புகொள்ள இயலவில்லை.

இது தொடர்பாக, எந்த தரப்பினர் இடமிருந்தும் புகார் எதுவும் பெறப்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »