Press "Enter" to skip to content

அமேசான் ஆதிக்குடி பெண்கள் போராட்டம்: “எங்கள் காட்டை காக்க மரணம் வரை போராடுவோம்” மற்றும் பிற செய்திகள்

“இது எங்கள் காடு, எங்கள் நிலம்” – அமேசான் ஆதிக்குடி பெண்களின் போராட்டம்

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மிக மோசமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது. காட்டுத்தீ, வேளாண்மைக்கான காட்டு அழிப்பு, மரங்களுக்காகக் காடுகளை அழிப்பது என பல்வேறு காரணிகள் அமேசான் காடுகள் சுருங்குவதற்குக் காரணம்.

ஒரு பக்கம் பிரேசில் அரசின் கொள்கை முடிவுகளே அமேசான் காடுகள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறதென்றால், மற்றொரு பக்கம் காடுகளை காக்க முதல் வரிசையில் நிற்கிறார்கள் அமேசான் பழங்குடிகள். அதுவும் குறிப்பாக பெண்கள்.

மரிஸ்டெலா எனும் 14 வயது அரரோ கரோ இனக்குழுவைச் சேர்ந்த பெண், “இந்த காடுதான் எங்கள் தாய். அந்த தாய் எங்களைக் கவனித்துக் கொண்டாள். பசித்த போது உணவிட்டால். இப்போது அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.” என்கிறார்.

சயிரூ பொல்சினாரூ தலைமையிலான பிரேசில் அரசு பழங்குடி மக்களுக்கான நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதில் முனைப்பாக இருக்கிறது.

மரிஸ்டெலா, “பொல்சினாரூ அரசு பழங்குடிகளை வெறுக்கிறது. ஆனால், நான் இந்த நிலத்தின் ஆதிக்குடி என்பதில் பெருமையாக உணர்கிறேன். அதுவும் ஒரு பெண்ணாக இந்த நிலத்தை காப்பது எங்கள் கடமை என நான் நம்புகிறேன்,” என்கிறார்.

ஒருபக்கம் அரசு அமேசான் காடுகளை கைப்பற்ற முனைய, இன்னொருபக்கம் பிரேசிலில் அமேசான் காடுகளைக் காக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

டிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் அமர்க்களமான ஏற்பாடுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியா டிரம்புடன் பிப்ரவரி 24ஆம் தேதி (இன்று) குஜராத் மாநிலம் ஆமதாபாத். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்களை பார்த்து கையசைத்தவாறு செல்ல முடிவு செய்துள்ளனர்.

டிரம்பின் இந்த வருகை பல காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதில் ஒன்று, அதற்கான செலவுத் தொகை. இந்த வருகைக்கான ஏற்பாட்டிற்காக 80-85 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விரிவாகப் படிக்க: ஆமதாபாத்தில் அமர்க்களமான ஏற்பாடுகள் – டிரம்பின் வருகைக்கு ஆகும் செலவு என்ன?

ஆப்கானிஸ்தான் தாலிபன்: தன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய பெண்

ஒரு டாக்டராக வேண்டும் என்ற பாவ்ஜியா கூஃபியின் கனவு, ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் வசப்படுத்தியதுடன் சிதைந்து போனது. அவருடைய கணவரை அவர்கள் சிறையில் அடைத்துவிட்டனர். காவலிலிருந்தபோது அவருக்குக் காசநோய் ஏற்பட்டது. விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் இறந்து போனார். பிறகு கூஃபி அரசியல்வாதியானார். அவரைக் கொலை செய்ய தாலிபான்கள் முயற்சி செய்தனர். இருந்தபோதிலும், அவர்களுடன் பேசுவதற்கான தைரியத்தை அவர் உருவாக்கிக் கொண்டார்.

“நான் என் தேசத்தின் பிரதிநிதியாக இருந்தேன். ஆப்கான் பெண்களின் பிரதிநிதியாக இருந்தேன்” என்று பிபிசியிடம் அவர் நினைவுகூர்ந்தார்.

விரிவாகப் படிக்க: தன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய ஆப்கன் பெண்

மலேசியா: மகாதீர் v/s அன்வார் – அடுத்தடுத்த சந்திப்புகள், நடவடிக்கைகளால் அரசியல் களத்தில் பரபரப்பு

தமது கூட்டாளிகள் எனக் கருதியவர்களே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக மலேசியாவின் அடுத்த பிரதமர் எனக் கருதப்பட்ட அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அங்கு புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பாக நிகழ்ந்து வரும் புதிய திருப்பங்கள் தங்கள் தரப்புக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரிவாகப் படிக்க: மலேசிய அரசியல்: ‘கூட்டாளிகள் துரோகம் இழைத்துவிட்டனர்‘ -அன்வார்

ஆளில்லா விமானம், 12 ஆயிரம் போலீஸ், பசுக்கள்-இப்படிதான் தயாராகிறது குஜராத்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க தயாராகி வருகிறது ஆமதாபாத் நகரம். திங்களன்று டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மொடேரா அரங்கம் எனப்படும் சர்தார் பட்டேல் அரங்கத்தில் பெரும் கூட்டத்தின் முன் உரையாற்றவுள்ளனர்.

விரிவாகப் படிக்க: டிரம்ப் வருகை: ஆளில்லா விமானம், 12,000 போலீஸ், பசுக்கள்-இப்படிதான் தயாராகிறது குஜராத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »