Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்”

உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் சிறிய வீடுகளில் வாழும் மக்கள் இதுபோன்ற அத்துமீறல்களை வெளியில் சொல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஐ.நா. மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த முடக்கநிலை காலத்தில் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுடன் தாங்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறும் இரண்டு பெண்களுடன் பிபிசி பேட்டி எடுத்தது.

கீதா, இந்தியா

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் முடக்கநிலை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது.

கீதா அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்கிறார். அவருடைய கணவர் தரையில் அவருக்கு அருகில் படுத்திருக்கிறார். சப்தமாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்.

முந்தின நாள் இரவு குடித்துவிட்டு, மன அதிர்ச்சியுடன் அவர் வந்திருந்தார். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு பொதுப் போக்குவரத்தை சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனவே ஆட்டோ அல்லது ரிக்ஷா ஓட்டுநரான விஜயின் தினசரி வருமானம் ரூ.1,500ல் (£16-க்கும் சற்று அதிகம் ) இருந்து ரூ.700 ஆகக் குறைந்துவிட்டது.

கொரோனா தாக்குதலுக்குப் பிறகு கீதாவின் குடும்பத்தின் வருமானம் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது.

“இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே போகுமோ” என்று அவர் கத்துவார், தான் குடித்துக் கொண்டிருந்த பாட்டிலை சுவரின் மீது வீசி எறிவார். கீதாவின் குழந்தைகள் பயத்தில் அவளுடை தோளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும்.

சிறிய கட்டிலின் மீது விஜய் படுத்துக் கொண்டதும், குடும்பத்தில் மற்றவர்கள், இந்த கோப நிகழ்ச்சிக்குப் பிறகு தரையைப் பகிர்ந்து கொண்டு ஆழ்ந்து தூங்கிவிடும்.

“குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதற்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது” என்கிறார் கீதா. “தங்களுடைய தந்தை கோபமாக இருப்பதை அவர்கள் முன்பும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக மோசமான நிலைக்கு அது போய்விட்டது. கையில் கிடைக்கும் பொருட்களைச் சுவர் மீது வீசி எறிவது, என்னைத் தலைமுடியைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார்.”

தன்னுடைய கணவர் தன்னை பல முறை அடித்திருப்பது கீதாவுக்கு நினைவிருக்கிறது. திருமணமான நாளன்று இரவில் முதல் முறையாக அவர் அடித்துள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிட அவர் ஒரு முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

கிராமப்பகுதி ஒன்றில் ஊருக்கு வெளியே குடியிருப்புப் பகுதியில் குறைந்த வருவாயுடன் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

வீட்டுக்கு வேண்டிய தண்ணீரை எடுத்து வருவதற்கு அந்தப் பெண் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். தண்ணீர் எடுத்து வந்ததும், காய்கறி தள்ளுவண்டி வருவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் பக்கத்தில் வசிப்பவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருப்பார்.

அன்றைய தினத்துக்கு வீட்டுக்கு உணவுக்கு வேண்டியவற்றை வாங்கிய பிறகு, காலை உணவைத் தயாரிக்கும் வேலையை கீதா தொடங்குவார். காலை 7 மணிக்கு அவருடைய கணவர் வெளியில் கிளம்புவார். மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்குவார். பிறகு 2 பெரிய குழந்தைகளும் வீடு திரும்பியதும் அவர் வெளியில் செல்வார்.

“ஆனால் 14 ஆம் தேதி பள்ளிக்கூடங்களை மூடிய பிறகு நிலைமைகள் மாறிவிட்டன” என்று கீதா கூறினார். “குழந்தைகள் எப்போதும் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினர். அது என் கணவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.”

“வழக்கமாக என்மீது காட்டுவதற்காக கோபத்தை அவர் வைத்திருப்பார். இப்போது தரையில் டம்ளரை வைத்துவிடுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களைப் பார்த்து கத்துகிறார். பிறகு அவருடைய கோபத்தை என் மீது திருப்பும் வகையில், நான் ஏதாவது சொல்வேன். ஆனால் நாங்கள் அதிக நேரம் ஒன்றாக இருப்பதால், அவருடைய கவனத்தை திசை திருப்ப எனக்கு குறைவான அவகாசமே கிடைக்கிறது.”

கீதாவுக்கு ஒரு திட்டம் இருந்தது. தன் கணவர் வேலைக்குப் போன பிறகு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு நடந்து போவார்.

அங்கே சமுதாய நிர்வாகிகளால் ரகசியமான ஒரு வகுப்பு நடத்தப்படுகிறது. தையல், எழுத மற்றும் படிக்க அங்கு கற்றுத் தரப்படுகிறது.

பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருப்பதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டு, குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று கீதா விரும்புகிறார். வகுப்பின்போது, குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களுக்கு உதவுவதில் பயிற்சி பெற்ற கலந்தாய்வு நிபுணர்களை அவர் சந்தித்தார்.

ஆனால் மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய, இந்தியாவின் 21 நாள் முடக்கநிலை, இவை அனைத்திற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வகுப்புகள் நின்று போய்விட்டன. அதனால் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆலோசனை கூறும் வாய்ப்பு, நிபுணர்களுக்குக் கிடைப்பதில்லை.

ராஜஸ்தானில் இரண்டாவது பெரிய நகரமான, ஜோத்பூர் பகுதியில் பெண்களுக்கு உதவக் கூடிய சம்பாலி டிரஸ்ட்டின் தன்னார்வலர் விமலேஷ் சோலங்கி, கொரோனா வைரஸ் காரணமாக பெண்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்கிறார்.

“முழுமையான முடக்கநிலை என்பது, தினசரி வாழ்க்கையை முற்றிலுமாக இடையூறுக்கு ஆளாகியுள்ளது. இப்போது தள்ளுவண்டிகளில் உணவுப் பொருட்களைக் கொண்டு வருபவர்கள் இல்லை. எனவே தினசரி உணவுக்காக அவர்கள் தினமும் சூப்பர் மார்க்கெட்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.”

“இதுபோன்ற மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலைகள், ஏற்கெனவே துன்புறுத்தும் துணைவரால் இன்னலுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.”

கய், நியூயார்க், அமெரிக்கா

கய் தனது செல்போனை எடுத்து மெல்ல டைப் செய்கிறார். “நான் உங்களுடன் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அம்மா விரும்புகிறார்.” அதை அவர் அனுப்புகிறார். விரைவில் பதில் வருகிறது: “அது நல்லது.”

இனிமேல் ஒருபோதும் நுழைய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்ட வீட்டில் கடந்த வாரம் அந்த டீன்ஏஜ் வயதுப் பெண் நுழைந்தார். “வீட்டுக்குள் நான் காலடி எடுத்து வைத்த மறுநொடி என் மூளை அதிர்ச்சியாகிவிட்டது” என்று மென்மையாக அவர் கூறுகிறார். “எல்லாமே மாறிவிட்டன, எல்லா உணர்வுகளும் மாறிவிட்டன.’

உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பல ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி வருவதாக அவர் கூறும், தன் தந்தையுடன் அவர் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் என்பது ஒரு சக்கரத்தைப் போல கடந்து சென்றுவிடக் கூடிய விஷயம் என்று கய் நினைத்திருந்தார். ஆனால் நிலைமைகள் மாறிவிட்டன.

அவருடைய தாயார் வேலை பார்க்கும் கடையின் அலுவலர்களின் மன அமைதி குறைந்துவிட்டது. இந்த வைரஸ் எல்லைகளை கடந்துவிட்டது, 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது, இப்போது நியூயார்க்கிலும் பரவியுள்ளது என்ற செய்தி அவர்களை பதற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டது.

கடையில் வேலை பார்ப்பது என்பது தினமும் வாடிக்கையாளர்களுடன் கலந்து பழகும் வகையிலான விஷயம்.

கய்யின் தாயாரும், அவருடன் பணிபுரியும் இரண்டு பேரும், வாடிக்கையாளர்களுடன் ஏற்படும் தொடர்பு பற்றி கவலை அடைந்தனர். ஆனால் அவர்கள் நீண்ட காலம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காலவரையின்றி கடை மூடப்பட்டது. அதனால் பணியாளர்கள் தேவையில்லை என்றாகிவிட்டது.

கய்யின் தாயாருக்கு அந்த வேலைக்காக ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர்கள் (£12) கிடைக்கும். அவருடைய சுகாதாரக் காப்பீடு ஐந்து நாட்களுக்கு மட்டும் பயன்தரக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கய்யின் வாழ்க்கையில் பெரும்பகுதியில் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய தாயாருக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

“அவருக்குப் பாதிப்பு இருந்தது. இங்கே எல்லாமே குழப்பமாக உள்ளது. நீ உன் தந்தையின் வீட்டுக்குப் போயாக வேண்டும் என்று அவர் கத்தினார்” என்று கய் தெரிவித்தார்.

துயரத்தில் இருந்த கய்யின் நரம்புகளை சில்லிடச் செய்வதாக அந்த வார்த்தைகள் இருந்தன. அம்மாவுக்கு சிறுது அவகாசம் கொடுத்தால் நிலைமை மாறிவிடும் என்று நினைத்து, தன் அறையிலேயே கய் முடங்கிக் கிடந்தார். ஆனால் மாடியில் இருந்து இறங்கிச் சென்றதும், “நீ ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்” என்று தாயார் கேட்டிருக்கிறார்.

தன் தந்தையால் ஏற்பட்ட உடல் ரீதியிலான மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு தான் கய் சிகிச்சை பெற்றிருந்தார். குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னிடம் தன் தந்தை அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார் என்று கய் தெரிவித்தார். தனக்கு நடந்த துன்புறுத்தல்கள் பற்றி தாயிடமும், சகோதரியிடமும் முழுமையாக அவள் கூறியது கிடையாது.

அது ஆரம்ப காலக்கட்டம். ஆனால் கய்யின் சிகிச்சை அவருக்கு உதவிகரமாக இருந்தது. அதிக கட்டுப்பாட்டில் இருப்பதாக கய் உணர்ந்தார். எதிர்காலம் பற்றி அவருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த இல்லத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சிகிச்சையாளர் தெரிவித்தார். கடந்த வாரம் அவர் தன் தந்தையுடன் தங்குவதற்குச் சென்றுவிட்டார்.

“அவர் எல்லா நேரமும் இங்கே தான் இருக்கிறார்” என்று அவர் முணுமுணுத்தார். “பகல் நேரத்தில் முன் அறையில் உள்ள கம்ப்யூட்டரில் அவர் டி.வி. பார்க்கிறார். இரவில் அவர் ஆபாசப் படம் பார்க்கும் சப்தம் எனக்கு கேட்கிறது” என்று கய் தெரிவித்தார்.

அவர் விழித்திருக்கும்போது பழங்கள், ஐஸ்கிரீம் கலந்த காலை உணவை தயாரிப்பதாக கய் தெரிவித்தார். “அந்த சப்தம் எனக்கு பிடிக்காது. அவ்வளவு அதிகமான சப்தம் கேட்கும். அது எனக்கு பயத்தைத் தருவதாக இருக்கும். என்னுடைய நாளின் தொடக்கம் அப்படி தான் தொடங்கும். நாள் முழுக்க நான் விழிப்புடன் இருந்தாக வேண்டும்” என்று கய் கூறினார்.

இங்கே திரும்பி வந்ததில் இருந்து கய் நன்றாகத் தூங்கவில்லை. அவருடைய அறையின் கதவில் உள்புறம் பூட்டு கிடையாது.

உடல் ரீதியாக அடக்குமுறைக்கான வழக்கமாக அது இருக்கும். அவருக்கு கோபம் ஊட்டும் வகையில் கய் ஏதாவது செய்தால் மட்டும் அப்படி நடக்கும். எனவே அவருடைய பதையில் இருந்து விலகி இருக்க கய் திட்டமிட்டுள்ளார். குளியலறைக்கு ஓடிச் செல்வதற்கும், தனது உணவை சமையலறையில் தயாரிப்பதற்கு ஓடிச் செல்வதற்கு மட்டுமே தன் அறையைவிட்டு கய் வெளியே வருகிறார்.

முன்பு மின்சப்ளை துண்டிக்கப்பட்ட போது இருவரும் மோதிக் கொண்டனர். அப்போது அத்துமீறல் மோசமானதாக இருந்தது.

“வரலாற்றில் விநோதமான காலக்கட்டத்தில் வாழ்வதைப் போல அவர் நடந்து கொள்வார். ஆனால், அத்துமீறல் பற்றி எதுவும் பேசுவதில்லை” என்று கய் கூறினார். “நான் கட்டுப்பாட்டை இழப்பது போன்ற உணர்வை அது எனக்குத் தரும். அவர் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்ற அச்சம் என்னைக் கொல்கிறது” என்றார் கய்.

நாள் முழுக்க ஆன்லைனில் பொழுதைக் கழிக்கிறார் கய். அண்மையில் திரைப்படங்கள் குறித்து யூடியூப் விடியோ கட்டுரைகளை அவர் பார்த்துள்ளார். தான் பார்த்திராத திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களைப் பார்ப்பது அவருக்குப் பிடித்திருக்கிறது.

தனது தாய் சீக்கிரம் தன்னை திரும்ப அழைத்துக் கொள்வார் என்றோ அல்லது கொரோனா நோய்த் தொற்று சீக்கிரம் முடிவுக்கு வந்து, தான் வாழ்வதற்கு வேறு ஒரு இடத்தை சீக்கிரம் கண்டறிய முடியும் என்றோ கய் நம்புகிறார்.

குடும்ப வன்முறை குறித்த அழைப்புகள் அதிகரிப்பை சமாளிக்க காவல் துறையினர் தயாராக இருப்பதாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குடும்ப வன்முறை நிவாரண ஆணையாளர் நிகோலே ஜேக்கப்ஸ் தெரிவித்தார்.

“இதுபோன்ற குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும் என்பதை காவல் துறை எதிர்பார்த்திருந்தது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை புரிய வைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

“அந்த அழைப்புகளுக்கு முன்னுரிமை தருகிறோம் என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு நபர் 999 அழைப்புகள் அமைதியாக செய்து, அலுவலர் அந்த அழைப்பை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவர் எடுத்தவுடன் இருமியோ அல்லது வேறு ஏதாவது ஒலி எழுப்பிவிட்டோ 5, 5 அழுத்தினால் போதும்.”

உத்தரவாதம் இல்லாத குடியேற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு “தடை ஏதும் இருக்கக் கூடாது, இந்த நேரத்தில் அத்துமீறல் குறித்து புகார் செய்தால், வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும்” என்று அந்தப் பெண் அதிகாரி கூறினார். அகதி நிலையில் இருக்கும் முக்கிய தொழிலாளர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக கவனிப்பு மற்றும் சிறப்பு சேவைகளில் உள்ள தொழிலாளர்கள், இந்த வைரஸ் தொற்று காலத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

`கண்கள் மற்றும் காதுகள்’

பெண்களுக்கான ஐ.நா. அமைப்பின் செயல் இயக்குநர் பூம்ஜிலே மிலாம்போ-நிக்குக்கா இந்தக் கருத்தை தான் பிபிசியிடம் கூறினார். எளிதில் பாதிக்கும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு, பாதுகாப்பான உடைகள் அளிக்க வேண்டியது அவசர கால தேவையாக உள்ளது என்றார் அவர்.

“சமுதாய அளவில் தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் சென்றடைந்து, ஆபத்து வாய்ப்பில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க களப் பணியாளர்களுக்கு எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உலக அளவில் அரசு நிதி இதற்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய அத்துமீறல் ஹாட்லைன்களுக்கான அழைப்புகள் அதிகரித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போல அல்லாமல், பல வளரும் நாடுகளில், அதற்கு நேர் எதிரான சூழலுக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

“பல நாடுகளில் உள்ள குறைந்த சமூக பொருளாதார பின்னணி கொண்ட மக்கள், ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில், அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுடன் வாழ்ந்து வருவதால், அதுபற்றி வெளியில் தெரிவிப்பது சாத்தியமற்றது” என்று அவர் தெரிவித்தார்.

“மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய்த் தொற்று தாக்குதல் முடிவுக்கு வந்து பல மாதங்கள் கழித்துதான், அங்கு வீடுகளில் பாலினம் சார்ந்த அடக்குமுறை சம்பவங்கள் அதிகரித்திருந்தன என்ற தகவல் எங்களுக்குத் தெரிய வந்தது.”

இதற்கிடையில், பிரிட்டனில் குடும்ப அத்துமீறல்களைக் கையாள்வதற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு, இதுதான் சரியான தருணம் என்று ஜேக்கப்ஸ் கூறியுள்ளார்.

“தேசிய சுகாதார சேவைத் துறை தன்னார்வலர்களாக நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். குடும்ப வன்முறைகளை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரிந்திருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் சமூகத்தில் அவர்கள் தான் நம்முடைய கண்கள் மற்றும் காதுகளாக இருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

(இரண்டு பெண்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »