Press "Enter" to skip to content

அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்

நியூயார்க்கின் பிரோன்னெக்ஸ் வன விலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது.

லோவாவில் உள்ள தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம் நாடியா என்ற புலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது என்று பிரோன்னெக்ஸ் வன விலங்கு பூங்காவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாடியாவுடன் சேர்ந்து ஆறு பெரிய பூனைகளுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது என வன விலங்கு பூங்காவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடந்த மாதத்தின் பிற்பகுதியிலேயே பூனைகள் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டிருந்ததாக வன விலங்கு பாதுகாவலர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் பல அறிகுறிகள் பூனைகளிடம் தென்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

”உலகிலேயே முதல் முறையாக மனிதரிடம் இருந்து விலங்குக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறோம்” என வன விலங்கு பூங்காவின் தலைமை அதிகாரி பால் கேலி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 பரவுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பிற உயிரியல் பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இந்த புலிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.

நாடியாவின் சகோதரியான அசூல் மற்றும் இரண்டு ஆமூர் புலிகள், மூன்று ஆஃப்ரிக்க சிங்கங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு குறித்து அறிகுறிகள் தெரிவதாக வன விலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் ஆறு பூனைகளும் உடல் நலம் மெலிந்து காணப்படுவதாகவும் சரியான உணவு சாப்பிடுவதில்லை என்றும் கூறுகின்றனர். இதுவரை வேறு எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

விலங்குகளில் புலி மற்றும் சிங்கம் இவ்வகையான புதிய வைரஸ்களால் எப்படி பாதிக்கப்படும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வன விலங்கு பூங்காவின் பாதுகாவலர்கள் யாரிடமாவது இருந்து இந்த வைரஸ் பாதிப்பு புலிகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பாதுகாவலர்களுக்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே விலங்குகளை கொரோனா வைரஸ் தாக்கி இருக்க வாய்ப்புள்ளது எனவும் அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு தென்படும் அனைத்து புலிகளும் பூங்காவிற்கு உள்ளேயே உள்ள குறிப்பிட்ட மலைப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மார்ச் 16ம் தேதியிலிருந்தே பிரோன்னெக்ஸ் பூங்காவிற்கு பொது மக்கள் யாரும் வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போது அங்கு இருக்கும் மற்ற விலங்குகளையும் பாதுகாவலர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலங்குகளை கொரோனா வைரஸ் எப்படிப் பாதிக்கும்?

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது அரிதானதாகக் கருதப்படுகிறது. இதுவரை இது தொடர்பான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே ஹாங் காங்கில் உள்ள ஒரு நாயைப் பரிசோதித்தபோது அதற்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

சீனாவில் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் வூஹானில் அனுமதி இன்றி விற்கப்படும் வன விலங்கு இறைச்சி சந்தை ஒன்றிலிருந்துதான் பரவியது என்று நம்பப்படுகிறது.

பிறகு மனிதர்களிடம் இருந்து மனிதருக்குப் பரவியது. தற்போது மனிதரிடம் இருந்து விலங்குக்குப் பரவி இருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன.

அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மற்றும் வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. ஆனால் கொரோனா வைரஸ் வனவிலங்குகளைப் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது என வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »