கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் உலாவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள போலியான மற்றும் தவறாக வழிகாட்டும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி குழுக்கள் ஆய்வு செய்தன. பிபிசி மானிட்டரிங் பிரிவு மூலம் இந்த வாரத்தில் அம்பலப்படுத்தப்பட்ட விஷயங்களை ஜேக் குட்மேன் முன்வைக்கிறார். ட்ரெண்டிங் மற்றும் உண்மைநிலை அறிதல் பற்றி விளக்குகிறார்.
பி.சி.ஜி. தடுப்பூசி பற்றி தவறான தகவல்கள்
கொரோனா வைரஸ் தாக்குதலை பி.சி.ஜி. தடுப்பூசி தடுக்கும் என்ற வாட்ஸப் தகவல் தவறானது.
உலகம் முழுக்க காசநோய் தடுப்புக்காக குழந்தைகளுக்கு பி.சி.ஜி. தடுப்பூசி போடப்படுகிறது. பிரிட்டனில் 2055 ஆம் ஆண்டு வரையில் செகண்டரி பள்ளிகளில் பரவலாக இந்த ஊசி போடப்பட்டது.
இப்போதும் பிரிட்டனில் ஒரு குழந்தை அல்லது பெரியவருக்கு காசநோய் ஏற்படும் ஆபத்து இருந்தால் இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது.
பி.சி.ஜி. தடுப்பூசி போட்டிருந்தால், கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று சிரியா போன்ற பல நாடுகளில் இப்போதும் வதந்தி உலவுகிறது.
தடுப்பூசி போட்டதன் அடையாளமாக உங்கள் கையில் மேல் பகுதியில் வட்டமான தழும்பு இருந்தால் கோவிட்-19க்கு எதிராக நீங்கள் “75 சதவீதம் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று அர்த்தம் என்று அரேபிய மொழியில் உள்ள ஒரு வாட்ஸப் தகவல் தெரிவிக்கிறது.
இருந்தபோதிலும், கோவிட்-19 நோய்த் தாக்குதலில் இருந்து பிசிஜி தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இப்போது பிசிஜி தொடர்பாக இரண்டு ஆய்வகப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவற்றின் முடிவுகள் வந்த பிறகு மதிப்பீடு செய்யப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், உலக அளவில் “பி.சி.ஜி.” என்ற வார்த்தையை இணையத்தில் தேடுவது அதிகரித்துள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துக்கு அதிக தேவை ஏற்பட்டால், சந்தையில் கிடைப்பது குறைந்துவிடும், காசநோய்த் தடுப்புக்கு குழந்தைகளுக்குக் கிடைப்பது சிரமமாகிவிடும் என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
ஜப்பானில் பிசிஜி தடுப்பூசிக்கு தேவை அதிகரித்துள்ளதால், இதேபோன்ற கவலை ஜப்பான் மருந்து விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு செய்முறை விளக்க நிகழ்ச்சியில், இந்த சாதனம் குறித்த தகவலை உறுதிப்படுத்த எந்தத் தகவலும் இல்லை என்பதும் இடம் பெற்றுள்ளது.
இரானின் பொய் கண்டறிதல் தன்மை
கொரோனா வைரஸ் பாதிப்புள்ள மக்களை – நோய்த் தொற்றுள்ள மேற்பரப்புகளையும் கூட – 100 மீட்டர் தொலைவில் இருந்தே, ஐந்து நொடிகளில் கண்டுபிடித்துவிடும் என்று கூறப்பட்ட கையடக்க சாதனத்தை ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமை இந்த வாரம் அம்பலப்படுத்தியது.
“மெய் போன்ற பொய்யான அறிவியல்,” “நம்ப முடியாதது” என்றும் “அறிவியல் கற்பனைக் கதைகளைப்” போல உள்ளது என்றும் இரான் இயற்பியல் சங்கம் கூறியுள்ளது.
ஒரு தசாப்த காலத்துக்கு முன்பு பிரிட்டன் மோசடியாளர்களால் விற்கப்பட்ட, வெடிகுண்டு கண்டறியும் போலி சாதனத்தைப் போல இந்தச் சாதனம் இருக்கிறது. அதே மாதிரியான “மின்காந்த அயனி ஈர்ப்புத் தன்மை” அடிப்படையில் அது செயல்படுவதாகவும் கூறினர்.
வெடிகுண்டு கண்டறியும் போலியான சாதனங்கள், அதைப் பயன்படுத்துபவர் தன்னை அறியாமல் கையை அசைக்கும் அசைவுகளுக்கு ஏற்ப ஊசலாட்டம் காட்டும் ஒரு ஆன்டனாவைக் கொண்ட காலி டப்பா போன்றதாக இருந்தன. அவை மோதல் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. உலகம் முழுக்க பல அரசுகளும் அதைப் பயன்படுத்தின.
இப்போது வந்துள்ள புதிய சாதனமும், ஏறத்தாழ அதேபோன்ற ஆன்டனா கொண்டதாக உள்ளது.
இரான் அரசுத் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில், அந்த சாதனத்தின் பேக்கேஜ் கூட முந்தைய வெடிகுண்டு கண்டறியும் போலி சாதனத்தின் பெட்டி போலவே இருந்தன.
இந்த வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை
கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறி Epoch Times வெளியிட்ட விடியோவும் பொய்யானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த விடியோ முகநூலில் 70 மில்லியன் முறைகள் பார்க்கப்பட்டுள்ளது.
அதன் ஆரம்பம் நெட்பிலிக்ஸ் ஆவணப்படம் போல ஈர்ப்புடன் இருக்கிறது – ஒரு மின்னல், இடி சப்தம் அதைத் தொடர்ந்து பயமுறுத்தும் வகையிலான இசை என செல்கிறது.
இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.
மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் | மொத்தம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் |
---|---|---|---|
மகாராஷ்டிரம் | 4203 | 507 | 223 |
டெல்லி | 2003 | 290 | 45 |
குஜராத் | 1851 | 106 | 67 |
மத்தியப் பிரதேசம் | 1485 | 127 | 74 |
ராஜஸ்தான் | 1478 | 183 | 14 |
தமிழ்நாடு | 1477 | 411 | 15 |
உத்திரப் பிரதேசம் | 1176 | 129 | 17 |
தெலங்கானா | 873 | 190 | 21 |
ஆந்திரப் பிரதேசம் | 722 | 92 | 20 |
கேரளம் | 402 | 270 | 3 |
கர்நாடகம் | 395 | 111 | 16 |
ஜம்மு & காஷ்மீர் | 350 | 56 | 5 |
மேற்கு வங்கம் | 339 | 66 | 12 |
ஹரியாணா | 233 | 87 | 3 |
பஞ்சாப் | 219 | 31 | 16 |
பிகார் | 96 | 42 | 2 |
ஒடிஷா | 68 | 24 | 1 |
உத்திராகண்ட் | 44 | 11 | 0 |
ஜார்கண்ட் | 42 | 0 | 2 |
இமாச்சல பிரதேசம் | 39 | 16 | 1 |
சத்தீஸ்கர் | 36 | 25 | 0 |
அசாம் | 35 | 17 | 1 |
சண்டிகர் | 26 | 13 | 0 |
லடாக் | 18 | 14 | 0 |
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் | 15 | 11 | 0 |
கோவா | 7 | 7 | 0 |
புதுவை | 7 | 3 | 0 |
மணிப்பூர் | 2 | 1 | 0 |
மிசோரம் | 1 | 0 | 0 |
தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
ஒரு மணி நேரம் ஓடக் கூடிய அந்த வீடியோவில், வுஹானில் ஓர் ஆய்வகத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதததால் வைரஸ் வெளியே பரவியுள்ளதாகவும் அந்த வீடியோ கூறுகிறது.
“வுஹானில் உள்ள எந்த ஆராய்ச்சி நிலையத்திலும் சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் (கோவிட்-19 நோயை ஏற்படுத்தக் கூடியது) உருவாக்கப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இப்போது இல்லை” என்று பிபிசி அறிவியல் பிரிவு ஆசிரியர் பால் ரின்கன் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து வந்துள்ளது, மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்று அறிவியல்பூர்வ ஆதாரங்கள் காட்டுகின்றன.
மார்ச் மாதம் நடந்த ஓர் ஆய்விலும், கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் ஆய்வகங்களில் இருந்து வெளியானது என்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
எச்.ஐ.வி.-யில் இருக்கும் புதிய தொகுப்புகள் புதிய கொரோனா வைரஸ்களில் கண்டறியப்பட்டதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாகவும், அதனால் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று அவர்கள் கூறியதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத அந்த அறிக்கையை, அதை எழுதியவர்களே வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஆராய்ச்சியில் பெறப்பட்ட மரபணு தகவல்கள் வேறு பல கிருமிகளில் பொதுவாகக் காணப்படும் அமைப்புகளுடன் பொருந்துவதாக உள்ளது.
“அந்த மரபணு தொகுப்புகள் மிகவும் குறுகியவை என்பதால் வேறு பல கிருமிகளின் அமைப்புடன் ஒத்துப்போகும், எச்.ஐ.வி. உடன் மட்டும் தான் ஒத்துப்போகும் என்றில்லை. அதனால் அது எச்.ஐ.வி.யுடன் தொடர்புடையது என கூறிவிட முடியாது” என்று கென்ட் பல்கலைக்கழக நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் ஜெரெமி ரோஸ்மன் கூறியுள்ளார்.
நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட Epoch Times, சீன-அமெரிக்கர்களால் தொடங்கப்பட்டது. அவர்கள் Falun Gong என்ற மதப் பிரிவு சார்புடையவர்களாக இருக்கிறார்கள்.
அந்த இணையதளத்தில் கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் ஆதரவு முகநூல் விளம்பரங்கள் நிறைய இடம் பெற்றதாக NBC News தெரிவித்துள்ளது.
ஆனால் ஆகஸ்ட் மாதம் தனது கோட்பாடுகளை மீறி நிறைய விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறி இந்த தளத்தை முகநூல் நிறுவனம் தடை செய்துவிட்டது.
பில்கேட்ஸ் பற்றிய வதந்திகள்
உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியளிப்பதை நிறுத்தும் டொனால்ட் டிரம்ப்பின் முடிவை பில்கேட்ஸ் விமர்சித்த விவகாரத்தை அடுத்து இந்த வாரம் திரு. கேட்ஸ் பற்றி நிறைய தவறான தகவல்களும் யூகங்களும் பரவின.
தடுப்பூசிகளுக்கு திரு. கேட்ஸ் ஆதரவாக இருப்பதை விமர்சிப்பது போன்ற பழக்கமான விஷயங்களின் பாணியில் அவை இருந்தன.
இப்போது நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் ஆய்வுக்கு பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் நிதியுதவி அளிக்கும் ஆராய்ச்சி நிறுவனம் தான் காப்புரிமை பெற்றுள்ளது என்று முகநூலில் மீண்டும் பதிவுகள் இடம் பெற்றன.
இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. பில் கேட்ஸ் மூலம் மனிதர்களால் தான் கோவிட்-19 உருவாக்கப்பட்டது என்ற கருத்து பொய்யானது.
கோவிட் நோய்த் தொற்று போலியானது அல்ல
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று “போலியானது” மற்றும் “கேலிக்கூத்தானது” என்று கொலம்பிய செய்திச் சேனல் நேர்காணல் செய்த மாற்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த மாதம் அந்த வீடியோ பதிவேற்றப்பட்டது. இதுவரை அந்த வீடியோ 18 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இன்னமும் முகநூல் மூலம் பகிரப்பட்டு வருகிறது. அதனால் அதுபற்றியும் நாம் ஆய்வு செய்தோம்.
அந்தத் தகவல் முழுக்க தவறானது – கொரோனா வைரஸ் இருக்கிறது.
நேர்காணல் செய்யப்பட்டவரை இடைமறித்து கேள்வி கேட்கவில்லை. வைரஸ்கள் பற்றிய இப்போதைய கோட்பாடுகள் தவறானவை என்று அவர் சொல்கிறார். தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, எச்ஐவி இருந்தது என்பதை மறுக்கும் யூடியூப் வீடியோ ஒன்றையும் பார்க்கும்படி அவர் கூறியுள்ளார்.
அப்படியானால் மக்கள் ஏன் நோயுறுகிறார்கள் என்பதை அவர் எந்த இடத்திலும் விளக்க முற்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com