அரபு நாடுகளில் இஸ்லாமியர்களின் புனித காலமான ரமலான் மாதம் இன்று முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் தங்களது பொது முடக்க நிலையை ஓரளவுக்கு தளர்த்தியுள்ளன.
இருப்பினும் தொடரும் சில கட்டுப்பாடுகளால், பல இஸ்லாமியர்களால் தொழுகைக்கு மசூதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பலநாடுகள் நேரலை மூலமாக தொழுகைகளை நடத்த முடிவெடுத்துள்ளன.
ரமலான் தொழுகைக்கு கட்டுப்பாடு
செளதி அரேபியாவில் உள்ள புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவில், இரவில் நடைபெறும் தராவீ தொழுகையில், மதகுருமார்கள் மற்றும் அந்த தலங்களின் ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என அந்நாட்டின் அரசர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மக்கள் இந்த புனித தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் செளதி அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய புனித தலமான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள ஹராம் அல் ஷரீப் மசூதியில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த 1400 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கடினமான, மனதிற்கு வலியை ஏற்படுத்தக்கூடிய முடிவு,” என அந்த தலத்தின் இயக்குநர் சேக் ஒமர் அல் கிஸ்வானி தெரிவித்துள்ளார்.
மதகுருமார்களும், அந்த தலத்தின் ஊழியர்களும் தொழுகைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழுகைகள் இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எகிப்தில் உள்ள மசூதிகள் மூடியே இருக்கும் எனவும், இரவு நேர பொது முடக்க நிலை தொடரும் எனவும் அந்நாட்டின் அதிபர் அப்துல் ஃபடா அல் சிசி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த கட்டுப்பாடுகளை மக்கள் மீறினால், விளைவுகள் மோசமாகிவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, பொது முடக்க நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க்கு ஒரு கோடி உணவுப் பொட்டலங்களை அளிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதுதவிர ரமலான் மாதத்தை முன்னிட்டு, மக்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு சில தளர்வுகளையும் அந்நாடு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் ரமலான் மாதம் நாளை முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரமலான் தொழுகைகளுக்காக மசூதிகளை திறந்து வைக்கவும் அந்நாடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மசூதிகளில் நடைபெறும் தொழுகைகளில் தனிநபர் இடைவெளி சரியாக பின்பற்றப்படுகிறதா என அரசு தீவிரமாக கண்காணிக்கவிட்டால், அடுத்த மாதம் பாகிஸ்தானில் கொரோனா தொற்று எண்ணிக்கை உச்சத்தை அடையும் என அந்நாட்டின் மருத்துவ சங்கங்கள் எச்சரித்துள்ளன.
ஆனால் மசூதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு போதிய ஆள்பலம் இல்லை என சில அரசு அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தோனீசியாவில் தொழுகை நடத்த அனுமதி
இதனிடயே இந்தோனீஷியாவில் அட்ஜே மாகாணத்தில் தொடர்ந்து இரவு நேர ரமலான் தொழுகை மசூதிகள் நடைபெறும் என அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது. அந்த மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனீசியாவின் அட்ஜே மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில் ரமலான் மாத தொழுகைக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடினர்.
சமூக கட்டுப்பாடு வழிமுறைகளுக்கு எதிராக இடைவெளி இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் அருகில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இதில் பலரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
“கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துவிடுவோமோ என்ற அச்சம் இருந்தாலும், அதனால் என் தொழுகையை செய்யாமல் இருக்கமாட்டேன். நாம் சுத்தமாக இருந்து, தனிப்பட்ட சுகாதார முறையை பராமரிப்பது முக்கியம்,” என்கிறார் பிபிசி இந்தோனீசிய சேவையிடம் பேசிய புட்ரி சாரா.
இந்தோனீசிய அரசு விதிக்கும் விதிமுறைகளைவிட உள்ளூர் மதகுருக்குள் வெளியிடும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்குதான் அட்ஜே மாகாண மக்கள் மதிப்பளிப்பார்கள் என சியா குவாலா பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் மரினி கிரிஸ்டியானி கூறுகிறார்.
இந்தோனீசியாவில் இஸ்லாத்தின் ஷிரியா சட்டத்தை பின்பற்றும் ஒரே மாகாணம் அட்ஜே.
இன்னும் அங்கு பொதுவெளியில் கசையடிகள் கொடுப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த செவ்வாயன்று கூட, இஸ்லாமிய விதிகளை மீறியதற்காக ஆறு பேருக்கு கசையடி கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com