Press "Enter" to skip to content

இந்தியா vs சீனா: ராணுவத்தில் யார் பலசாலி? – 3 முக்கிய தகவல்கள்

இந்தியா சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இரு அண்டை நாடுகள் பற்றிய ஒப்பீடு அதிகம் விவாதிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்தியா – சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மீண்டும் இரு நாடுகளிடையே யார் பலசாலி என்ற கேள்விகளும், இந்தியா சீனா பற்றி பல சந்தேகங்களும் இணையத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்தியா சீனா இடையே எவ்வளவு தூரம் எல்லை?

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது.

யாரிடம் அதிக ராணுவ வீரர்கள்?

ஜப்பான் பாதுகாப்புத்துறை 2019-ல் வெளியிட்ட அறிக்கையின் படி சீனாவிடம் 9 லட்சத்து என்பதாயிரம் ராணுவ வீரர்கள் உள்ளார்கள். இந்தியாவில் 14 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளார்கள். சமீபத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்த சீனா, ராணுவ தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தியது.

எல்லையில் யார் ஆதிக்கம்?

எல்லைப்பகுதியில் 15 முக்கிய விமான தளங்களையும், 27 சிறிய விமான நிலையங்களையும் சீனா கட்டியுள்ளது.

இதில், திபெத் பகுதியில் சீனா கட்டியுள்ள விமான தளம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அனைத்து வானிலையின் போதும் விமானங்கள் செல்லவும் தரையிறங்கவும் அனுமதிக்கும் இந்தத் தளத்தில், மேம்பட்ட போர் ஜெட் விமானங்களைக் கையாள முடியும்.

திபெத் பகுதியில் விமான தளத்துடன், விரிவான சாலை மற்றும் ரயில் தொடர்புகளையும் சீனா கொண்டுள்ளது. இதன் மூலம், சீன படைகள் 48 மணி நேரத்தில் இந்திய எல்லையை அடையலாம் என கூறப்படுகிறது.

எல்லைப் பகுதியை வலிமைப்படுத்துவதில் சீனா முன்னணி வகிக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியா தனது தூக்கத்தில் இருந்து விழித்தது” என இந்தியாவின் “ஃபர்ஸ்ட் போஸ்ட்” இணையதளம் கூறியுள்ளது.

இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் 73 சாலைகளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதில் இதுவரை 30 சாலைத் திட்டங்கள் முடிவடைந்துள்ளன.

அருணாசல பிரேதசத்தில் உள்ள தவாங் மற்றும் டிராங்க் பகுதியில் இரண்டு உயர்தர விமான இறங்கு தளத்தை இந்தியா கட்டி வருகிறது. அத்துடன் வட-கிழக்கு பகுதியில் உள்ள ஏற்கெனவே உள்ள ஆறு உயர்தர விமான இறங்கு தளத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

இந்தியா, தனது சீன எல்லைப்பகுதியில் 31 விமான தளங்களைக் கொண்டுள்ளது. அதில், அஸ்ஸாமில் உள்ள விமான தளங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன.

யாருக்குச் சாதகம்?

‘’ராணுவத்தின் பயிற்சி மற்றும் ராணுவ தொழில்முறை இந்தியாவிற்குச் சாதகமாக உள்ளது. உள்கட்டமைப்பு, தளவாடங்கள், பொருட்கள் ஆகியவை சீனாவுக்கு சாதகமாக உள்ளது“ என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ராணுவம் குறித்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »