Press "Enter" to skip to content

நிறவெறிக்கு எதிராக இனம் கடந்த போராட்டம்: அமெரிக்காவில் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 12வது நாளாகத் தொடர்கிறது.

இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இனம், நிறம் கடந்து ஒன்றுகூடி இனவெறிக்கு எதிராகவும், போலீஸ் வன்முறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்பிடோல், லிங்கன் நினைவகம், லஃபாயெட்டி பூங்கா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இந்த இடங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகைக்கு செல்லும் பாதைகளை போலீசார் மறித்துவைத்தனர்.

பல்வேறு இனங்கள், நிறங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். பலர் குடும்பம் குடும்பமாக, குழந்தைகளோடு வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் உறுதியான மன எழுச்சி நிலவியதாகவும், இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதாகவும் ‘நீதி இல்லையேல் அமைதி இல்லை’ என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப் பட்டதாகவும் தெரிவிக்கிறார் பிபிசி செய்தியாளர் ஹீலியர் சியூங்.

உணவு, தண்ணீர், கிருமி நாசினி ஆகியவை விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, ஜார்ஜ் ஃப்ளாய்ட் பிறந்த வட கரோலினாவில் அவருக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராகவும், அதற்குக் காரணமாக இருந்தது எனக் கருதப்படும் இனவெறிக்கு எதிராகவும் நடக்கும் போராட்டம் அமெரிக்க எல்லையைக் கடந்து பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.

பிரிட்டனில்….

‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (கருப்பின உயிர்களுக்கும் மதிப்புண்டு) என்ற பெயரில் நடக்கும் கருப்பின உரிமை இயக்கத்துக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் தொற்றை தீவிரமாக்கும் என்ற அச்சத்தில் மக்கள் ஒன்றுகூடவேண்டாம் என்று அரசாங்கம் விடுத்த வேண்டுகோளையும் மீறி இந்தப் போராட்டம் நடந்தது.

ஆஸ்திரேலியாவில்…

ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய பெருநகரங்களில் நடந்த போராட்டங்களில் ஆஸ்திரேலியாவின் தொல்குடிகள் நடத்தப்படும் விதம் குறித்த விமர்சனங்கள் எதிரொலித்தன.

யார் இந்த ஃப்ளாய்ட்?

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் 25-ம் தேதி ஆயுதம் ஏதும் வைத்திராத கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆண் போலீஸ் காவலில் இறந்தார். ஃப்ளாய்ட் இறந்த பிறகு, வெள்ளையினத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி டெரக் சாவின் என்பவர் கீழே தள்ளப்பட்ட ஃப்ளாயிட் கழுத்தில் முட்டிபோட்டு கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் அழுத்துவதைக் காட்டும் வீடியோ வெளியானது.

சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் அங்கிருந்த வேறு மூன்று போலீஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலைக்கு உதவியதாகவும், தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு: கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடு, எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள்

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

விரிவாக படிக்க: கொந்தகை அகழாய்வில் எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

தென்னிந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வட இந்தியர்கள் தேவை என கொரோனா ஊரடங்கு உணர்த்துகிறதா?

கொரோனா வைரஸ் முடக்கநிலை அறிவிக்கப்பட்டபின் பிற மாநிலங்களில் நடந்ததைப் போலவே கர்நாடக மாநிலத்தில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்களும் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முயன்றனர்.

பலர் நடந்து சென்றார்கள். மற்றவர்கள் தங்களால் ஆன எல்லா வழிகளிலும் முயன்றார்கள்.

அவர்கள் ஊர் திரும்புவதற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கர்நாடக அரசும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. சில ரயில்களும் அதற்காக ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனால், எந்த ரயிலும் கர்நாடகாவை விட்டுக் கிளம்பாது என்று மே மாதத் தொடக்கத்தில் கர்நாடக அரசு அறிவித்தது.

விரிவாக படிக்க: தென்னிந்தியா வளர வட இந்தியர்கள் தேவை என கொரோனா காலம் உணர்த்துகிறதா?

கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், ஒருவேளை தங்களது தடுப்பூசி கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்த கூடியது என்று தெரியவந்தால் உடனடியாக ஏற்படும் தேவையை எதிர்கொள்ளும் பொருட்டே தற்போது அந்த தடுப்பூசிக்கான உற்பத்தியை தொடங்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் கூறுகிறார்.

விரிவாக படிக்க: கொரோனாவுக்கு 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

கொரோனா வைரஸ் எதிரொலி: எதிர்காலத்தில் பயணம் என்பது எப்படி இருக்கும்?

ஷாம்சுதீன் கடந்த 40 வருடங்களாக சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இவர் சுற்றிக் காண்பித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில், சுற்றுலாத் துறையே முற்றிலும் மாற்றம் காணலாம் என ஷாம்சுதின் நம்புகிறார்.

பொது முடக்கம் நீக்கப்பட்டாலும் வரும் காலங்களில் சுற்றுலாத்துறை முன்பு இருந்தது போல இருக்காது என அவர் கூறுகிறார். மக்கள் சுற்றுலா சென்றாலும் குழுவாகச் செல்லாமல் தனித்தனியாகவே செல்வார்கள் என்கிறார் அவர்.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் எதிரொலி: எதிர்காலத்தில் பயணம் என்பது எப்படி இருக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »