ஆஃப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் 12 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
ஜிம்பாப்வேயில் உள்ள ஹவாங்கே தேசியப் பூங்காவில் நிகழ்ந்துள்ள இந்த மரணங்கள் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த 12 யானைகளின் உடல்களிலும் தந்தம் துண்டிக்கப்படாமல் இருந்தது.
வேட்டையாடப்படும் யானைகளை துப்பாக்கியால் சுடுவதற்கு பதிலாக சயனைடு பயன்படுத்தி விஷம் வைத்துக் கொல்லப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.
ஆனால் வேறு எந்த காட்டு உயிரினங்கள் உயிரிழக்காததால், சயனைடு வைத்து யானைகள் கொல்லப்படுவதாக தாங்கள் கருதவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானைகளின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஹவாங்கே தேசியப் பூங்கா போட்ஸ்வானா உடனான எல்லையில் அமைந்துள்ளது.
போட்ஸ்வானா யானைகள் மரணம்
போட்ஸ்வானாவில் நூற்றுக்கணக்கான யானைகளின் உடல்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் உள்ள ஒகவாங்கோ டெல்டா பகுதியில் 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்தது.
நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் எனவும் அப்போது சந்தேகிக்கப்பட்டது.
முகம் மண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை, உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்று காட்டுகிறது என பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்த கடாக்டர் நியால் மெக்கேன் பிபிசியிடம் அப்போது தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com