ஆஸ்திரேலியாவில் பூட்டியிருந்த தனது வீட்டின் உள்ளே நுழைந்த நபர், தனது வீட்டுக்குள் இரு மலைப் பாம்புகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் பாம்புகள் இரண்டும் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்துள்ளன.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசிக்கும் டேவிட் டேட் என்னும் அந்நபர், கடந்த திங்களன்று வீட்டுக்குள் நுழைந்தபோது படுக்கை அறையில் ஒரு பாம்பும், வரவேற்பு அறையில் ஒரு பாம்பும் நெளிந்து கொண்டிருந்தது.
அந்த ‘கார்பெட் பைத்தான்’ வகை மலைப் பாம்புகள் இரண்டும் சுமார் 22 கிலோ எடை இருந்தன.
பாம்பு பிடிப்பதில் வல்லவரான ஸ்டீவன் ப்ரவுன், “அந்த பாம்புகள் வழக்கத்துக்கு மாறான அளவைக் காட்டிலும் பெரியதாக இருந்தன,” என்று தெரிவித்துள்ளார்.
அவற்றில் ஒன்று 2.8 மீட்டர் நீளமும், இன்னொன்று 2.5 மீட்டர் நீளமும் இருந்தன.
அந்த இரு ஆண் பாம்புகளும் பெண் பாம்பு ஒன்றுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, உள்ளே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன் தனது கூரையில் பாம்பை பார்த்திருப்பதாக கூறும் டேட், தான் வீட்டிற்கு வரும்போது தனது சமையலறையில் தனது கூறையின் பெரிய பகுதி ஒன்று உடைந்து கிடந்ததை பார்த்ததாக கூறுகிறார்.
அதன்பின் வீட்டுக்குள் சென்று பார்த்த அவர் இரண்டு மலைப் பாம்புகளை கண்டுள்ளார். அதற்கு பிறகு அவர் பாம்பு பிடிக்கும் ஸ்டீவன் ப்ரவுனை அழைத்துள்ளார்.
”நான் அவற்றை பிடிக்க விரும்பவில்லை” என்கிறார் டேட்.
பாம்பு பிடிக்கும் வல்லுநரான ப்ரவுன், இந்த இரு பாம்புகள் வழக்கத்துக்கு மாறான அளவில் இருந்ததாக தெரிவிக்கிறார்.
”பாம்புகளின் இனப்பெருக்க காலம் இப்போதுதான் தொடங்குகிறது. வெப்பநிலை அதிகரிக்கும்போது பாம்புகள் சுறுசுறுப்பாக செயல்படும்,” என்கிறார் ப்ரவுன்.
மேலும் யாரேனும் பாம்பை பார்த்தால் நகராமல் இருந்த இடத்திலேயே நின்றுவிட வேண்டும் என்று கூறும் ப்ரவுன், அமைதியாக நாம் பாம்பை செல்லவிட்டோமானால் அது நம்மை ஒன்றும் செய்யாது என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com