Press "Enter" to skip to content

150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்: அதிர வைக்கும் ரகசிய ஆவணங்கள் #பிபிசி_புலனாய்வு

உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 150 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடான பணிப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க அரசின் அதிகாரிகளுக்கு சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய வங்கிகள் 2000வது ஆண்டில் இருந்து 2017வது ஆண்டு வரை அனுப்பிய ஆவணங்களில் 2500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் எவ்வாறு நிகழ்ந்து ள்ளன என்பதை தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.

2,000 கோடி அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சுமார் 150 லட்சம் கோடி ரூபாய். அதாவது 150000000000000 ரூபாய்.

இந்த வங்கிகள் மூலம் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதால், அந்த வங்கிகளும் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக பொருளாகாது. இந்த வங்கிகள் அமெரிக்க அரசிடம் வழங்கிய ஆவணங்கள் மூலமே இந்தக் குற்றங்கள் நடந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆவணங்கள் சர்வதேச வங்கி அமைப்பு முறையின் மிகமிக ரகசியமான தகவல்களைக் கொண்டுள்ளவை.

அமெரிக்காவின் ‘பஸ்ஃபீட் நியூஸ்’ செய்தி ஊடகத்திற்கு கசிந்துள்ள இந்த ஆவணங்கள், புலனாய்வு இதழியலில் ஈடுபட்டுள்ள பிபிசி பனோரமா உள்பட 88 நாடுகளில் இயங்கும் 108, செய்தி நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

தீவிரவாதிகளுக்கு சென்ற சிறு வியாபாரிகளின் பணம், அமெரிக்காவால் தேடப்படும் முதன்மையான 10 குற்றவாளிகளுக்கு சொந்தமான பணம், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி இரான் ஏமாற்றியது, குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் என்று கூறி ஒரு கொலைக்கு காரணமான மோசடித் திட்டம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் ஃபின்சென் ஃபைல்ஸ் எனும் இந்த ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அவற்றை இந்தச் செய்திக் கட்டுரை விவரிக்கிறது.

ஃபின்சென் ஃபைல்ஸ் என்றால் என்ன?

தற்போது ஊடங்களுக்கு கசிந்துள்ள 2,657 ஆவணங்களும் ஃபின்சென் (FinCEN) ஃபைல்ஸ் எனப்படுகின்றன. இவற்றில் சுமார் 2,100 சந்தகத்துக்குரிய பரிமாற்றங்கள் குறித்த அறிக்கைகள்.

FinCEN என்பது Financial Crimes Enforcement Network என்பதன் சுருக்கம். இந்த அமைப்பு அமெரிக்க அரசின் கருவூலத்தின் குற்றத் தடுப்பு பிரிவு.

அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்களில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் அவை குறித்து வங்கிகள் உடனடியாக இந்த அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். அமெரிக்காவுக்கு வெளியே நடக்கும் பணப் பரிமாற்றங்களுக்கும் இது பொருந்தும் .

எச்எஸ்பிசி – பிரிட்டனின் மிகப்பெரிய வங்கியில் மோசடிப் பரிவர்த்தனை

150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்

உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்எஸ்பிசி வங்கி குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம் தருவதாகக் கூறி ஏமாற்றும் முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பணம் என்று தெரிந்தும் அந்த பணத்தை பரிமாற்றம் செய்ய அனுமதித்தது என்று இந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எச்எஸ்பிசி வங்கி பிரிட்டனின் மிகப்பெரிய வாங்கியாகும்.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு அமெரிக்காவிலிருந்து சுமார் 8 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 450 கோடி இந்திய ரூபாய்) பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எச்எஸ்பிசி வங்கிக்கு அமெரிக்க அரசு 1.9 பில்லியன் டாலர் அபராதம் விதித்த பின்பு மேற்கண்ட பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

இத்தகைய பரிமாற்றங்கள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவதில் தங்கள் சட்டபூர்வமான கடமையை எப்பொழுதும் தவறியதில்லை என்று எச்எஸ்பிசி வங்கி கூறுகிறது.

ஆனால் எச்எஸ்பிசி வங்கி இந்த மோசடி வங்கி கணக்குகள் குறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

WCM777 என்று அறியப்படும் இந்த மோசடித் திட்டம் மூலம் சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்கள் நிகழ்ந்திருந்தது குறித்து, எச்எஸ்பிசி வங்கி அறிந்துள்ளது என்று தற்போது வெளியாகியுள்ள ஆவணங்களின் மூலம் தெரிகிறது.

ஏப்ரல் 2014இல் இந்த பரிவர்த்தனைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தபோது, ஹாங்காங்கில் இருந்த எச்எஸ்பிசி வங்கிக் கணக்குகள் மூடப்பட்டு, அதில் இருந்த பணம் அனைத்தும் எடுக்கப்பட்டிருந்தன.

கொலைக்கு காரணமான WCM777 மோசடித் திட்டம்

150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்

அமெரிக்காவில் வசித்து வந்த சீன நாட்டவரான மிங் சூ என்பவர் 100 நாட்களில் 100 சதவிகித லாபம் அளிக்கும் வேர்ல்டு கேபிடல் மார்க்கெட் எனும் சர்வதேச முதலீட்டு வங்கியைத் தாம் நடத்துவதாகக் கூறி பிறரை இந்த முதலீட்டுத் திட்டத்தில் சேர்த்துள்ளார்.

இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த கலிஃபோர்னியாவை சேர்ந்த ரெனால்டோ பச்சேசோ எனும் முதலீட்டாளர் ஏப்ரல் 2014 திராட்சைத் தோட்டம் ஒன்றில் நீருக்கடியில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யுமாறு ரெனால்டோ சேர்த்து விட்ட ஒரு பெண் இந்த மோசடி காரணமாக 3000 அமெரிக்க டாலரை இழந்ததாகவும், அதனால் கோபமுற்ற அந்தப் பெண் பணத்துக்காகக் கொலை செய்பவர்களை பயன்படுத்தி இவரை கடத்தி கொலை செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

எஃப்.பி.ஐ தேடும் முதன்மையான 10 குற்றவாளிகளில் ஒருவர்

150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்

பன்னாட்டு வங்கியான ஜேபி மார்கன் மூலம் ரஷ்ய மாஃபியா கும்பல்களின் தலைவர்களின் தலைவராக அறியப்படும் ஒருவர் 100 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு முறைகேடாக பணப்பரிவர்த்தனை செய்துள்ளார் என்றும் இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

செமியோன் மோகிலெவிகே என்னும் அந்த நபர் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்று அமெரிக்க அரசால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏபிஎஸ்ஐ என்டர்பிரைசஸ் எனும் வெளிநாடுகளில் பணம் பதுக்க உதவும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் யாரென்றே வங்கியின் ஆவணங்களில் இல்லாத பொழுதும் 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே ஜேபி மார்கன் வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளது என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜேபி மார்கன் வங்கி சந்தேகத்திற்குரிய பரிமாற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்தது.

அதில் அந்த வங்கியின் லண்டன் கிளை மூலம் இந்த பரிவர்த்தனை நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ்ஐ என்டர்பிரைசஸ்-இன் தாய் நிறுவனம் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யால் மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஒருவரான சிமியோன் உடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய தடைகளை மீறிய ரஷ்ய பெருமுதலாளிகள்

150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்

உக்ரைனின் பிராந்தியமாக இந்த க்ரீமியா-வை 2014ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

அப்போது ரஷ்ய அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அதிபருடன் நெருக்கமாக இருந்த ரஷ்யாவின் பெருமுதலாளிகளுக்கு 2014ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசுகளால் பயணம் மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப் பட்டன. இவற்றால் இந்த தடைகளுக்கு உள்ளானவர்கள் மேற்கு நாடுகளில் பொருளாதார நடவடிக்கை எதிலும் ஈடுபட முடியாது.

அவர்களில் ஒருவர் ரஷ்யாவின் பெரும் பணக்காரரும் அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நண்பருமான ஆர்காடி ரோட்டன்பெர்க்.

ஆனால் ஆர்காடி ரோட்டன்பெர்க்கின் நிறுவனங்கள் பார்க்லேஸ் வங்கியில் ரகசிய வங்கி கணக்கு வைத்து இருந்தது ஃபின்சென் ஃபைல்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.

2008ஆம் ஆண்டு பார்க்லேஸ் வங்கியில் அட்வான்டேஜ் அலையன்ஸ் எனும் நிறுவனம் வங்கி கணக்கு ஒன்றை தொடங்கியது.

இந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி விலை உயர்ந்த கலைப்பொருட்களை ரோட்டன்பெர்க் சகோதரர்கள் வாங்கியுள்ளதாக அமெரிக்க செனட் சபை குற்றம்சாட்டியது.

இந்த வங்கி கணக்குகள் மூலம் 2012 மற்றும் 2016 ஆண்டு ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 60 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்

ஏப்ரல் 2016இல் இந்த கணக்குகள் ரோட்டன்பெர்க் சகோதரர்களுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என்று பார்க்லேஸ் வங்கி உள்ளக விசாரணை ஒன்றைத் தொடங்கியது.

அதன்பின்பு அந்த வங்கி கணக்குகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிமாற்றம் நடப்பதாக கவலைகள் எழுந்ததால் ஆறு மாதம் கழித்து அந்த வங்கி கணக்கில் மூடப்பட்டன.

ஆனாலும் ரோட்டன்பெர்க் சகோதரர்களுடன் தொடர்பில் இருந்த வேறு வங்கி கணக்குகள் பார்க்லேஸ் வங்கியில் 2017 ஆண்டு வரையில் இயக்கத்தில் இருந்தன என்று ஃபின்சென் ஃபைல்ஸ் மூலம் தெரியவருகிறது.

பார்க்லேஸ் வங்கியில் தாங்கள் எத்தனை வங்கி கணக்குகள் வைத்திருந்தார்கள் என்பது குறித்த பிபிசி பனோரமாவின் கேள்விகளுக்கு ரோட்டன்பெர்க் சகோதரர்கள் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவை ஏமாற்ற இரான் பரிவர்த்தனை

150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்

துபையில் இருந்து இயங்கும் கியூன்ஸ் ஜெனரல் டிரேடிங் எனும் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைப்பு மூலம் 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் 14.2 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு சந்தேகத்துக்குரிய பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது என்று இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

1979 – 1981 காலகட்டத்தில் அமெரிக்கா இரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

அதன் பின்பு அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்களும் அணு ஆயுத எரிபொருள் செறிவூட்டல் உள்ளிட்ட காரணங்களை காட்டி இரான் மீது தொடர்ந்து பொருளாதார மற்றும் பிற தடைகளை விதித்து வந்தன.

இதன் காரணமாக இரான் அரசால் அமெரிக்க டாலர்களில் சர்வதேச அளவிலான பொருளாதார பரிவர்த்தனைகள் ஈடுபடமுடியாது.

இதனால் இரான் அரசு மற்றும் அமெரிக்க அரசால் தடை செய்து வைக்கப்பட்டுள்ள பிற அமைப்புகள் சார்பாக கியூன்ஸ் ஜெனரல் டிரேடிங் நிறுவனம் முறைகேடான பண பரிவர்த்தனைகள் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இது துருக்கிய-இரானிய தங்க வர்த்தகரான ரேசா சாராப் என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் என்று அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்த கேள்விகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி பதிலளிக்க மறுத்துவிட்டது.

தீவிரவாதிகளுக்கு சென்ற வியாபாரிகளின் பணம்

ஜெர்மனியின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான டச் பேங்க் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவர்கள், போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்பவர்கள் ஆகியோருக்கு முறைகேடாகப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்று ஃபின்சென் ஃபைல்ஸ் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சிறு நிறுவனங்களின் வியாபாரக் கணக்குகளை நிர்வகித்து வந்தவர்கள் அவர்களின் பணத்தை முறைகேடாக திருடி குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு கொடுத்துள்ளனர்.

இந்த வகையில் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு டச் பேங்க் வங்கியிலிருந்து முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி மூலமும் முறைகேடான பரிவர்த்தனை நிகழ்ந்து அந்தப் பணம் தீவிரவாதக் குழுக்களுக்கு சென்றுள்ளது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

17 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:14 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »