Press "Enter" to skip to content

அமேசானின் `தங்க நதிகள்` – நாசா வெளியிட்ட அரிய புகைப்படங்கள்

நாசா வெளியிட்ட அருமையான அழகான படம், பெரு நாட்டில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளில் எவ்வளவு தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன என்பதைக் காட்டி இருக்கிறது. இதில் பெரும்பாலான சுரங்கங்கள், சட்ட விரோதமாக நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் தங்க நிறத்தில் நதி போல காட்சியளிப்பது உண்மையில் நதியல்ல. அது தங்கச் சுரங்கப் பணிகளுக்காக முறையாக தங்கத்தைத் எடுக்க உரிமம் பெறாதவர்கள் தோண்டி வைத்திருக்கும் குழிகள் என இந்த விண்வெளி முகமை கூறியுள்ளது.

பொதுவாக இந்தக் குழிகளை பார்வைக்குக் காட்டமாட்டார்கள். சூரிய ஒளி பட்டு எதிரொலிப்பதால் இப்படி ஜொலிக்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஒரு விண்வெளி வீரர், கடந்த டிசம்பர் 2020-ல் இந்த அரிய புகைப்படத்தை எடுத்தார்.

பெரு நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் இருக்கும் மட்ரே டி டாய்ஸ் என்கிற பகுதியில் எவ்வளவு மோசமாக, இந்த தங்கச் சுரங்கப் பணிகள் நடக்கின்றன என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் இந்தப் படம்.

தங்க ஏற்றுமதியில் முக்கிய பங்கு

உலக அளவில் தங்கத்தை ஏற்றுமதி செய்யக் கூடிய முக்கிய நாடுகளில் பெரு நாட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட பெருவில், மட்ரே டி டாய்ஸ் பகுதியில் ஆயிரக் கணக்கான, முறையாக அனுமதி பெறாத சுரங்கப் பணியாளர்கள், தங்கத்தை எடுப்பதன் மூலம் தங்கள் வாழ்கையை நடத்த முயற்சிக்கிறார்கள்.

இந்த பகுதி பல்லுயிர்ப் பெருக்கம் கொண்ட முக்கியப் பகுதி. இந்த பகுதியில் தங்கச் சுரங்கப் பணிகளை அதிகமாக மேற்கொள்வதால் அளவுக்கு அதிகமாக காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆகையால் பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிந்து வருகின்றன.

டன் கணக்கில் பாதரசத்தைப் பயன்படுத்தி தங்கத்தை எடுப்பதால், அங்கு வாழும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தங்கத்தை எடுக்கப் பயன்படுத்தும் பாதரசத்தில் கணிசமான அளவை நதியில் அல்லது சுற்றுப் புறத்தில் கலக்கவிட்டிருக்கிறார்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தங்கத்தை தேடுவதற்காக வெட்டப்படும் குழிகள்

தங்கத்தைத் தேட நூற்றுக் கணக்கான குழிகளைத் தோண்டி இருக்கிறார்கள். அக்குழிகளைச் சுற்றியிலும் சேற்றை கரை போல வைத்திருக்கிறார்கள். இந்த இடங்களில் இருக்கும் செடி கொடிகளை எல்லாம் நீக்கிவிட்டுத் தான் தங்கத்தைத் தேட குழி தோண்டுகிறார்கள் என நாசா விவரிக்கிறது.

முன்பு ஒரு காலத்தில் ஆறு ஓடிய தளங்களின் படிமங்கள், கனிமங்கள் படிந்திருக்கும் இடங்களைத் தான் தங்கத்தைத் தேடுபவர்கள் பின் தொடர்ந்து செல்கிறார்கள்.

குரங்குகள், ஜாகுவார் என்றழைக்கப்படும் ஒரு வகைப் புலிகள், பட்டுப் பூச்சிகள் போன்ற உயிரினங்களுக்கு இப்பகுதி வாழ்விடமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் தங்கச் சுரங்கப் பணிகள் அதிகரிப்பதால் அதிகம் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த புகைப்படங்கள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை.

`மானிட்டரிங் ஆஃப் தி ஆண்டியன் அமேசான் ப்ராஜெக்ட்` என்கிற குழுவின் கணிப்புப் படி, கடந்த ஜனவரி 2019-ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், 2018-ம் ஆண்டில் மட்டும் பெரு நாட்டில் 22,930 ஏக்கர் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கணக்குப் படி, பெருவின் லஷ் பகுதியில், 30,000 சிறிய அளவில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளும் குழுவினர் செயல்படுவதாகக் கணக்கிடப்பட்டது.

பெருவின் மற்றொரு பகுதியான லா பாம்பாவில், கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்துக்குப் அதிக அளவில் தங்கச் சுரங்கப் பணிகள் நடந்தன. அதை பெரு அரசு கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தியது.

பெரு ஒரு லத்தின் அமெரிக்க நாடு. இதன் தலைநகர் லிமா. மேலும் பெரு 29.7 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடாக உள்ளது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »