உலகிலேயே அதிகபட்சமாக ஐந்து லட்சம் கொரோனா உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கிறது அமெரிக்கா. அதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
“ஒரு நாடாக நம்மால் இந்த கொடூரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த துக்கத்துக்கு நாம் உணர்ச்சியற்றவர்களாக இருப்பதைத் தடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர், தங்களின் குடும்பத்தினரோடு, வெள்ளை மாளிகைக்கு வெளியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஒரு சில நிமிடங்கள் மெளன அஞ்சலியும் செலுத்தினர்.
அமெரிக்காவில் 2.81 கோடி பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடும் அமெரிக்காதான்.
“நாம் இழந்தவர்களையும், நம்மால் பின்தங்க விடப்பட்டவர்களையும் நினைவுகூருமாறு அமெரிக்கர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என ஜோ பைடன் கூறினார்.
பைடன் இதை எப்படிக் பார்க்கிறார்?
அமெரிக்க அரசுக்குச் சொந்தமான வளாகங்கள் மற்றும் கட்டடங்களில் பறக்கும் அமெரிக்க கொடிகளை, அடுத்த ஐந்து நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அதிபர் பைடன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் ஆகிய மூன்றிலும் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த அமெரிக்கர்களை விட, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என வெள்ளை மாளிகையில் தன் உரையைத் தொடங்கினார் பைடன்.
“இன்று நாம் உண்மையிலேயே நம் இதயத்தை நொறுக்கும் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறோம். 5,00,071 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்” என்றார் பைடன்.
கடந்த 2021 ஜனவரி 19 அன்றைய நிலவரப்படி, 4,00,000 அமெரிக்கர்கள் கொரோனாவால் இறந்திருந்தார்கள். அதாவது பைடன் அதிபராக பதவியேற்றுக் கொள்வதற்கு ஒரு நாளுக்கு முந்தைய நிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com