Press "Enter" to skip to content

கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை – அதிர்ச்சியில் அமெரிக்கா

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் போது வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னுடனான அவரது சந்திப்பு மிகவும் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வாகும்.

டிம் ஸ்டெர்ஜேக்கர் இயக்கிய பிபிசியின் ‘டிரம்ப் டேக்ஸ் ஆன் தி வேர்ல்ட்’ தொடரின் மூன்றாவது பகுதி, டிரம்பிற்கும் கிம்மிற்கும் இடையே இந்த சந்திப்புகள் எவ்வாறு நடந்தன என்பதை நமக்குக் காட்டியது. இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது உடன் இருந்தவர்களுடன் நாங்கள் பேசினோம்.

இந்த சந்திப்புகளின் போது புகழ்பெற்ற ராஜீய அதிகாரிகள் கூட அதிர்ச்சியடைந்த ஒரு கணம் இருந்தது.

டிரம்ப், கிம் ஜாங்-உன்னிடம் ‘வாருங்கள், என் விமானத்தில் (ஏர்ஃபோர்ஸ் ஒன்) உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன்’ என்று சொன்னபோது அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை.

டிரம்புடன் கிங் ஜாங்-உன்னின் இரண்டாவது உச்சி மாநாடு வியட்நாமின் தலைநகரான ஹனோய் நகரில் நடந்தது. ஆனால் சந்திப்பு வெற்றி பெறவில்லை. வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தை நிறுத்துவதற்காக நடந்த பேச்சுவார்த்தை முறிந்தவுடன் டிரம்ப் திடீரென எழுந்து வெளியேறினார். “சில நேரங்களில் நாம் தொடர்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஆனால் புறப்படுவதற்கு முன் முன்னாள் அமெரிக்க அதிபர், மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு வாய்ப்பை கிம்மிற்கு வழங்கினார்.

கிம் டிரம்ப்

டிரம்ப் சலுகையை நிராகரித்த கிம்

“அதிபர் டிரம்ப் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் (அமெரிக்க அதிபரின் விமானம்) கிம்மை வீட்டில் விட்டுவதாக கூறினார். கிம் ஜாங் உன், பல நாட்கள் தொடர் வண்டிபயணத்திற்குப்பிறகு ஹனோய் வந்திருப்பதை டிரம்ப் அறிந்திருந்தார் . முதலில் கிம் , தொடர் வண்டியில் சீனாவை அடைந்தார்.

பின்னர் அங்கிருந்து தொடர் வண்டியில் வியட்நாமின் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். டிரம்ப் , கிம் ஜாங் உன்னிடம் நேரடியாகக் கேட்டார், “நீங்கள் விரும்பினால், நான் உங்களை இரண்டு மணிநேரத்தில் உங்கள் வீட்டில் விடமுடியும்,” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஆசிய விவகாரங்கள் குறித்த டிரம்பின் உயர்மட்ட நிபுணர் மேத்யூ போட்டிங்கர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் கிம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

கிம் டிரம்ப்

கிம் ஜாங்-உன்னுக்கும் டிரம்பிற்கும் இடையிலான நட்பு வித்தியாசமானது. இருவருக்கும் இடையில் நடந்த பல விஷயங்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் கிம்மை வீட்டில் விட்டுவிடுவதாக டிரம்ப் கூறியது அத்தகைய ஒரு சம்பவம். இருவருக்கும் இடையே இதுபோன்ற நிகழ்வுகளின் துவக்கம் சிங்கப்பூரில் தொடங்கியது.

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இது குறித்து எங்களிடம் கூறினார். ” ஒரு நல்ல நண்பர் தமக்கு கிடைத்ததாக டிரம்ப் நினைத்துக் கொண்டிருந்தார். சிங்கப்பூரில், டிரம்பின் ஒரு செயல் மீண்டும் அவரது அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிம்மின் வேண்டுகோளுக்கு இணங்க ,தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டுப் ராணுவ பயிற்சிகளை நிறுத்த அவர் ஒப்புக்கொண்டார், “என்று தெரிவித்தார்.

கிம் டிரம்ப்

“இந்த மாபெரும் கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து கிம் ஜாங் பல முறை புகார் செய்திருந்தார். ஏனெனில் இது கொரிய தீபகற்பத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது,” என்று போல்டன் கூறினார்.

“ஆனால் இந்த ராணுவப்பயிற்சியை ரத்து செய்துவிடுவதாக ட்ரம்ப் ஒரே கணத்தில் முடிவுசெய்து கூறியது எனக்கு அதிர்ச்சி அளித்தது. பயிற்சிக்கு மிகவும் செலவாகிறது அதை ரத்தானால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை,” என்று போல்டன் கூறினார்.

“நான் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ தளபதி ஜான் கெல்லி மற்றும் டிரம்ப் ஆகியோருடன் ஒரே அறையில் அமர்ந்திருந்தேன். ஆனால் டிரம்ப் எங்களில் யாரிடமும் இதுபற்றி பேசவில்லை. எங்களுடன் ஆலோசனை கலக்காமல் தன் மனதிற்கு தோன்றியதை ட்ரம்ப் கூறிவிட்டார். இது எந்த நெருக்குதலும் இல்லாமல் நடந்த ஒரு தவறு. எங்களுக்கு பயனளிக்காத ஒரு விலக்கை வட கொரியாவுக்கு வழங்கினோம்,” என்று போல்டன் மேலும் குறிப்பிட்டார்.

கிம்மிற்கு டிரம்பின் ரகசிய செய்தி

உண்மை என்னவென்றால், டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன்னின் இந்த சந்திப்பு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்புதான் கிம் ஒரு ‘ராக்கெட் மனிதர்’ என்று கூறி வட கொரியாவை அழிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒரு சந்திப்பின் போது ட்ரம்பின் ரகசிய செய்தியை தான் கிம் ஜாங்கிடம் கொண்டுசேர்த்ததாக,ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி ஜெஃப் ஃபெல்ட்மேன் கூறினார்.

ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான துணை பொது செயலாளராக இருந்த ஃபெல்ட்மேன் , வட கொரியாவால் பியோங்யாங்கிற்கு (தலைநகரம்) வரவழைக்கப்பட்டார். ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அவரிடம் அங்கு செல்வது சரியல்ல என்று கூறியது. இருப்பினும் சில வாரங்களுக்குப் பிறகு, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வந்தார்.

” அந்த நாட்களில் அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய குறிப்புகளை அங்கு கூடியிருந்த மக்கள் பறிமாறிக்கொண்டிருந்தனர். அத்தகைய சூழ்நிலையில் என்ன நடக்கக்கூடும் என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் எவ்வளவு ஆபத்தானவை, ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் என்ன நடக்கும் இதுபோன்ற விஷயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் பரபரப்பாக இருந்தன. இந்த நேரத்தில், ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரெஸ் ட்ரம்பிடம், ஜெஃப் ஃபெல்ட்மேனுக்கு ஒரு விசித்திரமான அழைப்பு வந்ததாகவும், அவர் வட கொரியா சென்று அங்குள்ள தலைவர்களுடன் கொள்கை விஷயங்கள் குறித்த பேச்சுக்களை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,” என்று ஃபெல்ட்மேன் எங்களிடம் கூறினார்.

டிரம்ப் அவரை நோக்கிச் சென்று, “ஜெஃப் ஃபெல்ட்மேன் பியோங்யாங்கிற்குச் சென்று கிம் ஜாங்-உன்னுடன் உட்கார்ந்து பேச நான் தயாராக இருக்கிறேன் என்று அவரிடம் சொல்ல வேண்டும்” என்றார்.

ஃபெல்ட்மேனுக்கு கிடைத்தது வெற்று பதில்

ஃபெல்ட்மேன் பியோங்யாங்கிற்கு வந்தபோது, வட கொரிய அரசு பிரதிநிதிகளிடம் நிலைமையின் தீவிரத்தை கூறினார்.

“நான் அவர்களுக்கு கொடுக்க முயற்சித்த ஒரு பெரிய செய்தி என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து அணு ஆயுத பாதுகாப்பின் தேவையை வலியுறுத்துகிறீர்கள். எங்களுக்கு அது தேவை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் சண்டையை தூண்டக்கூடும். நீங்கள் அதை எதிர்கொள்ள தயார் செய்துகொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அணு ஆயுத பாதுகாப்பை உருவாக்குகிறோம் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் அது சண்டையை ஏற்கனவே தூண்டியிருக்கும் என்று தெரிவித்தேன், “என்று ஃபெல்ட்மேன் எங்களிடம் கூறினார்.

ட்ரம்பின் ரகசிய செய்தியை கிம்முக்கு அளிப்பதற்காக, ஃபெல்ட்மேன் வட கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஒரு சந்திப்பை நடத்த விரும்பினார்.

“வெளியுறவு அமைச்சரை சந்திப்பதற்கு முன்பு முழுமையான அமைதி நிலவியது. பின்னர் அவர், பாருங்கள், நான் உங்களை நம்பவில்லை, நான் ஏன் உங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் ? என்றார்.

ஆனால் நான், ” என்னை நம்புங்கள் என்று நான் உங்களிடம் சொல்லவில்லை. ஐ.நா.வை நம்பி உங்களுக்கு ஒரு செய்தியை வழங்க அதிபர் டிரம்ப் ஒரு பணியை ஒப்படைத்துள்ளார் என்று நான் கூற விரும்புகிறேன். இந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்க நான் வந்தேன்,” என்று கூறியதாக ஃபெல்ட் மேன் எங்களிடம் தெரிவித்தார்.

“போர் இப்போது உறுதியாகிவிட்டது என்ற ஆழ்ந்த கவலையுடன் நான் பியோங்யாங்கை அடைந்தேன். ஆனால் திடீர் போரின் அபாயத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம் என்ற பயத்தோடு நான் அங்கிருந்து கிளம்பினேன்,” என்று ஃபெல்ட்மேன் மேலும் தெரிவித்தார்.

ட்ரம்பின் செயலால் அதிர்ச்சியடைந்த தென் கொரிய தூதர்

டிரம்பின் செய்திக்கு கிம் உடனடியாக பதிலளிக்கவில்லை. பல மாதங்கள் கழித்து, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க தான் தயாராக இருப்பதாக தென் கொரியாவிடம் அவர் தெரிவித்தார். தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்த செய்தியுடன் வெள்ளை மாளிகைக்கு ஓடினார்.

அந்த தருணங்களை நினைவு கூர்ந்தார், அந்த நேரத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எச்.ஆர். மெக்ஆசிரியர். “ட்ரம்ப் சந்திப்பிற்கு சம்மதித்தார். இதைக் கேட்ட தென் கொரியாவின் தூதர் தனது நாற்காலியில் இருந்து விழுந்துவிடுவார் போல இருந்தது. கிம் ஜாங் தனது கருத்தை முழு பலத்துடன் சம்மதிக்கவைக்க முயற்சிப்பார் என்று அவர் புரிந்து கொண்டார்.

வெள்ளை மாளிகையில் வேறு சிலரைப்போலவே மெக்மாஸ்டரின் மனதிலும் கிம் ஜாங்குடனான சந்திப்பு குறித்து ஆழ்ந்த அச்சம் இருந்தது. ஆனால் இதற்கிடையில், வெளியுறவுக் கொள்கையின் அனைத்து தந்திரங்களையும் கையாண்டபிறகும் இந்த விஷயத்தில் டிரம்ப் தனது சொந்த வழியில் செல்ல விரும்பினார்.

“கிம் ஜாங்கை இன்னும் சில நாட்களுக்கு அழுத்தத்தை உணர ச்செய்யவேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் கிம் ஜாங் சந்திப்பிற்கு சம்மதம் தெரிவித்தவுடன் அவருடன் பேசுவதற்கான பேராசையை அதிபர் ட்ரம்பால் அடக்கமுடியவில்லை,” என்று மெக்ஆசிரியர் குறிப்பிட்டார்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »