Press "Enter" to skip to content

மியான்மர் ராணுவ ஆட்சி: இதுவரை 400க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ராணுவம் – வலுக்கும் எதிர்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

மியான்மரில் நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக 90 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலகளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கவனத்தை மியான்மர் மீது திருப்பியுள்ளது. இதுவரை 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை “பயங்கரவாதத்தின் ஆட்சி” என்று சனிக்கிழமை நடந்த சம்பவங்களை குறிப்பிட்டுள்ளது. மியான்மரில் கடந்த மாதம் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ராணுவ தலைவர் மின் ஆங்ஹிலையங் மற்றும் அவரின் ராணுவ ஜெனரல்கள், ஆயுதப் படை தினத்தை முன்னிட்டு ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை பல இறுதி ஊர்வலங்கள் நடந்துள்ளன. சில இறுதி ஊர்வலங்களில் ராணுவம் தலையிட முற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தலில் ஆங் சாங் சூச்சியின் என்.எல்.டி கட்சியின் அபார வெற்றிக்குப் பின், நாட்டை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

சர்வதேச எதிர்வினைகள்

ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட டஜன் கணக்கான நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இணைந்து, மியான்மரின் ராணுவம் செய்துவரும் அத்துமீறல்களை கண்டித்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

“ராணுவம் என்பது, சர்வதேச தரத்திலான ஒழுக்கத்தை பின்பற்றக்கூடியது. அது மக்களை பாதுகாக்க வேண்டுமே தவிர துன்புறுத்தக்கூடாது“ என்று குறிப்பிட்டுள்ள அந்த கூட்டு அறிக்கையில், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டிருந்தன.

மரணங்களைப் பார்த்து, ”அதிர்ச்சியில்” உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ராணுவத்தின் மீது குற்றம் சாட்டிய அமெரிக்க உள்துறைச் செயலாளரான ஆண்டனி பிலிங்கென், ”சிலரின் சேவைக்காக மக்களின் உயிர் தியாகம் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

ஐ.நா சபையின் பொதுசெயலாளரான ஆண்டானியோ கட்டர்ஸ், “வன்முறைகளைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக” தெரிவித்தார்.

பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரான டாமினிக் ராப், மியான்மர் ராணுவத்தின் செயல், “தரம் தாழ்ந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான டாம் ஆண்ட்ரூஸ், அவசர சர்வதேச கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவும், ரஷ்யாவும் மியான்மர் குறித்து எந்த விமர்சனத்தையும் எழுப்பவில்லை. அப்படியென்றால், ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தால், அதில் இந்த இரு நாடுகளும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று வாக்களிக்க இடம் உள்ளது என்பது, சூழலை சற்றே கடினமாக்குகிறது.

சமீபத்திய தகவல்கள்

சனிக்கிழமை போராட்டத்தில் இறந்தவர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை அவர்களின் குடும்பத்தினரால் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மண்டலேவில் சுடப்பட்ட கியாவ் வின் மாங்கின் இரங்கல் நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.

அதேபோல, நான்கு குழந்தைகளின் தந்தையான அயீ கோவின் இரங்கல் நிகழ்ச்சியும் நடந்தது.

“அயீ கோ சுடப்பட்டு, நெருப்பில் தூக்கிப் போடப்பட்டதாக அருகாமையில் உள்ளவர்கள் கூறினார்கள். அவர்கள் வீட்டில், பணம் ஈட்டி வந்த ஒரே ஆள் அவர்தான். அவரை இழந்தது இந்த குடும்பத்திற்கு பேரிழப்பு” என்று அவரின் உறவினர் ஏ.ஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் இருந்து வரும் சில தகவல்களை உறுதி செய்ய கடினமாக உள்ளன. ஆனால், உள்ளூர் ஊடகங்கள், இரங்கல் நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப்படைகள் தலையிடப்பார்த்ததாக செய்திகள் வெளியிடுகின்றன. பர்மா மொழியில் வெளியாகும் தி இர்ராவட்டி, போராட்டத்தில் கொல்லப்பட்ட மாணவர்கள் அமைப்புத்தலைவரின் இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலரை, ராணுவம் கைது செய்ய முயன்றதாக கூறுகிறது.

சனிக்கிழமை நடந்த பெரும் போரட்டத்திற்கு பிறகும், கத்தா மற்றும் சிபாவ் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மியான்மர் ராணுவத்தின் பதில்

மியான்மர்: போராட்டங்களுக்கு இடையே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஜெனரல்கள்

பட மூலாதாரம், EPA

போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து ராணுவம் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

ராணுவ தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு ராணுவம் பேரணி நடத்தியது. அப்போது பேசிய ராணுவத் தலைவரான மின் ஆங் லியங் ‘நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்’ என்றார், ‘ வன்முறைகள் நடத்தப்படுவதை’ கண்டித்து பேசினார்.

இந்த பேச்சை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம், லாவோஸ், ரஷ்யா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த பிரதிநிதிகள் கேட்டனர்.

நாட்டின் தலைநகரில், அன்று மாலை மிகவும் ஆடம்பரமான விருந்து நடைபெற்றது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் வந்துள்ளன.

சனிக்கிழமை என்ன நடந்தது?

ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் அமைதிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த வேளையில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், போராட்டம் வன்முறையாக மாறியது.

ரங்கூன் நகரில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால், பல மரணங்கள் வடக்கில் கச்சின் பகுதி முதல் தெற்கில் தனிந்தர்தர்யீ பகுதி வரை பதிவாகின.

90 பேருக்கும் மேல் இறந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான அமைப்பான ஏஏபிபி தெரிவித்துள்ளது. உள்ளூர் ஊடகமான மியான்மர் நவ், 114 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதே நேரத்தில், ஐ.நா சபை, பலர் இறந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பர்மாவின் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர், “எந்த எல்லையும் இல்லாமல், எந்த நியாயமும் இல்லாமல்” இராணுவம் நடந்துகொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“இது ஒரு போராட்டம் அல்ல. இது ஒரு படுகொலை சம்பவம்.” என்று கியாவ் வின் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர்

மோயி மைண்ட், பிபிசி பர்மீஸ் சேவை

ராணுவம் தங்களின் தெருவிற்கு நுழைவதைக்கேட்டு, வேகமாக எல்லா ஜன்னல்களையும் மூடுவதற்காக 14 வயதாகும் பான் ஏபியூ சென்றுள்ளார். ஆனால், அவர் அவ்வளவு வேகமாக சென்றுவிடவில்லை. காரணம், அடுத்த சில நிமிடங்களில் குண்டு பாய்ந்த தனது சகோதரியின் உடலை அவர் கையில் ஏந்தி இருந்தார்.

“அவள் சரிந்து விழுவதைப் பார்த்தேன். முதலில், தடுக்கி விழுந்துவிட்டாள் என்றே நினைத்தேன். ஆனால், அவளின் மார்பிலிருந்து ரத்தம் வெளியேறியது.” என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு கணக்கும் இல்லாமல், துப்பாக்கிசூடு நடந்ததே பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கையில் போருக்கான ஆயுதங்களுடன் வந்த வீரர்கள், வீதியில் யாரைப் பார்த்தாலும் சுட்டுவிடலாம் என்பதுபோலவே தெரிந்தார்கள். இந்த முறை அவர்கள் நடந்துகொண்ட கொடூரமான முறை என்பது, ஆட்சிக் கவிழ்ப்பு தொடங்கியபோது இருந்ததைவிட மிகவும் மோசமாக இருந்தது.

ராணுவம் – போராட்டக்காரர்கள் என யாருமே பின் வாங்குவதாக இல்லை. நாட்டில் “நிலையான தன்மை மற்றும் பாதுகாப்பு” ஆகியவற்றை மக்களை பயமுறுத்துவதன் மூலம் அடைந்துவிடலாம் என்று ராணுவம் நினைக்கிறது. ஆனால், வீதியில் இறங்கி போராடும் கூட்டம், இளைஞர்களாக வழிநடத்தப்படுகிறது. அவர்கள் ராணுவத்தின் ஆட்சியே இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதில் முடிவாக இருக்கிறார்கள்.

இறந்தவர்களின் உடல்களை எண்ணுவது மிகவும் வருத்தமளிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை மனதில் வலி ஏற்படுத்துகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »