பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் நோக்கிலும் சர்வதேச பொருளாதாரத்தின் மீதுள்ள அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கிலும், ஆகஸ்டு மாதம் முதல் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதிகபட்ச விலையை கச்சா எண்ணெய் எட்டியுள்ள சூழலில் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் ரஷ்யா ஆகியவை இந்த முடிவை எட்டியுள்ளன.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் கல்லெண்ணெய், டீசல், எரிவாயு ஆகியவையின் விலையும் உலகெங்கும் அதிகரித்தன. உற்பத்தி அதிகரித்து கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இவற்றின் விலையும் குறைய வாய்ப்புண்டு.
ஆனால், கல்லெண்ணெய், டீசல் உள்ளிட்டவற்றின் கொள்முதல் விலை எந்த அளவு குறைகிறதோ, அதே அளவுக்கு வரியை அந்தந்த நாடுகளின் அரசுகள் அதிகரித்தால், கச்சா எண்ணெய் விலை குறைவதன் பலனை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியாது. எனினும், மக்களிடம் இருந்து பெறப்படும் கூடுதல் வரியால் அரசுக்கு வருமானம் அதிகமாகும்.
இந்த ஆண்டு ‘ப்ரெண்ட்’ கச்சா எண்ணெயின் விலை 43% அதிகரித்து பேரல் ஒன்று 74 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று முடக்கநிலை காரணமாக கச்சா எண்ணைக்கான தேவை குறைந்ததால் உண்டான விலை குறைவால், ஒபெக் மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் நாளொன்றுக்கு ஒரு கோடி பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க கடந்த ஆண்டு முடிவு செய்தன.
ஆனால், பொருளாதார நடவடிக்கைகள் இந்த ஆண்டு மீண்டும் உலகெங்கும் தொடங்கப்பட்டதால், கச்சா எண்ணெய் குறைந்த அளவே கிடைப்பது பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரிக்க வழிவகுத்தது.
இதன் காரணமாக போக்குவரத்துச் செலவு அதிகமானதால் நாடுகள் பலவற்றிலும் விலைவாசியும் அதிகரித்தது.
பெட்ரோலிய பொருட்களை பொருட்களின் விலையை குறையச் செய்யும் நோக்கில் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த மாத தொடக்கத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளானது .
2022ஆம் ஆண்டு வரை கச்சா எண்ணெய் உற்பத்தியில் குறைக்கப்பட்ட அளவைத் தொடர வேண்டும் என்று சௌதி அரேபிய அரசு மற்றும் ரஷ்யா ஆகியவை கூறின.
ஆனால் முன்பை போலவே மீண்டும் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்று கூறியது ஐக்கிய அரபு அமீரகம்.
ஒபெக்+ (ஒபெக் உறுப்பு நாடுகள் மற்றும் ரஷ்யா) நாடுகளிடையே வெளிப்படையாக இருந்த மோதல் சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உதவாது என்ற அச்சம் நிலவியது.
இந்த நாடுகள் உலகெங்கும் விநியோகிக்கப்படும் பெட்ரோலிய பொருட்களில் 50 சதவிகிதத்தை கட்டுப்படுத்துகின்றன.
ஆனால் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய தற்போது இந்த நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, ரஷ்யா, குவைத் மற்றும் இராக் ஆகிய நாடுகள் 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் உற்பத்தியை அதிக மேலும் அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com