Press "Enter" to skip to content

குரங்கம்மை பாதிப்பு: அமெரிக்காவில் 200 பேரை தேடிக் கொண்டிருக்கும் அதிகாரிகள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் 27 மாகாணங்களில் 200 பேருக்கும் மேற்பட்டோர் அரிய வகை குரங்கம்மையால் (Monkey pox) பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புள்ள 200 பேரைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில் நைஜீரியாவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸிற்கு வந்த ஒரு நபர் மூலம் மக்களுக்கு இது பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

2003ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபர் இவர்தான் என்று கருதப்படுகிறது.

அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்மை தொற்றியுள்ள புதிய நபர்கள் யாரும் கண்டறியப்படவில்லை.

இந்த நபர் பயணித்த இரு விமானங்களில் இருந்த மற்ற பயணிகளுக்கு இது தொற்றியிருக்கலாம் என்ற கவலை எழுந்திருப்பதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து அட்லாண்டா வரை வந்த அவர் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் டல்லாஸிற்கு பயணித்திருக்கிறார்.

இவருடன் நெருக்கத்தில் இருக்க நேர்ந்த பிற பயணிகளுக்கு ஆபத்து இருக்குமோ என்று அரிய முயற்சிகள் எடுத்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்ததால், இது மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவுதான் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 200 பேருக்கு அரிய வகை குரங்கம்மை பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images

“குரங்கம்மை தொற்றியிருக்கலாம் என கருதும் நபர்களை கண்டறிய மாகாண மற்றும் உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக” நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவுதான். இந்த தொற்று இருக்கலாம் என்று கண்காணிக்கப்பட்டு வரும் நபர்கள் யாரும் அதிக ஆபத்தில் இல்லை” என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

குரங்கம்மை ஓர் அரிதான நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று நோய். பெரியம்மை வகையை சேர்ந்த இந்த நோய், அதனை காட்டிலும் குறைந்த தீவிரத்தை கொண்டிருக்கிறது.

வெப்பமண்டல மழைக்காடுகள் அருகே இருக்கும் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் உள்பகுதிகளில்தான் இந்த நோய் பெரும்பாலும் பரவும்.

குரங்கம்மை அறிகுறிகள்:

முதல்கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசைவலி

பின்னர் முகத்தில் சொறி போன்று வரத்தொடங்கி அது பிறகு மற்ற உடல் பாகங்களுக்கு பரவும். வழக்கமாக உள்ளங்கை மற்றும் காலின் பாதங்களில் பரவும்.

இந்த சொறி அதிக நமைச்சலை தரும். பின்னர் பல கட்டங்களை தாண்டி பொருக்கு போல உருவாகும். பிறகு அதுவே உதிர்ந்துவிடும். ஆனால், தழும்புகளை இது விட்டுச்செல்லக்கூடும்.

பெரும்பாலும் இது தீவிரமாக இருக்காது. சின்னம்மை போன்று இருக்கும் இந்த நோய், சில வாரங்களில் சரியாகிவிடும்.

சில நேரங்களில் குரங்கம்மை தீவிரமாக மாறலாம். எனினும் 100ல் ஒருவருக்கு மட்டுமே இது தீவிரமாக இருக்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இது அரிய நோய் என்றாலுமே, அமெரிக்காவில் இது புதிதல்ல. 2003ஆம் ஆண்டில் ஒருமுறை நாட்டுக்குள் எலிகள் கொண்டுவரப்பட்டபோது, 47 பேருக்கு இந்த தொற்று இருக்கும் அல்லது இருந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

கடந்த ஆண்டு பிரிட்டனில் மூன்று பேருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »