Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் புதிய உத்தரவு: ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க புதிய நடைமுறை

பட மூலாதாரம், EPA

ஆப்கான் பல்கலைக்கழகங்களில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் முறையும், புதிய இஸ்லாமிய ஆடைக் குறியீடும் அறிமுகப்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

“பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஆண்களுடன் அல்ல” என்று கூறினார் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி.

எந்தெந்தப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

1996 மற்றும் 2001 க்கு இடையில் தலிபான் ஆட்சியின் கீழ் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

புதிய ஆட்சி வந்துவிட்டதை அறிவிக்கும் வகையில், அதிபர் மாளிகையில் தங்களது கொடியைப் பறக்கவிட்ட ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவதற்கு முன்பு உறுதியளித்த நடைமுறையில் இருந்து இது சற்று மாறுபட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் ஆண்களும் பெண்களும் சேரந்து படிப்பவையாக இருந்தன. அருகருகே ஆண்களும் பெண்களும் இருந்தாலும், ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது.

ஆனால் தாலிபன்கள் பதவிக்கு வந்த பிறகு ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதில் ஹக்கானிக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

“கலப்புக் கல்வி முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை,” என்று அவர் கூறினார். “மக்கள் முஸ்லிம்கள். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.”

புதிய நடைமுறைகளால் பெண்கள் கல்வி கற்க வருவதைத் தடுக்கும் என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர். ஏனெனில் பல்கலைக்கழகங்களில் தனி வகுப்புகள் நடத்துவதற்கான வசதிகள் இல்லை. ஆனால், போதுமான பெண் ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவர்கள் கிடைக்காத இடங்களில் மாற்று வழிகள் காணப்படுவதாகவும் ஹக்கானி கூறியுள்ளார்.

“இது அனைத்தும் பல்கலைக்கழகத்தில் இருக்கும் வசதிகளைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார். “நாங்கள் திரைச்சீலைக்குப் பின்னால் இருந்து கற்பிக்க ஆண் ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம். அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.”

தொடக்கப் பள்ளிகளில் இருந்தே மாணவர்களும், மாணவிகளும் தனித்தனியே கல்வி கற்கும் நடைமுறை ஆப்கானிஸ்தான் முழுவதுமே இருந்து வருகிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் அப்படியில்லை.

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் ஹக்கானி கூறியுள்ளார். தலையை மட்டும் மூட வேண்டுமா அல்லது முகத்தையும் மூட வேண்டுமா என்று குறிப்பிடவில்லை.

தாலிபன்

பட மூலாதாரம், Getty Images

பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் முற்றிலுமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் ஹக்கானி கூறினார். “மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வகையிலும், அதே நேரத்தில் இஸ்லாமிய, தேசிய மற்றும் வரலாற்று மதிப்புகளுக்கு ஏற்ப இஸ்லாமிய பாடத்திட்டத்தை உருவாக்க விரும்புவதாக” அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

காபூலில் உள்ள ஷாஹீத் ரப்பானி கல்வி பல்கலைக்கழகத்தில் நேற்று தலிபான்களின் பாலினக் கொள்கைகளை ஆதரிக்கும் பெண்களின் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கறுப்பு நிகாப் அணிந்த நூற்றுக்கணக்கான பெண்கள், கையில் தாலிபன் கொடியுடன் தாலிபன்களின் ஆட்சியைப் புகந்தும், பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி நாடு முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைத் தாக்கியும் பேசும் உரையைக் கேட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »