அர்வென் புயலுக்கு பின், கடற்கரையில் நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்களும் மற்ற கடல்வாழ் உயிரினங்களும் கரை ஒதுங்கியுள்ளன.
இந்த காட்சியை இன்வர்னெஸைச் சேர்ந்த சார்லீ மக்ஜெவ்ஸ்கி, நைர்ன் அருகே உள்ள குல்பின் சாண்ட்ஸ் என்ற கடற்கரையில் கண்டார்.
மொராய் ஃப்ர்த் கடற்கரையோரத்தில் 100 மீட்டர் (328 அடி) நீள தூரத்துக்கு நத்தைகளும், நண்டுகளும் கிடந்தன என்று அவர் கூறுகிறார்.
இது போன்ற சம்பவங்களுக்கு பொதுவான காரணம், கடுமையான வானிலையே என்று கடல் பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.
இந்த உயிரினங்களில் ஏதேனும் உயிர் பிழைத்ததா என்பது தெளிவாகவில்லை.
2018ஆம் ஆண்டு, எம்மா புயலின்போது ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் பெரிய அலைகள் காரணமாக, மேற்கு நார்ஃபோக்கிலுள்ள (West Norfolk) கடற்கரைகளில் பல மைல்கள் நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்களும் நண்டு வகை மீன்களும் இறந்தன.
2017 ஆம் ஆண்டு, மொராய் ஃப்ர்த்தியின் (Moray Firth) ப்ளாக் ஐல் (Black Isle) என்ற பகுதியிலுள்ள கடற்கரையில் நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்கள் பல வாரங்களாக கரை ஒதுங்கியிருந்தன. இது ‘விண்மீன்பாலிங்’ என்ற அந்த உயிரினத்திற்கே உரிய ஒரு பழக்கம் என்று அறியப்பட்டது.
ரோஸ்மார்க்கில் (Rosemarkie) காணப்பட்ட உயிரினங்கள் பலவும், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் கடலுக்கே சென்று விட்டன என கருதப்பட்டது.
நட்சத்திரமீன்கள் முந்தைய ஆண்டு வசிக்கும் இடத்திலிருந்து இடம் மாறும் நிகழ்வே’விண்மீன்பாலிங்’ என்று ஃப்ளேமெளத் பல்கலைக்கழகத்தின் கடல்சார் கல்வி நிலையத்தின் வல்லுநர்கள் குறிப்பிடுக்கின்றனர்.
வெள்ளிக்கிழமையன்று பிரிட்டனின் கடலோர பகுதிகளை அர்வென் புயல் தாக்கியது. மேலும், ஸ்காட்லாந்தின் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று வீசியதால் பாதிக்கப்பட்டது.
புயலுக்கு பின், ஸ்காட்லாந்து எல்லைகளிலுள்ள இயற்கை காப்பகத்தில் நூற்றுக்கணக்கான கடல்நாய் குட்டிகள் இறந்து கிடந்தன.
இதற்குமுன் இந்த அளவுக்கான சேதங்களைப் பார்த்ததில்லை என்று செயண்ட் அப்’ஸ் ஹெட்டிலிருந்து செயல்படும் ஸ்காட்லாந்தின் தேசிய அறக்கட்டளை கூறியுள்ளது.
பெட்டிகோ விக்கின் (Pettico Wick) விரிகுடாவிலுள்ள ஒரு சிறிய பகுதியில், 224 குட்டிகள் நீரில் இறந்துகிடந்தது என்றும், மேலும் பல கரை ஒதுங்கின எனவும் இந்த அறக்கட்டளை கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com