Press "Enter" to skip to content

வேகமெடுக்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஸ்பெயினில் 20 நாளில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்; சீனாவில் நிலைமை என்ன?

பட மூலாதாரம், Getty Images

முன்னெப்போதுமில்லாத வகையில், 31 வயதான பெண்ணொருவருக்கு 20 நாட்களுக்குள் இரண்டு முறை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுகாதார பணியாளரான அந்த பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா திரிபாலும், ஜனவரியில் ஒமிக்ரான் திரிபாலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம், ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பது உறுதிப்படுத்தப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினை சேர்ந்த அந்த பெண்ணுக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோது எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. ஆனால், சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர் வெவ்வேறுபட்ட கொரோனா திரிபால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

20 நாளில் இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் - புதிய அச்சுறுத்தலா?

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பின் கூட்டம் ஒன்றில், ஆய்வாசிரியர் மருத்துவர். ஜெம்மா ரெசியோ என்பவர் பேசும்போது, ‘ஓமிக்ரான் இயற்கையான தொற்று அல்லது தடுப்பூசிகள் மூலம் பெறப்பட்ட முந்தைய நோய் எதிர்ப்பு சக்தியை மீறி ஒருவருக்கு நோய்த்தொற்றை உருவாக்கலாம்’ என்று கூறியிருந்ததை இந்த சம்பவம் உறுதிசெய்வதாக உள்ளது.

“அதாவது, கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட, அவர்கள் மீண்டும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று கருத முடியாது” என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

இதே சூழ்நிலையில், அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்றும், வாழ்நாள் முழுவதும் என்று பார்க்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்புண்டு என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சம்: ஊரையே இடம்பெயர செய்த சீனா

கொரோனா அச்சம்: ஊரையே இடம்பெயர செய்த சீனா

பட மூலாதாரம், Getty Images

நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் புதிய அலைகளை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ஷாங்காய் நகரிலுள்ள சில பகுதிகளை சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக உள்ளூரிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியிருப்பாளர்களை சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பிங்வாங்கில் உள்ள குடியிருப்பாளர்களை அண்டை மாகாணமான ஜெஜியாங்கிற்கு மாற்றுவதே அதிகாரிகளின் திட்டமாக உள்ளது. அவ்வாறு செல்லும் மக்கள் அங்கு குறைந்தது ஒரு வாரமாவது தங்குவார்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படலாம் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம்: ஊரையே இடம்பெயர செய்த சீனா

பட மூலாதாரம், Getty Images

மேலும், அவ்வாறு வெளியேற அறிவுறுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது, தங்களது வீடுகளின் முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அண்டை மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும், அதில் நோய்த்தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே அங்கிருந்து வெளியேற முடியுமென்று தெரிகிறது.

சீனாவில் அதிவேகமாக உயர்ந்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று அரசு சார்பில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »