Press "Enter" to skip to content

வட கொரியா எந்த நேரமும் அணு குண்டு சோதனை நடத்தலாம் – அமெரிக்க அதிகாரி தகவல்

பட மூலாதாரம், Getty Images

வடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

வட கொரியா ஞாயிற்றுக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த சில நாட்களில் வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அத்துடன், இதுபோன்ற எந்த அணு ஆயுத சோதனையும் “விரைவான, ஆவேசமான” பதிலடியால் எதிர்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் வெண்டி ஷெர்மன் செய்தியாளர்களிடம் கூறினார்.

வட கொரியா ஐந்து ஆண்டுகளாக அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை.

இருப்பினும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜகார்த்தாவில் இருந்து பேசிய அமெரிக்க அதிகாரி கிம், வட கொரியா இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு 25 ஏவுகணைகளை பரிசோதித்ததே வட கொரியாவைப் பொறுத்தவரை அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த ஆண்டு ஜுன் மாதத்துக்குள்ளாகவே அந்நாடு 31 ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது என்று தெரிவித்தார்.

Presentational grey line
Presentational grey line

தந்திரோபாய ரீதியிலான சிறிய அளவுள்ள அணுக்கரு ஆயுதங்களைப் பயன்படுத்த அந்நாடு விருப்பம் கொண்டுள்ளது வட கொரிய அதிகாரிகள் பேச்சில் இருந்து தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

அடுத்த சுற்றுப் பரிசோதனைகள் எப்போது நடக்க வாய்ப்புள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எப்போது வேண்டுமானலும் நடக்கலாம் என்று தெரிவித்தார் அமெரிக்க அதிகாரியான கிம்.

அப்படி நடத்தப்படும் எந்த சோதனையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை முழுவதும் மீறுவதாகவே இருக்கும் என்று தென் கொரியத் தலைநகர் சோலில் செய்தியாளர்களிடம் கூறினார் ஷெர்மன். அங்கு அவர், தென் கொரிய, ஜப்பானிய அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மட்டுமல்ல, உலகமே கடுமையாக எதிர்வினையாற்றும் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, வட கொரியா இதுவரை பதில் ஏதும் கூறவில்லை.

வட கொரிய ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடி தரும் வகையில் திங்கள்கிழமை தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து 8 ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தின. இந்நிலையில், நிபந்தனை ஏதுமில்லாமல் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவும், தென் கொரியாவும் தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வட கொரியாவில் நிலவும் கோவிட் தொற்று சூழ்நிலைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா தயார் என்றும் அவர் கூறினார். ஆனால், வட கொரியாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »