Press "Enter" to skip to content

புதின், ஜார் மன்னர் மகா பீட்டர்: யுக்ரேன் பற்றிய உரையில் ரஷ்ய அதிபர் தம்மை ஜார் மன்னருடன் ஒப்பிட்டுக் கொள்வது ஏன்?

பட மூலாதாரம், EPA

ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இது பரவலாக அறியப்பட்டதுதான். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக இப்போது கருதத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மகா பீட்டர் நடத்திய போர்களுடன் இன்று தாம் நடத்திக் கொண்டிருக்கும் யுக்ரேனியப் போரை புதின் ஒப்பிடுகிறார், வெளிப்படையாகவே.

பேரரசைக் கட்டியெழுப்பும் புதினின் திட்டம் யுக்ரேனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்டை நாடான எஸ்தோனியாவை எரிச்சலடைய வைத்திருக்கிறது. புதினின் கருத்துகளை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று எஸ்தோனியா கூறியிருக்கிறது.

இளம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோரை சந்தித்து பேசியபோது ஜார் மன்னர் மகா பீட்டர் பற்றிய தனது கருத்தை புதின் கூறினார். விஞ்ஞானிகளிடமும் தொழில்முனைவோரிடமும் அறிவியல் பற்றியும் தொழில் பற்றியும் பேசுவதற்கு முன்பாக புவிசார் அரசியல் ஆதிக்கம் தொடர்பான அவரது போரைப் பற்றிப் பேசினார். மகா பீட்டர் தமக்கு ஒரு முன்மாதிரி என்று அவர் கூறினார்.

18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகா பீட்டர் நடத்திய வடக்குப் போர்களை புடின் குறிப்பிட்டுப் பேசினார். “அவர் ஸ்வீடனுடன் சண்டையிட்டு, அவர்களின் நிலங்களைக் கைப்பற்றினார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர் எதையும் கைப்பற்றவில்லை; அவர் அதை மீட்டெடுத்தார்!” என்றார் புதின்.

“மீட்பதற்கும் வலுப்படுத்துவதற்குமாக இது எங்களிடம் வீழ்ந்ததாகத் தெரிகிறது” என்று கூறிய புடின் ஒரு புன்னகையுடன் முடித்தார். யுக்ரேனையும் அங்கு அவர் நடத்தும் போரையும் புதின் குறிப்பிடுகிறார் என்பது இங்கு தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

பீட்டர்

பட மூலாதாரம், Universal History Archive/Getty Images

ரஷ்யாவை விரிவுபடுத்துவதன் மூலம் அதை வலுப்படுத்த முடியும் என்பதற்கு மகா பீட்டரின் ஆட்சியே சாட்சி என்று புதின் கூறுகிறார்.

சமீப காலமாக ரஷ்யாவின் கடந்த கால வரலாற்றை மேற்கோள்காட்டுவதையே புதின் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு அதைப் பொருத்திப் பேசுகிறார். யுக்ரேனைத் தாக்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பு, அவர் ஒரு பெரிய கட்டுரையைத் தயாரித்தார். அதில் அவர் நாட்டின் வரலாற்று உரிமையைப் பற்றி வாதிட்டார்.

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்தபோது அது ஒரு சிறப்பு நடவடிக்கை என்றுதான் போலியாகக் கூறினார் புதின். நாசிச ஒழிப்புக்கும், அச்சுறுத்தலைக் குறைப்பதற்கும் கிழக்கு டான்பாஸ் பகுதிக்கு மட்டுமானது என்று அப்போது தெரிவித்தார்.

ஆனால் அவர் இப்படிக் கூறிக் கொண்டிருந்தபோது, அவரது துருப்புக்கள் கியேவில் நோக்கி நகர்ந்து குண்டுவீசிக் கொண்டிருந்தன. 100 நாட்களுக்கும் மேலாக, உக்ரேனியப் பிரதேசத்தின் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கெல்லாம் ரஷ்யாவுடன் சேருவதற்கான வாக்கெடுப்பு பற்றி பேசும் பொம்மை நிர்வாகங்களே உள்ளன.

இப்போது புதின் தனது “நடவடிக்கை” உண்மையில் ஓர் ஆக்கிரமிப்புதான் என்பதை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு துணிந்திருக்கிறார்.

தனது துருப்புகள் தரையில் உருவாக்குவதற்கு நடத்தும் போர் பற்றிய யதார்த்தத்தை மேற்கு நாடுகள் இறுதியில் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் நம்புகிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை ரஷ்யாவின் புதிய தலைநகராக மகா பீட்டர் உருவாக்கியபோது ஓர் ஐரோப்பிய நாடு கூட அதை அங்கீகரிக்கவில்லை. ஆனால் இப்போது அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார் புதின்.

மகா பீட்டர்

பட மூலாதாரம், Getty Images

மகா பீட்டரின் போர் பற்றிய புதினின் பேச்சால் பால்டிக் நாடுகள் கொந்தளித்திருக்கின்றன. இப்போது எஸ்தோனியாவில் உள்ள நார்வா மீது மகா பீட்டர் நடத்திய தாக்குதல் பற்றி சிலாகித்துப் பேசியதற்கு ரஷ்யத் தூதரை அழைத்து அந்த நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் தேர்ந்தெடுத்த பகுதியை மட்டுமே புதின் பயன்படுத்துகிறார்.

மகா பீட்டர் ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியாக அறியப்பட்டாலும், மேற்கத்திய சித்தாந்தங்களையும், அறிவியல், பண்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியவர். ஐரோப்பாவின் சாளரமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை உருவாக்கினார். ரஷ்யாவை நவீனப்படுத்தும் தாகத்தில் ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஆனால் புதினின் தொடர்ச்சியான அடக்குமுறை ஆட்சியில் பீட்டர் உருவாக்கிய சாளரம் மெதுவாகத் மூடத் தொடங்கியது. யுக்ரேன் மீதான போர் மீதமிருந்ததையும் மூடிவிட்டது.

புடினின் பெருகிய முறையில் அடக்குமுறை ஆட்சி மேற்கில் அந்த சாளரத்தை மெதுவாக மூடித் தொடங்கியது; உக்ரைன் மீதான போர் முற்றிலுமாக அடைத்துவிட்டது. புதிய சிந்தனைகளைத் தேடி மகா பீட்டர் மேற்கொண்டது போன்ற பணத்தை புதின் மேற்கொள்வது இப்போது சாத்தியில்லை என்றே தெரிகிறது.

18 ஆம் நூற்றாண்டின் ஜார் மன்னர் பற்றி இளம் தொழில்முனைவோருக்கு விளக்கும்போது, ​​அவர்களுக்குப் பின்னால் சொற்கள் மின்னின: ‘எதிர்காலம்’, ‘நம்பிக்கை’, ‘வெற்றி’.

மேற்கத்திய எதிர்ப்புகளையும் பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்வது என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது.

ஆனால் வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து புதினுக்கு இன்னொரு பாடம் கிடைக்கலாம்.

மகா பீட்டர் பால்டிக் முதல் கருங்கடல் வரையிலான் நிலத்தை கைப்பற்றினார். ஆனால் ரஷ்யா தொடங்கிய வடக்குப் பெரும் போர் 21 ஆண்டுகளாக நீடித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »