Press "Enter" to skip to content

காற்று மாசுபாடு: இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறையும் – சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், AFP

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (15/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என, ‘இந்து தமிழ் திசை’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து அச்செய்தியில் குறிப்பிடப்பட்டதாவது:

“இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.

அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.

இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் நிலவும் காற்று மாசை பார்த்தால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும். காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளில்தான் காணப்படுகிறது.

1998-ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் சர்வதேச ஒப்பீடுகளை கணக்கில் கொள்ளும் போதும் இந்தியாவின் அதிக மக்கள் தொகையும் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் டெல்லி, பிகார், உத்தரபிரதேச மாநிலங்களில்தான் மிக மோசமான காற்று மாசு பிரச்னை உள்ளது.

தற்போதைய நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தர பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பிஹார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சொந்த ஊருக்கு உலங்கூர்தியில் சென்ற சென்னை வியாபாரி குடும்பம்

உலங்கூர்தி

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA / BBC

கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சென்னையை சேர்ந்த இரும்பு வியாபாரி குடும்பத்தினர் உலங்கூர்தியில் சொந்த ஊருக்கு சென்றதாக, ‘தினத்தந்தி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள பத்திரகாளி அம்மன், கன்னி விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நடராஜன் என்பவர் குடும்பத்துடன் உலங்கூர்தியில் வந்தார். இதை பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

அச்செய்தியில், “பாலசுப்பிரமணியனின் சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி. இவர் தனது குடும்பத்துடன் சென்னை கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார். இங்கு இரும்பு கடை நடத்தி வருகிறார். தனது தந்தையுடன் இணைந்து நடராஜனும் கடையை கவனித்து வருகிறார். பாலசுப்பிரமணியனின் மற்றொரு மகன் ராஜதுரை என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நடராஜனுக்கு சிறுவயது முதலே உலங்கூர்தி, விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இதேபோல் அவரது மகன் மோகித்துக்கு உலங்கூர்தியில் செல்ல வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது.

எனவே, பேரனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பாலசுப்பிரமணியன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு உலங்கூர்தியில் செல்ல ஏற்பாடு செய்தார்.

பெங்களூருவில் உள்ள தனியார் உலங்கூர்தி நிறுவனம் மூலமாக இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதையடுத்து நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, மகன் மோகித், ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றனர். அங்கிருந்து உலங்கூர்தி மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர். அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். கிராம மக்கள் ஆர்வத்துடன் உலங்கூர்தியை பார்த்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பிரதமர் புதிய திட்டம்

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், PMM SRI LANKA

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையினருடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்றுஇடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், “குறித்த இலக்கை எட்டுவதற்காக உயர்ந்த செலவினத்தைக் கொண்ட 15 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்ட காலத் திட்டமொன்றை உருவாக்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சீனாவிடமிருந்து மானியமாக அரிசி: சீன தூதரகம்

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

சீனாவிடமிருந்து மானியமாக இலங்கைக்கு அரிசி கிடைக்கப் பெறவுள்ளது. 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது என, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25ஆம் தேதியும் இரண்டாம் கட்டம் 30 ஆம் தேதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

குறித்த அரிசி தொகையில் 10,000 மெட்ரிக் டன் அரிசியை பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிப்பதற்கு வழங்கவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் உரப்பிரச்னையால் நெற் பயிர்ச்செய்கை குறைவடைந்துள்ளது. இதனால் பெறுமளவான அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய கடந்த மாதம் தமிழ்நாட்டு அரசிடமிருது 40,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சீனாவும் அரிசியை வழங்கி இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »