Press "Enter" to skip to content

உதய்பூர் படுகொலை: “தீவிரவாதிகளிடமிருந்து இந்து மதத்தை காப்பாற்றுங்கள்” – சர்வதேச அளவில் எழும் கண்டனம்

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

இந்தியாவில் நடக்கும் பல சர்ச்சைகளும் அதைத்தொடர்ந்து நடக்கும் வன்முறைகளும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. சமீபத்தில், முகமது நபி குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளால் இந்தியா சர்வதேச நாடுகளிடமிருந்து ராஜீய மட்டத்தில் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

குறிப்பாக பல இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தன. இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி, நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது.

திங்களன்று, ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி அரபு நாடுகளின் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. செவ்வாயன்று கத்தாரில் சமூக ஊடகங்களில் IStandWithZubair ட்ரெண்ட் ஆனதாக தோஹா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு பதிவிட்ட ட்வீட்டிற்காக முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதாக கத்தாரின் அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், நூபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய பேச்சு முகமது ஜுபைரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் பின்னரே இந்த விவகாரம் எல்லை தாண்டி இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்னையாக உருவெடுத்து, அவை ஒவ்வொன்றாக இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டன. தற்போது முகமது ஜூபைரும் மத உணர்வுகளை புண்படுத்தியதான கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

துணி தைக்க அளவெடுக்கும் கன்ஹையா லால்.

பட மூலாதாரம், PTI

நாட்டை உலுக்கிய உதய்பூர் படுகொலை

இந்தியாவில் நூபுர் ஷர்மாவின் அறிக்கையால் எழுந்துள்ள சர்ச்சை இன்னும் ஓயவில்லை. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செவ்வாய்க்கிழமை தையல்கடை நடத்தும் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலையை செய்துவிட்டு அந்த இருவரும் காணொளி எடுத்து கன்ஹையா லால் சாஹு என்ற தையல்காரரை தாங்கள் கொன்றதாக ஒப்புக்கொண்டனர். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர்கள் மிரட்டல் விடுபடும் அந்த காணொளியில் பதிவாகி உள்ளது.

“முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு இந்த தண்டனைதான் கிடைக்கும்” என்று அவர்கள் கூறிய அந்த காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கன்ஹையாலால், ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கன்ஹையா லால் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெவிக்கின்றன. கன்ஹையா லால் கொலையில், பில்வாராவைச் சேர்ந்த 38 வயதான ரியாஸ் அத்தாரி மற்றும் 39 வயதான கெளஸ் முகமது ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் காவல் துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

“தீவிரவாதிகளிடமிருந்து இந்து மதத்தை காப்பாற்றுங்கள்”

கன்ஹையா லால் கொலை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளன. நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீர்ட் வில்டர்ஸின் ட்வீட்டை, இந்தியாவின் ஒரு பிரிவினர் ஆதரித்து பதிவிட்டு வருகின்றனர்.

“ஒரு நண்பராக நான் இதை இந்தியாவிடம் கூறுகிறேன். சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருப்பதை நிறுத்துங்கள். தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஜிஹாதிகளிடமிருந்து இந்து மதத்தை பாதுகாத்திடுங்கள். இஸ்லாத்தை திருப்திப்படுத்தும் வேலையை தொடர்ந்து செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அதற்கு ஒரு பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்,” என்று கீர்ட் வில்டர்ஸ் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுடன் HinduLivesMatters மற்றும் India என்ற வலையொட்டை (வலையொட்டு (ஹேஷ்டேக்))யும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

கீர்ட் வில்டர்ஸ் தனது இரண்டாவது ட்வீட்டில், “இந்தியாவில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது அவர்களின் நாடு, அவர்களின் வீடு. இந்தியா இஸ்லாமிய நாடு அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்லாமிய எதிர்ப்பு அறிக்கைகளுக்காக அறியப்படும் கீர்ட் வில்டர்ஸ், பிரிட்டனுக்குள் நுழைய ஒரு முறை தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அந்த தடை பின்னர் திரும்பப் பெறப்பட்டது. வில்டர்ஸின் உயிருக்கு ஆபத்து இருப்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மத்திய கிழக்குக்கான பிரிட்டிஷ் மையத்தின் பிராந்தியத் தலைவர் அம்ஜத் தாஹாவும் உதய்பூரில் நடந்த கொலைக்கு எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “உதய்பூரில் நடந்த தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. அது கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு அளியுங்கள். ஒரு நபருக்காக இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்கள், இந்தியர்கள் எல்லா முஸ்லிம்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா? இல்லை என்பதே பதில். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள அம்ஜத் தாஹா, அதனுடன் JusticeForKanhaiyaLal மற்றும் Udaipur என்ற வலையொட்டுக்களை (வலையொட்டு (ஹேஷ்டேக்)) குறிப்பிட்டுள்ளார்.

உதய்பூரில் நடந்த கொலை பற்றிய செய்தி அரேபிய ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. “உதய்பூரில் இந்து நபர் ஒருவர் கொல்லப்பட்டதால் பதற்றம்,” என்று அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது. “உதய்பூரில் இணையம் மற்றும் அலைபேசி சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. கொலைக் குற்றவாளிகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்து மதத்தைச் சேர்ந்த கன்ஹையாலால் தனது கடையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் காணொளியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அல் அரேபியா மேலும் குறிப்பிட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தனது ட்வீட்டில், “ரியாஸ் மற்றும் கெளஸ், கன்ஹையா லாலை கொடூரமாக கொன்றனர். மேலும் இந்த கொலையின் காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, நபிகள் நாயகத்தின் கெளரவத்திற்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆபத்தான இந்த மதவெறியர்களால், இந்தியாவில் இந்துக்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின் தனது இரண்டாவது ட்வீட்டில், “வங்கதேசத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் முதல்வரான ஸ்வபன் குமார் பிஸ்வாஸ் இந்து மதத்தை சேர்ந்தவர். கிழிந்த காலணி மாலையை அணியுமாறு அவர் மதவெறியர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். சமூக ஊடகங்களில் நூபுர் ஷர்மாவை ஆதரித்த மாணவரை அவர் ஆதரவு அளித்தார். இந்தியாவில், நூபுர் ஷர்மாவை ஆதரித்ததற்காக ஒரு இந்து தையல்காரர், இரண்டு முஸ்லிகளால் கொல்லப்பட்டார். இந்துக்கள் அல்லாதவர்கள் மட்டுமல்ல, முற்போக்கு முஸ்லிம்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்களும் ஜிஹாதிகளால் மூளைச்சலவை செய்யப்படக்கூடும். மத தீவிரவாதம் எப்போதும் மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று அவர் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ருஹான் அகமது உதய்பூர் சம்பவம் பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டில், “ராஜஸ்தானின் உதய்பூரில் இந்து தையல்காரரைக் கொன்ற இரண்டு பேர் கராச்சியைச் சேர்ந்த தாவத்-இ-இஸ்லாமியுடன் தொடர்புடையவர்கள். இந்த அமைப்பு பாகிஸ்தானில் உள்ள பரேல்வி பான்-இஸ்லாமிக் தெஹ்ரீக்-ஏ-லபாக் உடன் தொடர்புடையது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸின் செய்தி தெரிவிக்கிறது,” என்று பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »