பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சூனக் முன்னிலையில் இருக்கிறார். சூனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரும் இன்ஃபோஸிஸ் ( Infosys) நிறுவனத்தை உருவாக்கியவர்களான நாராயண் மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மருமகன்.
போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது, சூனக் பிரிட்டனின் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஜான்சன் பதவி விலகிய பிறகு, கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டியில் சூனக் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமராக இவரே வருவார் என்று கன்மேலாய்வுட்டிவ் கட்சிக்குள்ளும் வெளியிலும் பலரும் கணிக்கின்றனர்.
ஆனால், பிரதமருக்கான போட்டியில் அவர் எந்த இடத்தில் நிற்கிறார்? அவரது முன்னேற்றம் எப்படி இருக்கிறது? பிரிட்டனின் புதிய பிரதமர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
பிரதமர் பதவிக்கான போட்டி
பிரிட்டனை வழிநடத்தப் போவது யார் என்பதை அறிய இந்தியர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனெனில் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கலாச்சார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் நிறைய இருக்கின்றன.
இந்தியாவில் இருப்பதைப் போல், பிரிட்டனில் எழுதப்பட்ட அரசியலமைப்பு இல்லை. ஆனால், பிரதமராவதற்கு கண்டிப்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.
கீழவையில் பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவர் தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்க வெவ்வேறு வழிமுறைகளை வைத்திருக்கின்றனர்.
2019 தேர்தலில் கன்மேலாய்வுட்டிவ் கட்சி வெற்றி பெற்றது. போரிஸ் ஜான்சன் தான் அப்போது தலைவராக இருந்தார். அவர் இப்போது பிரதமர் பதவியில் இருந்து விலகியதால், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க கன்மேலாய்வுட்டிவ் கட்சிக்குள் தற்போது தேர்தல் நடக்கிறது.
கட்சி தலைவருக்கான போட்டியில் நிற்க ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் இருபது நாடளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். இந்த முறை எட்டு பேருக்குப் போதுமான ஆதரவு கிடைத்திருக்கிறது.
அடுத்தடுத்த சுற்றுகளில், குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் நாக் அவுட் செய்யப்படுவார்கள். இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் வரைக்கும் இந்த சுற்றுகள் தொடரும்.
இந்த போட்டியில்தான் இப்போது ரிஷி சூனக் முன்னிலையில் இருக்கிறார். பல சுற்றுகள் கடந்து இப்போது கடைசியாக இரண்டு பேர் மட்டுமே களத்தில் இருக்கிறார்கள். ஒருவர் ரிஷி சூனக், இன்னொருவர் லிஸ் ட்ரஸ்.
யார் இந்த ரிஷி சூனக்?
ரிஷி சூனக் சவுத்தாம்ப்டனில் (Southampton) பிறந்தவர். அவருடைய பெற்றோர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தவர்கள். இருப்பினும், இந்தியாவில் இருக்கின்ற பாஞ்சாப் மாநிலத்துக்கும் அவர்களுக்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது.
சூனக்கின் தந்தை யஷ்விர் கென்யாவில் இருந்து பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்துள்ளார். சூனக்கின் தாயார் தான்சானியாவில் இருந்து வந்தவர். தந்தை யஷ்விர் பொது மருத்துவராக வேலை பார்த்தவர். தாயார் உஷா மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தவர். ஆனால், சூனக் நிதித்துறையைத்தான் தனது எதிர்கால இலக்காகத் தேர்ந்தெடுத்தார்.
தனியார் கல்வி நிறுவனமான வின்செஸ்டர் (Winchester) கல்லூரியில் படித்த அவர் தனது கோடைக்கால விடுமுறையில் சவுத்தாம்ப்டன் கரி ஹவுஸில் வெயிட்டராவும் வேலை பாத்திருக்கிறார். அதற்குப் பிறகு, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். மேலும் ஸ்டான்ஃபோர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ-வும் படித்தார்.
இரண்டாயிரத்து ஒன்று முதல் இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு வரை கோல்ட்மேன் சேக்ஸில் (Goldman Sachs) அனலிஸ்டாக (Analyst) இருந்தார்.
அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக ரிஷி சூனக் கருதப்பட்டார். ஆனால், அவருடைய சொத்து மதிப்பை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. கிரிக்கெட், கால்பந்து, உடற்பயிற்சி மற்றும் திரைப்படங்கள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக ரிஷி சூனக்கின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிஷி சூனக் அரசியலுக்கு வந்தது ஒப்பீட்டளவில் புதிய முன்னெடுப்புதான். 2014-ஆம் ஆண்டு பிரிட்டன் பொது தேர்தலில் யார்க்ஷைரில் உள்ள ரிச்மண்டில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2017 மற்றும் 2019 தேர்தல்களிலும் தன்னுடைய இடத்தை அவர் தக்க வைத்துக்கொண்டார். மிக விரைவாகவே ஜூனியர் அமைச்சர் பதவியும் அவருக்குக் கிடைத்தது. இதற்கு அடுத்தபடியாக போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக அவர் பதவி வகித்தார்.
இந்த நிதி அமைச்சர் பதவி என்பது பிரிட்டன் அமைச்சரவையில் இரண்டாவது முக்கிய பொறுப்பு. முதன் முறையாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவருக்கு இந்த உயரிய பதவி வழங்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சூனக் ஆதரவாக இருந்தார். கன்மேலாய்வுட்டிவ் கட்சியுடைய புதிய முகமாகவும் அவர் அறியப்பட்டார்.
சூனக் மீதான சர்ச்சைகள்
கோவிட் -19 பெருந்தொற்றின் தொடக்க காலத்தில், சூனக் சாதகமான மதிப்பீட்டைப் பெற்றார். ஆனால், அவருடைய சில கொள்கைகள் விமர்சிக்கப்பட்டன. சில நேரங்களில் சர்ச்சைகளின் மையப்புள்ளியாகவும் அவர் இருந்திருக்கிறார்.
ஸ்டான்ஃபோர்ட்டில் (Stanford) அவர் படிக்கும் போது நாராயன் மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகளான அக்ஷ்தா மூர்த்தியைச் (Akshata Murthy) சந்தித்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
அக்ஷ்தா மூர்த்தியின் non-dom அந்தஸ்து குறித்த செய்தி வெளியானதும், இந்த தம்பதி கடுமையான ஊடக விமர்சனத்துக்கு உள்ளானது. non-dom அந்தஸ்து உள்ள பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினர், பிரிட்டனுக்கு வெளியே அவர்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை.
பின்னர் வெளிநாட்டில் தாம் சம்பாதித்த பணத்துக்கும் வரி செலுத்தப்போவதாக அக்ஷ்தா மூர்த்தி கூறினார்.
மற்றொரு சர்ச்சையிலும் ரிஷி சூனக் சிக்கினார். பிரிட்டன் சான்செலராக அவர் இருந்த அதே நேரத்தில் அவர் அமெரிக்காவின் நிரந்தர வசிப்புரிமை வழங்கும் US green card வைத்திருந்த தகவல் ஏப்ரல் 2022இல் வெளியானது. இது மற்றுமொரு சர்ச்சைக்கு வழிவகுத்தது.
அவரது முதல் அரசுமுறை பயணத்தின்போது கிரீன் கார்ட் (green card) குறித்து மேலதிகமாக என்ன செய்யலாம் என்றும் ரிஷி சூனக் தனது US green card-ஐ உடனடியாக திருப்பித் தருவதே சரியாக இருக்கும் என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இப்படி ஏற்றமும் இறக்கும் கொண்ட ரிஷி சூனக், பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா? அதைத் தெரிந்துக்கொள்ள செப்டம்பர் 5ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com