மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு எதிரான முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நஜிப் ரஸாக் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனுவில் தனக்கு விதிக்கப்படும் தண்டனையை நிறுத்திவைக்க நஜிப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
69 வயதாகும் நஜிப் ரஸாக், 1எம்டிபி என்ற மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிடமிருந்து சுமார் $10 மில்லியனை சட்டவிரோதமாகப் பெற்றதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அந்த வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள நஜீப் ரஸாக், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த வழக்கில் தன்னை குற்றமற்றவர் என்று நஜிப் தரப்பில் வாதிடப்பட்டது. இருந்தபோதும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், நஜிப் ரஸாக் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் ($46.84 மில்லியன்) அபராதமும் விதித்துள்ளார். “இந்த வழக்கின் நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான அவரது தரப்பு வாதங்கள், இயல்பாகவே சீரற்றதாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தன. சந்தேகத்தின் பலனை அது நஜிப் ஜங் தரப்புக்குத் தரவில்லை. மேலும், இந்த தண்டனை அதிகமானதாகவும் இல்லை என கருதுகிறோம்,” என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது நஜிப் ஜங் முன்வரிசையில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் மூன்று குழந்தைகள் அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும் என்று நஜிப் ஜங் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை தாமதப்படுத்தும் அவரது கடைசி முயற்சியாக இந்த உத்தி பார்க்கப்பட்டது. ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்த நிலையில், தீர்ப்பு வெளிவரும் சில நிமிடங்களுக்கு முன்பாக பேசிய நஜிப் ஜங், “எனது சார்பில் மேல்முறையீட்டு வழக்கில் வாதிடுவதற்கு புதிய வழக்கறிஞர்கள் குழுவை நியமிக்க ஏதுவாக மேலும் இரண்டு மாதங்களுக்கு வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தேன். ஆனால், அநீதியால் பாதிக்கப்பட்டவனாகி இருக்கிறேன்,” என்று கூறினார்.
“மிகவும் நியாயமற்ற முறையில் எனக்கு எதிராக வலிமை வாய்ந்த நீதித்துறை நடந்து கொண்டதாக மிக மோசமான உணர்வு எனக்கு ஏற்படுவதாக உணர்கிறேன்,” என்றும் நஜிப் ஜங் தெரிவித்தார்.
வழக்கில் அரசு தரப்பு குற்றச்சாட்டுகள் என்ன?
2009இல் நஜிப் ரஸாக் பிரதமராக இருந்த முதல் ஆண்டில் அவரால் இணைந்து நிறுவப்பட்ட 1MDB நிறுவனத்தில் இருந்து சுமார் 4.5 பில்லியன் டாலர்கள் திருடப்பட்டதாக அரசு தரப்பு குற்றம்சாட்டியது. நஜிப்புடன் தொடர்புடைய கணக்குகளில் 1 பில்லியனுக்கும் அதிகமான 1எம்டிபி பணத்தைக் கண்டுபிடித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் உலகின் பல பகுதிகளில் உள்ள அதிகாரிகள், நிதி நிறுவனங்களின் பெயர்களை புலனாய்வாளர்கள் சேர்த்திருந்தனர். இதைத்தொடர்ந்து கிளெப்டோகிராசி புலனாய்வு என்ற பெயரில் ஒரு வழக்கை அமெரிக்க நீதித்துறை முன்னெடுத்தது.
நஜிப் மீது வழக்கு தொடுக்கப்பட்ட காரணம் என்ன?
கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2018ஆம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக நஜிப் பதவி வகித்தார். அதே ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் 1எம்டிபி (1MDB)எனப்படும் மலேசிய வளர்ச்சி நிதியம். இதன் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், எஸ்ஆர்சி எமரிட்டஸ் ஆலோசகராகவும் அவர் பொறுப்பு வகித்தார். மேலும் மலேசிய நிதி அமைச்சராகவும் அவர் பதவியில் இருந்தார்.
எஸ்ஆர்சி நிறுவனம் தொடக்கத்தில் 1எம்டிபியின் துணை நிறுவனமாக தோற்றுவிக்கப்பட்டது. எனினும் பின்னர் சில காரணங்களால் அது மலேசிய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் எஸ்ஆர்சி நிறுவனத்தில் இருந்து நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மாற்றப்பட்டது. இதுவே அவர் பிரச்சினையில் சிக்க காரணமாக அமைந்தது. இது தொ டர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது அன்றைய அரசுத் தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேலும் 1எம்டிபியின் செயல்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு ஆட்பட்டன. பல பில்லியன் ரிங்கிட் அளவுக்கு மலேசிய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சாடின.
1எம்டிபி மூலம் நஜிப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு மகாதீரும் அன்வாரும் தலைமையேற்று மேற்கொண்ட தீவிர பிரசாரத்தை அடுத்து, நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி 2018 பொதுத்தேர்தலில் தோல்வி கண்டது.
கடந்த 1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேசிய முன்னணி முதன்முறையாக ஆட்சியைப் பறிகொடுத்தது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் மலேசிய பிரதமர்
2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை மலேசிய பிரதமராக நஜிப் ரஸாக் இருந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் மீது நம்பிக்கை மோசடி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மலேசிய வரலாற்றில் இல்லாத வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டனை விதித்தது. இப்போது அந்த தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், இத்தீர்ப்பின் மூலம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com