Press "Enter" to skip to content

குழி மனிதன் மரணம்: 26 ஆண்டுகள் காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்த மர்ம நபர்

பட மூலாதாரம், Vincent Carelli/Corumbiara

புற உலகத் தொடர்பில்லாத, பிரேசிலின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த கடைசி நபர் மரணமடைந்தார். இந்தத் தகவலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 26 ஆண்டுகளாகப் பெயர் தெரியாத அந்த மனிதர் பிறருடன் எந்தத் தொடர்புமின்றித் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் குழி மனிதன் என்று அழைக்கப்பட்டார். காரணம் விலங்குகளைப் பிடிக்கவும் தான் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்ளவும் என ஆழமான குழிகளைத் தோண்டி வந்தார் இவர்.

அவரது குடிசைக்கு வெளியில் ஒரு தொங்கும் கயிற்றுக் கட்டிலில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இவரது சடலம் காணப்பட்டது. வன்முறைத் தாக்குதல் எதுவும் நடந்ததற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

60 வயதான இவரது மரணம் இயற்கையானது என்றே கருதப்படுகிறது.

பிரேசில் – பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாகாணத்தில் தனரு பழங்குடியினப் பகுதியில் வாழ்ந்து வந்த குழுவினரின் கடைசி மனிதர் இவர்.

அவரது இனத்தவரில் பெரும்பாலோர் 1970-களில் தங்கள் நிலத்தை விரிவுபடுத்த விரும்பிய பண்ணையாளர்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

1995 ஆம் ஆண்டில், அவரது பழங்குடியினரின் மீதமுள்ள ஆறு பேர் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அவர் மட்டுமே எஞ்சியிருந்தார்.

குடிசை

பட மூலாதாரம், J Pessoa/Survival International

பிரேசிலின் பூர்வ குடிகள் விவகார முகமை ஃபுனாய் (Funai) 1996 இல் அவர் உயிர் பிழைத்திருப்பதை அறிந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த, அப்பகுதியைக் கண்காணித்து வந்தது.

ஃபுனாயின் ஏஜென்டான அல்டயர் ஜோஸ் அல்கேயர், தனது வழக்கமான ரோந்துப் பணியின் போது, அவரது குடிசைகளில் ஒன்றின் வெளியே ஒரு தொங்கு ஊஞ்சலில் மக்காவ் பறவையின் இறகுகளால் மூடப்பட்டிருந்த மனிதனின் சடலத்தைக் கண்டார்.

பூர்வ குடிகள் நிபுணரான மார்செலோ டோஸ் சான்டோஸ் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “தான் இறக்கப் போவதை அறிந்து, தானே தன் மீது இறகுகளை வைத்து மூடிக்கொண்டதாக நான் நினைக்கிறேன். வன்முறைக்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை” என்ற் கூறினார்.

அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு 40 முதல் 50 நாட்களுக்கு முன்பு அந்த நபர் இறந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பிராந்தியத்தில் எந்தவித ஊடுருவல் நடந்ததற்கான அறிகுறிகளும் இல்லை என்றும் அவரது குடிசையிலும் எதுவும் சேதம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு நோய் தாக்கியதா என்பதை அறியப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

குழி மனிதன்

பட மூலாதாரம், Funai

வெளியாட்களுடனான தொடர்பை அவர் தவிர்த்துள்ளதால், அந்த நபர் எந்த மொழியில் பேசினார், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

2018 ஆம் ஆண்டில், ஃபுனாய் உறுப்பினர்கள் எதேச்சையாகக் காட்டில் இவரைச் சந்தித்த போது அவரை வெற்றிகரமாகப் படம்பிடித்தனர். அந்தக் காட்சிகளில், அவர் ஒரு மரத்தைக் கோடாரியைப் போன்ற ஒன்றைக் கொண்டு வெட்டுவதைக் காணலாம்.

அன்றிலிருந்து அவரைக் காணவில்லை, ஆனால் ஃபுனாய் முகவர்கள் அவருடைய ஓலைக் குடிசைகளையும் அவர் தோண்டிய ஆழமான குழிகளையும் கண்டனர்.

சில குழிகளில் அடியில், கூர்முனைக் கம்பிகள் வைக்கப்பட்டிருந்ததால், அவை அவர் வேட்டையாடிய காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் பிடிக்கத் தோண்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவரது உடலைக் கண்டுபிடித்த ஃபுனாய் முகவர் அல்கேயர், அந்த மனிதர் பல ஆண்டுகளாக கட்டிய 50 க்கும் மேற்பட்ட குடிசைகள் அனைத்திலும் 10 அடி ஆழமான குழியும் இருந்தது என்று கூறுகிறார்.

அந்தக் குழிகள் அவருக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்திருக்கலாம் என்று அல்கேயர் கருதுகிறார். மற்றவர்கள் அவற்றை அவர் மறைவிடமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.

குழி மனிதன் தோண்டிய குழி

பட மூலாதாரம், J Pessoa/Survival International

இப்பகுதியில் பல ஆண்டுகளாக கிடைத்த சான்றுகள், அவர் சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கையும் பயிரிட்டதுடன் தேன், பப்பாளி மற்றும் வாழை போன்றவற்றையும் சேகரித்தார் என்று கூறுகின்றன.

பிரேசிலின் அரசியலமைப்பின் கீழ், பழங்குடியின மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய நிலத்தில் உரிமை உள்ளது. 1998 முதல் தனாரு என்ற பூர்வ குடிகள் பகுதியின் நிலங்களைப் பயன்படுத்த பிறருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

8,070 ஹெக்டேர் நிலப்பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், சில நில உரிமையாளர்கள் கடந்த காலங்களில் பூர்வ குடிகள் பகுதிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதற்குத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

2009 ஆம் ஆண்டில், அப்பகுதியில் உள்ள ஒரு ஃபுனாய் போஸ்ட் சேதமடைந்திருந்தது. குழி மனிதரையும் அவரது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஃபுனாய் முகவர்களையும் அச்சுறுத்தும் வண்ணம் அங்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளும் காணப்பட்டன.

தடை உத்தரவு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும், அது அங்கீகரிக்கப்படுவதற்கு, சம்பந்தப்பட்ட நிலத்தில் ஒரு பழங்குடியின குழு உறுப்பினர்கள் இருப்பதையும் ஆவணப்படுத்த வேண்டும்.

‘மேன் ஆஃப் தி ஹோல்’ இறந்துவிட்ட நிலையில், பூர்வ குடிகள் உரிமைக் குழுக்கள் தனரு இருப்புப் பகுதிக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

பிரேசிலில் சுமார் 240 பழங்குடியினர் உள்ளனர், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இவர்களது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் பலர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு எச்சரிக்கிறது.

கிளாஸ்கோவில் நடந்த COP26 உலகளாவிய காலநிலை உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் ஆர்வத்துடன் உரை நிகழ்த்திய ஆர்வலர் Txai Suruiக்கு கொலை மிரட்டல் வந்தபோது, பிரேசிலின் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் சமீபத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »