Press "Enter" to skip to content

தூக்கத்தில் பாலியல் உறவு கொள்வது சாத்தியமா? பிரிட்டனில் பேசுபொருளான ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது

  • எம்மா அயில்ஸ்
  • பிபிசி நியூஸ்

ஜேட் மெக்ரோசென் – நெதர்காட்டின் பாலியல் வல்லுறவு வழக்கை கைவிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு(சிபிஎஸ்). ஜேட்டிற்கு செக்ஸ்சோம்னியா இருக்கலாம் என்று கூறிதான் இந்த வழக்கு கைவிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளாதது குறித்து தற்போது சிபிஎஸ் மன்னிப்பு கோரியுள்ளது. என்ன நடந்தது? சிபிஎஸ் தனது முடிவை மாற்ற என்ன காரணம்?

2017ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அது. சவுத் லண்டனில் ஒரு சோஃபாவில் அரை நிர்வாணமாக எழுந்தார் ஜேட். அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் தரையில் விழுந்து உடைந்து கிடந்தது. 24 வயது ஜேட், தான் தூங்கும்போது தன்னை யாரோ பாலியல் வல்லுறவு செய்தது போல உணர்ந்தார்.

மூன்று வருடங்கள் கிழத்து ஜேட்டை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீதான விசாரணை தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு சிபிஎஸ் எனப்படும் க்ரவுன் ப்ராசிக்யூஷன் சர்வீஸிலிருந்து ஜேட்டுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக காவல்நிலையத்தில் வந்து சந்திக்குமாறு ஜேட்டிடம் கூறினர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றவியல் குற்றங்களை விசாரிக்கும் அமைப்புதான் சிபிஎஸ். காவல்நிலையத்தில் ஜேட்டின் வழக்கு கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டு தூக்க நிபுணர்கள் ஜேட்டின் வழக்கை ஆராய்ந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவர்கள், ஜேட் ‘செக்ஸ்சோம்னியா’ என்ற ஒரு குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த குறைபாடு உள்ளவர்கள் தூக்கத்தில் பாலுறவு செய்கைகளில் ஈடுபடுவர்.

ஜேட்டிற்கு ஏதும் புரியவில்லை. அவர் அப்போது அந்த குறைபாடு குறித்து கேள்வி படுகிறார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சட்டப்படி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தால் அவர் உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என்று அர்த்தம். அதேபோல உடலுறவுக்கு சம்மதம் வழங்கியதாக ‘நம்பும்படியான காரணங்கள்’ இருந்தால் அந்த நபர் பாலியல் வல்லுறவு குற்றவாளியாக கருதப்படமாட்டார்.

முதன்முறையாக இந்த வழக்கு குறித்து பேச காவல் நிலையத்திற்கு சென்றபோது ஜேட்டிடம் தூக்கம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது தான் எப்போதும் ஆழ்ந்து தூங்கும் ஒரு நபர் என்றும், தனது பதின் பருவத்தில் தூக்கத்தில் சில முறை நடந்ததாகவும் ஜேட் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஜேட் இவ்வாறு கூறியது குறித்து மறந்துவிட்டார். தற்போது அவரின் வழக்கு கைவிடப்படுவதாக சிபிஎஸ் தெரிவித்த பிறகுதான் அவருக்கு இது நியாபகம் வந்தது.

ஜேட்டின் நெருங்கிய தோழி பெல்தான் 999 டயல் செய்து காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் அலைப்பேசியில் ஜேட் பேசியது குறித்து நினைவு கூர்ந்தார். “அதுவரை அம்மாதிரியான ஒரு குரலில் ஜேட் பேசி நான் கேட்டதில்லை. அவள் அழுதுகொண்டே தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். உங்களுடைய தோழி அவ்வாறு கூறினால் உங்கள் உலகமே நிலைகுலைந்துவிடும்.” என்றார் பெல்.

அவர்கள் இருவரும்தான் அன்று மாலை ஒன்றாக அலங்காரம் செய்து கொண்டு ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து வெளியில் வந்தனர்.

அது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மாலையாக இருந்தது. இருவரும் குடித்தனர். பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விடுதியை மூடும் நேரம் வந்தது. பெல் வீட்டிற்கு செல்ல டாக்ஸி ஒன்றை புக் செய்தார். ஆனால் ஜேட் ஒரு சில நண்பர்களுடன் வேறு ஒரு இடத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தார்.

இரவு 2 மணி ஆனது. நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஜேட் ஒரு மூளையில் உள்ள சோஃபாவில் போர்வையை போர்த்திக் கொண்டு தனது ஆடை அலங்காரங்களுடன் அப்படியே உறங்கிவிட்டார். விடியல் காலை 5 மணிக்கு எழுந்த போது ஜேட் அவரின் உள்ளாடைகளை அணிந்திருக்கவில்லை.எதிரே இருந்த சோஃபாவில் ஒரு ஆண் படுத்திருந்தார்.

“நான் அவரிடம் சண்டையிட்டேன். என்ன நடந்தது? நீ என்னை என்ன செய்தார்? என்று கேட்டேன் ஆனால் அவர் சொன்னது எனக்கு வித்தியாசமாக இருந்தது. அவர், நீ விழித்திருந்தாய் என்று நான் நினைத்தேன் என்றார்.” என்கிறார் ஜேட்.

“அதன் பின் அந்த மனிதர் பயத்தில் ஓடிவிட்டார். நான் எனது தோழி பெல்லுக்குதொலைபேசி செய்தேன்,” என்கிறார் ஜேட்.

இரண்டு காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஜேட்டை தடயவியல் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். பிறப்புறப்பு சோதனையில் இருந்த விந்து, அந்த சோஃபாவில் இருந்த மனிதருடன் ஒத்துப் போனது.

குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நபரை காவல்துறையினர் விசாரித்தனர். சிபிஎஸ் அவர் மீது பாலியல் வன்புணர்வு குற்றம் சுமத்த முடிவு செய்தது. அவர் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறினார். விசாரணைக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

இந்த வழக்கை சிபிஎஸ் கைவிட்டது தவறு என ஜேட் நிரூபிக்க விரும்பினார். ஆனால் அதை நிரூபிக்க அவருக்கு போதிய நேரம் இல்லை.

அவர் அனைத்து ஆதாரங்களையும் கோரினார். காவல்துறையினரின் விசாரணைகள், நச்சுயியல் முடிவுகள், சாட்சிகளின் கூற்றுகள், தூக்க நிபுணர்கள் அறிக்கைகள் என அனைத்தையும் கோரினார்.

இதை அனைத்தும் படித்த ஜேட் தூக்க நிபுணர்களின் அறிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்த்து அடைந்தார்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

இரண்டு நிபுணர்களில் யாருமே ஜேட்டை சந்திக்கவில்லை. ஆனால் அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு கைவிடப்பட்டுள்ளது.

முதல் நிபுணர், ஜேட்டுக்கு செக்ஸ்சோம்னியா இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், தூக்கத்தில் கண்களை திறந்து கொண்டு பாலியல் செய்கைகளில் ஈடுபவராகவும், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் ஜேட்டின் செய்கை இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிபுணர் குற்றம்சாட்டப்பட்டவரால் நியமிக்கப்பட்டவர்.

எனவே சிபிஎஸ் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. “ஜேட், 16 வயதில் ஒருமுறை தூக்கத்தில் நடந்தது, தற்போது தூக்கத்தில் பேசுவது அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் இவ்வாறு இருப்பது ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி ஜேட் செக்ஸ்சோம்னியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன,” என்றார்

ஜேட்டிற்கு பேச்சே வரவில்லை. ஜேட் தானே ஒரு நிபுணரை காண முடிவு செய்தார். லண்டனின் தூக்க மையத்தில் (ஸ்லீப் சென் டர்) உள்ள இர்ஷாத் இப்ராஹிமை சந்தித்தார். அவருக்கு பாலியல் வல்லுறவு வழக்குகளில் நிபுணர் அறிக்கைகள் கொடுத்த அனுபவமும் உள்ளன.

ஜேட் வழக்கு இப்ராஹிமிற்கு வித்தியாசமானதாக இருந்தது. ஏனென்றால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்தான் இதுவரை செக்ஸ்சோம்னியா இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் முதன்முறையாக பாதிக்கப்பட்டவருக்கு செக்ஸ்சோம்னியா இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல பிபிசியின் விரிவான ஆய்விலும், பிரிட்டனில் நடைபெற்ற பாலியல் வன்புணர்வு வழக்குகளில் புகார் தெரிவித்தவருக்கு செக்ஸ்சோம்னியா இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதாடவில்லை என தெரியவந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செக்ஸ்சோம்னியா குறித்து குறைந்த அளவிலான அறிவியல்பூர்வ ஆய்வுகளே இருப்பதாகவும், செக்ஸ்சோம்னியாவை கண்டறிய எளிய வழிகள் ஏதும் இல்லை என்றும் இம்பராஹிம் தெரிவித்தார். ஆனால் பெரும்பாலும் செக்ஸ்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களாக இருப்பதையும் அவர்கள் தூக்கத்தில் ஏதும் பாலுறவு செய்கைகளில் ஈடுபடுவதை தான் அறிந்திருந்தப்பதாகவும் இப்ராஹிம் தெரிவித்தார்.

அதன்பிறகு ஜேட்டிற்கு தூக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாலிசோம்னோகிராஃபி என்னும் அந்த பரிசோதனையில் மூளையின் அலைகள், மூச்சு விடுதல், தூக்கத்தில் ஏற்படும் அசைவு ஆகியவை கண்காணிக்கப்படும்.

பரிசோதனையில் அவருக்கு குறட்டைவிடும் பழக்கம் இருப்பதாகவும், தூக்கத்தில் மூச்சு நின்றுவிடும் நிலையின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும் தெரியவந்தது. இது இரண்டுமே செக்ஸ்சோம்னியாவை தூண்டக்கூடிய காரணிகளாக இருக்கலாம் என இப்ராஹிம் தெரிவித்தார்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

அதேபோல செக்ஸ்சோம்னியா என்ற நிலையை தனக்கு நடந்தவைக்காக எந்த அளவிற்கு காரணம் சொல்லலாம் என்ற தெளிவான பதிலை ஜேட் எதிர்பார்க்கிறார். ஆனால் அதற்கான பதில் கிட்டதட்ட கிடைக்காது என்கிறார் இப்ராஹிம்.

ஜேட் தனக்கு செக்ஸ்சோம்னியாவில் இல்லை என்று நம்புகிறார். எனவே தூக்க நிபுணர்களின் கூற்று அவரை வேதனை அடைய செய்கிறது.

செக்ஸ்சோம்னியா வழக்குகளை நீதிமன்றம் எவ்வாறு கையாள்கிறது என்பதை அறிந்து கொள்ள வழக்கறிஞர் அல்லிசன் சம்மர்ஸை ஜேட் தொடர்பு கொண்டார். இவர் ஆண்கள் செக்ஸ்சோம்னியாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்குகளில் வாதாடியுள்ளார்.

தூக்க நிபுணர்களால் ஒருவருக்கு இந்த நிலை இருப்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இருக்க வாய்ப்புள்ளது என்று சொன்னாலே குற்றத்தை நிராகரிக்க அது போதுமானதாக உள்ளது என்றார் அல்லிசன்.

“இதனால் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க கூடுமா என்று கேட்டால் ஆம் என்றுதான் சொல்லுவேன். ஆனால் குற்றம் செய்யாதவர் ஒருவர் தண்டிக்கப்படுவதை காட்டிலும் அது மேல்,” என்கிறார் வழக்கறிஞர் அல்லிசன். செக்ஸ்சோம்னியா மற்றும் தூக்கத்தில் நடக்கும் குறைபாடுகள் கொண்ட வழக்குகளில் நிச்சயம் மேல் முறையீடு செய்யலாம். ஆனால் ஜேட்டின் வழக்கு நீதிமன்றத்திற்கே வரவில்லை.

ஜேட் இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்தார். சிபிஎஸ்ஸின் முதன்மை வழக்கறிஞர் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை மீண்டும் ஆராய்ந்தார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு சென்றிருக்க வேண்டும் என்று கூறினார்.

“நீங்கள் எவ்வாறு உணர்ந்திருப்பீர்கள் என்று எனக்கு தெரிகிறது. இந்த வழக்கு உங்கள் மீது ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என வழக்கறிஞர் ஜேட்டிடம் தெரிவித்தார்.

சிபிஎஸின் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த மன்னிப்பு ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என நான் நம்புகிறேன். என்றார்.

ஆனால் இதனால் ஜேட் மகிழ்ச்சியடைவில்லை. என்னென்றால் சிபிஎஸால் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் துவங்க முடியாது.

“குற்றஞ்சாட்டப்பட்டவர், அதிகாரப்பூர்வமாக குற்றம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்கும் என எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால் என் வழக்கிலிருந்து சிபிஎஸ் பாடங்களை கற்றுக் கொள்ளும் என நம்புகிறேன்.” என்றார் ஜேட்.

தற்போது சிபிஎஸ் மீது ஜேட் வழக்கு தொடுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »