பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு 9 மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன், மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இணையம் மூலம் 9699 காளைகள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 1000 காளைகள் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன.
குறிப்பாக போட்டிகளில் நாட்டு இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இரண்டாவது நாளான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்பிலான தேர் ஒன்றைப் பரிசாக வென்ற விஜய் என்ற மாடுபிடி வீரர், இனி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
காலை 8 மணி முதல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கெடுப்பதற்குச் சுமார் 900 மாடுகள் வந்துள்ளன. அவற்றைப் பிடிப்பதற்கு 335 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். ஒரு சுற்றுக்கு 25 வீரர்களுக்கு அனுமதி. ஒரு சுற்று என்பது 45 நிமிடங்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்ற பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
போட்டி தொடங்கியவுடன் முதலில் வாடிவாசலில் இருந்து பாலமேட்டில் உள்ள கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கக்கூடாது என்பது வழக்கம். போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் கார்,எந்திர இருசக்கரக்கலன் (பைக்), மிதிவண்டி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியின்போது வெளியே சீறிப்பாயந்த ஒரு காளையை மிகுந்த வீரத்தோடு ஒரு மாடுபிடி வீரர் திமிலைப் பிடித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் துள்ளிக் குதித்து அவரை விலக்கிவிடப் போராடிய காளை, ஒரு சுற்றாகச் சுழன்று அவரைக் கீழே வீசிவிட்டுப் பறந்தது.
மாடு முட்டி உயிரிழப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டில், ஐந்தாம் சுற்றுக்கு பிறகு 18 காளைகளை பிடித்த, மணி என்பவர் முதலிடத்தில் இருந்து வருகிறார். அதற்கு அடுத்த இடங்களில் 15 காளை பிடித்த ராஜாவும், 11 காளைகளை அடக்கிய தமிழரசனும் இருக்கின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு 9 மாடுகளைளைப் பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன், மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அரவிந்த்ராஜன் உயிரிழந்தார்.
அதேபோல பாலமேட்டில் அதிக காளைகளைப் பிடித்து மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழரசனையும் மாடு முட்டியதில், அவர் காயமடைந்தார். சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையாளர் அரவிந்த், மாடு முட்டியதில் உயிரிழந்தார். இவர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்திருந்த நிலையில், மாடு முட்டி உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழுவினர் 160 பேர் உள்ளனர். மாடுகளுக்கு சிகிச்சையளிக்க 60 கால்நடை மருத்துவக் குழுவினர் உள்ளனர்.
2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com