Press "Enter" to skip to content

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும்:  முதன் முறையாக மத்திய அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய  மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

பொருளாதார வலிமையில் முதல் 20 இடங்களில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பிறகு, முதன் முறையாக அதன் உள்ளகட்டமைப்புப் பணிக்குழுவின் 2 நாள் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் தொடங்கியுள்ளது. 

நகரங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுதல், நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு நிதியளித்தல் மற்றும் எதிர்காலத்தை தயார்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன. 

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். “இந்தியா தலைமேயேற்று நடத்தும் இந்த கூட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் பங்கேற்றுள்ளன. நாங்களும் வளர்ந்த நாடாக விரும்புகிறோம். நாங்கள் எங்களது பிரதமரை நினைத்து பெருமைப்படுகிறோம். கடந்த 8 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மற்ற துறை வளர்ச்சியின் மூலம் பல நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது.” என்று அவர் கூறினார். 

சர்வதேச மாநாட்டை தொடங்கி வைப்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்ட நாராயண் ரானே, “தற்போது வளர்ந்த நாடுகள் பலவும் பொருளாதார பெருமந்தத்தை எதிர்கொண்டுள்ளன என்பதே உண்மை. இந்தியாவையும் வரும் ஜூனுக்குப் பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டு மக்களை பாதிக்காத வகையில் தடுக்க மத்திய அரசும், பிரதமர் மோடியும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், ” என்று நாராயண் ரானே தெரிவித்தார். 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பொருளாதார பெருமந்தம் அச்சுறுத்தும் நிலையில், இந்தியாவை அது தாக்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறிவந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் பெருமந்தம் வர வாய்ப்பே இல்லை என்று புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார். 

பொருளாதார ஸ்திரத்தன்மையில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பான நிலையில் இருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அதற்கு நேர்மாறாக நாராயண் ரானேவின் இன்றைய பேச்சு அமைந்துள்ளது. 

பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டிருப்பதால், சாமான்ய மக்களிடையே அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று நிபுணர்கள் மத்தியில் இப்போதே அனல் பறக்கும் விவாதம் தொடங்கிவிட்டது. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »