Press "Enter" to skip to content

கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சாதி இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க. நிர்வாகி கைது

சேலம் மாவட்டத்தில் திருமலைகிரி கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஆபாசமாகப் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோவிலில் தற்போது திருவிழாவும் கும்பாபிஷேகமும் நடந்து வருகிறது. இந்த நிலையில், கோவில் குடமுழுக்கு முடிந்து வேறு பூஜைகள் நடைபெற்று வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரவீன் என்பவர் கோவிலுக்குள் வழிபடச் சென்றிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக தாங்கள் அந்தக் கோவிலுக்குள் வரமாட்டோம் என அங்குள்ள ஆதிக்க ஜாதியினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட திருமலைகிரி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கடந்த 27ஆம் தேதி அந்தப் பட்டியலின இளைஞரை ஊர் மக்கள் முன்பாக ஆபாசமாகத் திட்டினார்.

“யாரு சொல்லிடா கோவிலுக்குள்ள வந்த? சொல்றா… ஊர்லயே இருக்க முடியாது, ஞாபகம் வச்சுக்க… ஊர் நல்லா இருக்கனும்னு விடிய விடிய தூங்காம உக்காந்துக்கிட்டிருக்கிறேன்… இங்க நோம்பு போடலைனா உங்க ஊர்லையும் போட முடியாது. அப்படியே பேத்துப்புடுவேன்.. இத்தனை பேருக்குத் தெரியாததை நீ சொல்றியா… எங்க ஊர்ல பாதிப்பேர் கோவிலுக்கே வர மாட்டேங்கிறான். கோவிலே வேணாங்கிறான்… இந்தக் கோவிலைக் கட்ட ஒங்க ஆயாலும் அப்பனும் பணக் கொடுத்தாங்களா…? பல்லு கில்லெல்லாம் கழட்டிப்புடுவேன். யாரு சொல்லி இதைக் கேக்குறாங்கன்னு சொன்னா, பேத்துப்புடுவேன். ரோட்டுல எங்கையும் நடமாட முடியாது.” என்று பேசிய மாணிக்கம், தனது பேச்சின் நடுவே அந்த இளைஞரையும் அவரது உறவினர்களையும் மிக மோசமான கெட்ட வார்த்தைகளாலும் திட்டுவதாக காட்டுகிறது அந்த காணொளி.

இந்த காணொளிவின் உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

இந்த காணொளி தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடுமையான கண்டனைத்தை வெளியிட்டுள்ளது. விரைவில் அந்தக் கோவிலில் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் முதல் முறையாக கோவிலுக்குள் சென்று வழிபட்டிருக்கிறார்.

இதனை அறிந்த சாதியவாதிகள், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் கோவிலுக்குள் வந்து விட்டதால் கோவில் தீட்டாகிவிட்டது என்றும், சாதி இந்துக்கள் கோவிலுக்குள் வரமாட்டோம் எனத் தெரிவித்ததாகக் கூறி, ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான திரு.டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27ஆம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

வாய்க்கு, வாய் ஆபாச சொற்களை வைத்து பேசியதோடு, கிராமத்து மக்களை “கிராமத்து விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன்” என்றும் நேரடியாக மிரட்டுகிறார்.

இந்தச் செய்தியை அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சேலம் இரும்பாலை காவல்துறையினர், வெட்கக்கேடான முறையில் பிரவீனை அழைத்து சமாதானப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

மாநில காவல்துறையும், மாநில நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு திமுக ஒன்றியச் செயலாளரை எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து எங்கிருந்தாலும் கைது செய்ய வேண்டும். மாணிக்கத்தை அந்த கிராமத்தை விட்டே சட்டப்படி வெளியேற்ற வேண்டும்.

மேலும் ஓரிரு தினங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தும்” என்று கூறப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து இடைநீக்கம், கைது

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க. சேலம் மாவட்டம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரான டி. மாணிக்கத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

இருந்தபோதும், இந்த விவகாரம் குறித்து சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுவருகிறது. சம்பந்தப்பட்ட நபரை எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டுமென பலர் ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர்.

 இதற்கிடையில், டி. மாணிக்கம் மீது பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் புகார் அளித்தார். இதையடுத்து காவல் உதவி ஆணையர் ஆனந்தி, மாணிக்கத்தை இரும்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தார்.  வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »