Press "Enter" to skip to content

மயில்களைக் கொல்ல இலங்கை உத்தரவிட்டது ஏன்?

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் இந்த வியடத்தைக் தெரிவித்தார். தமது பயிர்களை குரங்குகள் சேதமாக்குவதாக அமைச்சரிடம் விவசாயிகள் இதன்போது முறையிட்டனர்.

செங்குரங்கு (Toque macaques), மயில், குரங்கு, மர அணில் (ராட்சத அணில்) முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றி ஆகிய உயிரினங்களையே இவ்வாறு கொல்ல முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேற்குறிப்பிடப்பட்ட உயிரினங்கள் – பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே இந்த விலங்குகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் பொருட்டு எந்தவொரு நடவடிக்கையினையும் எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சில மாதங்களுக்கு முன்னர் உரையாற்றியபோது, இந்த விலங்குளால் 121 மில்லியன் தேங்காய்களும், 8 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல்லும் வருடாந்தம் அழிவடைவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னுமொரு சுற்றுச் சூழல் அனர்த்தத்துக்கு வழிவகுக்கும்

இது தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயாக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் பிரிவு தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எம். றியாஸ் அஹமட் – பிபிசி தமிழிடம் பேசுகையில்; “பிரச்சினைக்கான காரணத்தை பார்க்காமல், தற்காலிகத் தீர்வை பெறும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீரமானம், இன்னுமொரு சுற்றுச் சூழல் அனர்த்தத்துக்கு வழிவகுக்கும்” என எச்சரிக்கின்றார். மேலும், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறுகின்றார்.

உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து – சமநிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “ஒரு விலங்கினத்தின் தொகையில் பிரச்சினை ஏற்படுமாயின் ஒட்டுமொத்த உயிர்ச் சங்கிலியும் பாதிக்கப்படும்” என்றார்.

“கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விலங்குகள் அனைத்தும் இயற்கைக்கு ஏதோவொரு வகையில் உதவுகின்றன. காடுகளை உருவாக்குவதில் குரங்கின் பங்கு முக்கியமானது. குரங்குகள் உண்ணும் பழங்களிலுள்ள விதைகள், அவற்றின் மலம் மூலம் பரப்பப்பட்டு மரங்களாக முளைக்கின்றன. பின்னர் அவை காடுகளாகின்றன” எனக் கூறினார்.

விவசாய உற்பத்திக்கு மயில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டு இருந்தாலும், மறுபுறம் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில உயிரினங்கள் மற்றும் பூச்சிகளை – மயில் உணவாக உட்கொண்டு, விவசாயிகளுக்கு நன்மையினை ஏற்படுத்துவதாகவும் சிரேஷ்ட விரிவுரையாளர் றியாஸ் சுட்டிக்காட்டினார்.

மயில், குரங்கு, அணிலை கொல்ல இலங்கையில் அனுமதி - எச்சரிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்

“முள்ளம்பன்றியை சுற்றுச் ‘சூழலின் பொறியியலாளர்’ என்று கூறுவர். மண்ணை முள்ளம்பன்றி தோண்டுவதன் மூலம் – உழவு வேலையொன்றைச் செய்கிறது. அதன் மூலம் – கீழுள்ள மண் மேலே வரும், மேலேயுள்ள மண் கீழே செல்லும். இதனால் மண் பசளைத்தன்மை அடையும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஒவ்வொரு விலங்கும் இயற்கைக்கு ஏதோவொரு வகையில் உதவிக் கொண்டிருப்பதாக அவர் விளக்கமளித்தார்.

இந்த உயிரினங்களின் பெருக்கத்துக்கு காரணம் என்ன?

“மேற்சொன்ன 6 வகை உயிரினங்களின் அதிக பெருக்கம் காரணமாகவே, இவை விவசாயத்துக்கு ‘பீடை’யாக மாறியுள்ளன. அப்படியென்றால், அதற்கு காரணமாக ஏதோவொரு விடயம் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”.

“மேற்குறிப்பிட்ட உயிரினங்களை வேட்டையாடக்கூடிய விலங்குகள் குறைவடைந்தமையின் காரணமாகவே, இந்த 6 விலங்குகளின் பெருக்கமும் அதிகரித்திருக்கிறது”.

“உதாரணமாக, கீரிப்பிள்ளை, கபறக்கொய்யா மற்றும் மீன்பிடிப்பூனை போன்றவை, மயிலுடைய முட்டைகளை வேட்டையாடும். ஆனால், காடுகள் மற்றும் புதர்கள் அழிக்கப்படுகின்றமையினால் மயிலின் எதிராகளான இந்த விலங்குள் அழிவடைந்து வருகின்றன. இதனாலேயே மயிலின் பெருக்கம் அதிகரித்துள்ளது” என, அவர் விவரித்தார்,

“கொல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள உயிரினங்களின் எதிரி விலங்குகள் குறைவடைந்தமையே, இவை பெருகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த எதிரி விலங்குகள் அழிவடைவதற்கு மனிதர்கள்தான் காரணமாக உள்ளனர். காடுகளை அழித்ததன் மூலம் – மனிதர்கள் இதனைச் செய்து வருகின்றனர்” என, றியாஸ் குறிப்பிட்டார்.

எனவே அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

“வேட்டைக்காரர்கள் அனுமதியை தவறாக பயன்படுத்தலாம்”

குரங்கு

மறுபுறமாக, விவசாயத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மேற்படி விலங்குகளை கொல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியினை, ‘விலங்கு வேட்டையாடிகள்’ தவறாகப் பயன்படுத்தும் நிலைவரம் உருவாகலாம் என்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் றியாஸ் அஹமட் அச்சம் தெரிவித்தார்.

“இலங்கையில் மயில் இறைச்சிக்கு மிகவும் மவுசு உள்ளது. எனவே, இறைச்சித் தேவைக்காக மயில்கள் கண்மூடித்தனமாக வேட்டையாடப்படலாம். குரங்கு இறைச்சியை உண்பவர்களும் உணவுக்காக குரங்குகளை கொல்லும் நிலை ஏற்படக் கூடும்”.

“எனவே, அரசாங்கத்தின் அறிவிப்பை சாட்டாக வைத்துக் கொண்டு, இந்த உயிரினங்கள் கொல்லப்படுமானால், அது இன்னொரு சுற்றுச் சூழல் அழிவுக்கு வழிவகுக்கும்” என அவர் மேலும் கூறினார்.

எந்தவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் திடீரொன இவ்வாறான முடிவுகளை மேற்கொள்வதும், பின்னர் அவை குறித்து கவலை கொள்வதும் இலங்கை அரசாங்கங்களுக்கு புதிய விடயமல்ல என அவர் விமர்சித்தார்.

“பல காலங்களுக்கு முன்னர் ‘இப்பில் இப்பில்’, ‘நொக்ஸ்’ போன்ற மரங்களை நாட்டுக்குள் அப்போதிருந்த அரசாங்கம் கொண்டுவந்தது. பின்னர் அவை அந்நிய ஆக்கியமிப்புத் தாவரங்கள் என்றும் அவற்றினால் பிரச்சினைகள் உள்ளன எனவும் பின்வந்த அரசாங்கம் கூறியது. ஆட்சியாளர்களின் பல தீரமானங்கள் இப்படித்தான் உள்ளன” என, அவர் மேலும் கூறினார்.

அந்த வகையில், அரசாங்கம் இந்த 06 விலங்குகளையும் கொல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளமை பிழையான தீர்மானமாகும் என அவர் குறிப்பிட்டடார்.

யுத்தத்தின் பின்னர்தான் குரங்குகளுக்கு இந்த நிலை

“யுத்தம் முடிவடைந்த பின்னர்தான் மனிதர்களுக்கு குரங்குகளால் தொல்லை ஏற்படத் தொடங்கியுள்ளது. காரணம், யுத்தத்தின் பின்னர் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் குரங்குகள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளன”.

“எனவே, முதலில் காடுகளை அழிப்பவர்கள், காடுகளை ஆக்கிரமிப்பவர்கள், ஆற்றங் கரைகளை மூடி ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக – கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என, அவர் வலியுறுத்தினார்.

காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதும், காடுகளின் அளவை அதிகரிப்பதுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் எனக் கூறிய விரிவுரையாளர் றியாஸ், “தமக்கான உணவுகள் இல்லாமையினால்தான் விலங்களும், பறவைகளும் மனிதர்களின் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

காடும், காட்டுக்குள் நல்ல உணவும் இருந்தால் குரங்குகள் ஏன் நமது வீட்டிலுள்ள மாங்காய்களை தேடி வரப்போகின்றன?” என அவர் கேள்வியெழுப்பினார்.

“மேற்சொன்ன விலங்குகளால் விவசாயத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உடனடியாகத் தடுக்கும் பொருட்டு – பாதுகாப்பை அதிகரிக்கலாம், சத்தங்களை ஏற்படுத்தி விலங்குகளை விரட்டலாம், வலைகளை விரிக்கலாம்” என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக விவசாயிகளுக்கு மானிய அடிப்படையிலான உதவிகளை அரசாங்கம் வழங்க முடியும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

நெல் பயிர்களை யானைகளிடமிருந்து விவசாயிகள் காவல்காத்து, சேதமின்றி விலைச்சலைப் பெறும் போது, ஏனைய பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளால் தமது பயிர்களை விலங்குளிடமிருந்து காவல் காக்க ஏன் முடியாது? என்கிற கேள்வியினையும் முன்வைத்தார்.

இதேவேளை, மயில்களின் அதிக நடமாட்டம் காரணமாக வயல் நிலங்களில் பாம்புகளின் தொல்லை மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றமையினையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும் சிரேஷ்ட விரிவுரையாளர் றியாஸ் அஹமட் தெரிவித்தார்.

அரசாங்க கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

செந்தில் தொண்டைமான்

இது இவ்வாறிருக்க, விவசாய நிலங்களுக்குள் உட்புகும் குரங்கு, மயில், மர அணில், பன்றி மற்றும் முள்ளம் பன்றி உள்ளிட்ட உயிரினங்களைக் கொல்வதற்கு – விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதிக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அந்தக் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த விலங்குகளைக் கொல்வதற்கு வழங்கியுள்ள அனுமதியை ஏற்றுகொள்ள முடியாது எனத் தெரிவிததுள்ளதோடு, ‘மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது உணவைத் தேடி செல்லும் விலங்குகளை கொல்வது பெரிய அநீதியாகும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலங்குகள் வசிக்கும் காடுகளை மனிதர்கள் அழித்து – கட்டடங்களை கட்டுவதாலும் இயற்கைக்கு ஒவ்வாத விடயங்களை மேற்கொள்வதாலும், இந்த விலங்குகள் உணவுப் பற்றாக்குறையினை எதிர்கொள்வதாகவும், தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்ள மனிதன் வசிக்கும் பகுதிகளுக்குள் வருகின்றன என்றும், அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஆகவே காடுகளை அழித்து கட்டடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, விலங்குகள் மீது அல்ல’ என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்திருக்கிறார்.

எனவே இந்த முடிவை உடனடியாக விவசாய அமைச்சு மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செந்தில் தொண்டமானுடன் பிபிசி தமிழ் பேசிய போது, “இந்த உயிரினங்களை கொல்லும் தீர்மானத்தை தவிர்த்து, மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் யோசிக்க வேண்டும்” எனக் கூறினார்.

விவசாயிகளின் பயிர்களை விலங்குகள் அழிக்காதவாறு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், உதாரணமாக பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு மானியங்களை அரசு வழங்க வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

செந்தில் தொண்டமான் தலைமை வகிக்கும் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக உள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் – தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »