Press "Enter" to skip to content

இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு சிறுநீரக நோய்: அறிகுறிகள் என்ன? எப்படி தவிர்ப்பது?

பட மூலாதாரம், PETERSCHREIBER.MEDIA

இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் சிறுநீர் பாதை நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

நாட்டில் இரண்டு லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், ஆண்டுக்கு 12,000 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் சிறுநீர் பாதை சுகாதார பிரச்னையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இந்த சிறுநீரக நோய் பிரச்னையைத் தணிக்க, நோய்க்கான காரணங்களை அறிவதும் தீவிரத்தைக் குறைக்கத் தேவையான விழிப்புணர்வு பெறுவதும் அவசியம்.

சிறுநீரக நோய்க்கான காரணங்களும் அதன் தீவிரத்தைக் குறைக்கத் தேவையான விழிப்புணர்வு தகவல்களையும் பார்ப்போம்.

சிறுநீரக நோய்களுக்கான ஒரு முக்கியக் காரணம் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய். அதுமட்டுமல்லாமல், உயர் ரத்த அழுத்தம், சில நேரங்களில் குறைந்த ரத்த அழுத்தம், நோய்த்தொற்றுகள் (டெங்கு, மலேரியா, எச்.ஐ.வி., பாக்டீரியா தொற்று), சிறுநீரகக் கல், சில மருந்துகள் (வலி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், சில ஆன்டிபயாடிக் மருந்துகள்) சிறுநீரகப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக, லூபஸ் (SLE) போன்ற சில (பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும்) ஆட்டோ இம்யூன் நோய்கள், அதிகப்படியான மருந்துகள், மூலிகை மருந்துகள், சில நேரங்களில் மரபணு பிரச்னைகள் ஆகியவற்றால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும்.

சிறுநீரக பிரச்னைகளின் அறிகுறிகள் என்ன?

நோய்க்கான காரணத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். நாள்பட்ட நோய்களால் சிறுநீர்க் குழாய்கள் சேதமடைந்தால், முதலில் முகம் வீங்கும், பின்னர் கால்கள் மற்றும் முழு உடலும் வீங்கும். சிறுநீர் அடங்காமை, நடக்கும்போது களைப்பு, படுக்கும்போது சோர்வு போன்றவை பொதுவான அறிகுறிகள்.

சிறுநீர்க் குழாய் காயத்திற்கு கற்கள் காரணமாக இருந்தால், அது கீழ் முதுகில் வலி, இடுப்பு வரை பரவுதல், குளிர், காய்ச்சல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிதல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

வேறு ஏதேனும் தொற்றுகள், அறிகுறிகள் அல்லது வலி மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக சிறுநீர்க் குழாய்கள் சேதமடைந்தால், வீக்கம், கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் வருவது, சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

பின்விளைவுகள் என்ன?

குடலில் உள்ள ரத்த அணுக்களின் உற்பத்திக்குத் தேவையான முக்கியமான ஹார்மோன் (எரித்ரோபொய்டின்) சிறுநீர்க் குழாய்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால்தான் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைகிறது. இது ரத்த சோகையை ஏற்படுத்தும். அதனால் சோம்பல், சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

மேலும் நமது உடலின் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க மிகவும் அவசியமான வைட்டமின் டி சிறுநீரகத்தில் உற்பத்தியாகிறது. அதனால்தான் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் சோர்வு, வலி மற்றும் சோர்வு ஆகியவை பொதுவாக ஏற்படுகின்றன.

சிறுநீரகங்கள் நமது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான உறுப்புகள். எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களில் பெரும் பகுதியினர் பல வகையான மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், அவ்வப்போது ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதயத்தில் அழுத்தம் அதிகரித்து, அது சரியாகச் செயல்பட முடியாமல், இதய வீக்கம், சோர்வு, நுரையீரலில் நீர் தேங்குதல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும் அபாயமும் சிறுநீரக நோய்களால் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

நல்ல ரத்த ஓட்டம் மற்றும் ரத்தம் உறைவதற்கு சிறுநீரகங்களின் சரியான செயல்பாடு முக்கியமானது. அதனால்தான் சிறுநீரக நோயாளிகளுக்கு இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எப்படி அடையாளம் காண்பது?

சிறுநீரகம்

பட மூலாதாரம், Science Photo Library

சிறுநீர் பாதை பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும்.

இரண்டு சிறிய, செலவு அதிகம் பிடிக்காத சோதனைகள் (சீரம் கிரியேட்டினின், சிறுநீர் புரதம்/ஆல்புமின் வெளியேற்றம்) மூலம் இந்தப் பிரச்னைகளை கண்டறிய முடியும்.

சிறுநீரில் ஏதேனும் தொற்று இருந்தால், சிறுநீர் பரிசோதனை மூலம் அது வெளிப்படும்.

நாள்பட்ட நோய்கள் கட்டுக்குள் உள்ளதா இல்லையா என்பதை அறிய, சர்க்கரை பரிசோதனைகள் மற்றும் கொழுப்பு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

சிறுநீர்க்குழாய் சுருங்கியது, கற்கள், வீக்கம் அல்லது ஏதேனும் தொற்றுநோய் போன்ற பிரச்னைகள் இருந்தால் அடிவயிற்று ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

ரத்த உற்பத்தி போதுமானதா என்பதை அறிய ரத்தப் பரிசோதனைகள், இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறிய இதய ஸ்கேனிங் போன்றவை தேவைக்கேற்ப செய்யப்படலாம்.

சிறுநீரகங்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

சிறுநீரகம்

பட மூலாதாரம், Thinkstock

  • உணவில் உப்பு அளவைக் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதிகமாக இறைச்சி சாப்பிட வேண்டாம்.
  • தினமும் குறைந்தது முப்பது நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்
  • உணவில் பாதி நார்ச்சத்துள்ளதாக இருக்க வேண்டும்.
  • புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
  • வலி மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டுகளை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது.
  • உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையான பரிசோதனை செய்து சரியான மருத்துவர்களிடம் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
  • ரத்த சோகை, தொண்டை வலி போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உடனடியாகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிறுநீரகம்

பட மூலாதாரம், CRICK INSTITUTE

சிறுநீரக பிரச்னைகளைத் தாமதமாகக் கண்டறிவது மிகுந்த செலவு பிடிக்கும் சிகிச்சைகளைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

ஒருமுறை டயாலிசிஸ் செய்ய சுமார் 2,000 ரூபாய் ஆகும். இது ஒரு வாரத்திற்கு மூன்று முறை, ஒவ்வொரு முறையும் நான்கு மணிநேரம், வாழ்நாள் முழுவதும் செய்யப்பட வேண்டும். பணத்தைத் தவிர, இந்த நடைமுறைக்கு வேறு யாராவது நோயாளியுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.

ஒரு முறை டயாலிசிஸ் செய்ய 150 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இதுபோன்ற பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்து, ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது மிகவும் அவசியம்.

குறிப்பாக தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உபயோகித்து கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

(கட்டுரையாளர் ஒரு மருத்துவர். இந்தக் கட்டுரை ஒரு பொதுவான புரிதலுக்காக மட்டுமே)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »