Press "Enter" to skip to content

கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது – சிம்பு

சமீபத்தில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடிகர் சிம்பு, கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சிம்பு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது. இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக்கொள்கிறேன்.

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »