கொரோனா நிவாரண உதவிகளை செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பணமில்லை என்றால் கடன் வாங்கியாவது உதவி செய்வேன் என கூறியுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழலில் உணவின்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வலர்களும், நடிகர் நடிகைகளும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னிடம் நிதி குறைவாக உள்ளது. இருந்தாலும் நான் கடன் வாங்கியாவது தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்வேன். ஏனென்றால் என்னால் மறுபடியும் சம்பாதிக்க முடியும். இந்த கடினமான தருணத்தில் இருந்து மீள ஒன்றிணைந்து போராடுவோம்” என கூறியுள்ளார்.
Source: Malai Malar