படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட ஆதரவு தெரிவித்து 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு சங்கமும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று பட அதிபர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். 30 திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து இணையதளம் மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ளது.
இந்தநிலையில் தற்போது பிரபல இணையதள நிறுவனங்கள் சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை நல்ல தோள் கொடுத்து தாங்கி, நேரடியாக வெளியிட முன்வந்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை குறையும்.
முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அந்த படத்தை எல்லா விதங்களிலும் சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. திரைப்படத்துறை வளமாக இயங்க தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் வகையில் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.
கொரோனா பிரச்சினை முடிந்ததும் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து ஆலோசித்து, விவாதித்து வரைமுறைகளை வகுத்து தமிழ் சினிமா வளமாக செயல் பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: Malai Malar