Press "Enter" to skip to content

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்தார் – இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்

தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள சினிமா இயக்குனர் கமல். இவர் தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்துள்ள பிரியாத வரம் வேண்டும் படத்தை டைரக்டு செய்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடித்த 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

2 வருடங்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் மஞ்சு வாரியர், முரளி கோபி ஆகியோர் நடித்த ஆமி படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிரணய மீனுகளுடே கடல் படத்தை இயக்கினார். இந்த நிலையில் கதாநாயகி வாய்ப்பு தருவதாக கமல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், “கமல், ஆமி படத்தை இயக்கியபோது தனக்கு அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். ஆமி படப்பிடிப்பின் போதும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அவர் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்” என்று கூறியுள்ளார்.

அவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள கமல், ‘என்மீதான புகார் ஆதாரமற்றது. எனது பெயரை கெடுக்கும் செயல். எனக்கு வக்கீல் நோட்டீசு வந்தது. இது பொய்யான புகார்’ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »