Press "Enter" to skip to content

சூர்யாவின் அறிக்கை சிறப்பு – விஜய் சேதுபதி டுவிட்

அன்பை விதைப்போம் என்ற பெயரில் நேற்று நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு என டுவிட் செய்துள்ளார்.

சென்னையில் நடந்த விருது விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து ஆதரவும் பெருகி வருகிறது. இதனிடையே ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார் சூர்யா.

அந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது, ‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். 

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். 

கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது, அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். 

தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் அறிக்கையை குறிப்பிட்டு ‘சிறப்பு’ என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »