Press "Enter" to skip to content

அனுமதியில்லாமல் பெயரை பயன்படுத்துவதா? – பாரதிராஜா கோபம்

அனுமதியில்லாமல் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இயக்குனர் பாரதிராஜா கோபமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் டி.சிவா தலைமையிலான ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான ஒரு அணியும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில்  ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கை ஒன்று வெளியானது.
அதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு, கேயார், டி.ஜி.தியாகராஜன், முரளிதரன் ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த அறிக்கையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அணியில் இருந்தும் இந்தக் குழுவில் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.  தற்போது இந்தக் குழு பற்றி பாரதிராஜா கோபமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியல் ஒன்றும் அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. நாகரிகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது.

தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைத் தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.

பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »