கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சின்னத்திரை நடிகர், நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா தொழில் முற்றிலும் முடங்கியது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமா தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். சிலர் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்ளும் அவலமும் அரங்கேறி வருகிறது.
அந்தவகையில், சென்னையை அடுத்த கொடுங்கையூரை சேர்ந்த சின்னத்திரை நடிகர்களான ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி இருவரும் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீதரின் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர் அட்டையை வைத்துதான் போலீசார் அவர்களை அடையாளம் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Malai Malar