Press "Enter" to skip to content

குடும்பத்தை பாதுகாக்கவே இந்த முயற்சி – தயாரிப்பாளர் கார்த்திக்கேயன் சந்தானம் பேட்டி

குடும்பத்தை பாதுகாக்கவே இந்த முயற்சி என்று பெண்குயின் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கேயன் சந்தானம் பேட்டியளித்துள்ளார்.

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் சார்பாக கார்த்திக்கேயன் சந்தானம் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கிய மேயாதமான், மெர்க்குரி படங்களை தொடர்ந்து தற்போது பெண்குயின் திரைப்படம் உருவாகியுள்ளது. ஈஸ்வர் கார்த்திக் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூன் 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திக்கேயன் சந்தானம் மாலைமலருக்கு பேட்டியளித்துள்ளார்.

பெண்குயின் திரைப்படம் எப்படி உருவானது?

மேயாதமான், மெர்க்குரி திரைப்படத்திற்குப் பிறகு என்ன படம் பண்ணலாம் என்று நினைக்கும் நேரத்தில் நண்பர் விஜய்சேதுபதி மூலமாக ஈஸ்வர் கார்த்திக் அறிமுகமானார். முதலில் ஈஸ்வர் கார்த்திக் ஹீரோ கதை ஒன்றை சொன்னார். முதல் படமே ஹீரோ சப்ஜெட் வேண்டாம், வேற கதை இருக்கிறதா என்று கேட்டோம். பெண்குயின் கதை சொன்னார். மிகவும் பிடித்தது. கார்த்திக் சுப்புராஜுக்கும் பிடித்துபோக படத்தை தொடங்கினோம்.

கீர்த்தி சுரேஷை தேர்வு செய்ய காரணம்?

கதை கேட்டவுடன் எங்களுடைய முதல் தேர்வு கீர்த்தி சுரேஷ் தான். பிறகு இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக், கீர்த்தியிடம் 4.30 மணி நேரம் கதை சொன்னார். கீர்த்தியும் ஓகே சொல்லிவிட்டார். நடிப்பில் கீர்த்தியை பற்றி சொல்ல தேவையில்லை. அவருடைய திறமையை முந்தைய படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்திலும் பார்ப்பீங்க…

அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தது பற்றி?

அறிமுக இயக்குனருக்கு எடுத்துகாட்டு கார்த்திக் சுப்புராஜ். அவரும் யாரிடமும் வேலை பார்க்கவில்லை. திறமைதான் முக்கியம் என்று நம்புகிறோம். அனுபவமும் முக்கியம்தான். ஆனால் இந்த படத்துக்காக ஈஸ்வர் கார்த்திக் சொன்ன விஷயங்கள், செய்த காரியங்கள் அவரை நம்ப வைத்தது. அவரிடமும் பெரிய நம்பிக்கை இருந்தது.

படப்பிடிப்பில் நடந்த அனுபவங்கள்?

மலை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒருநாள் படப்பிடிப்பில் தேனிக்கள் கொட்டியது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் டப்பிடிப்பு ரத்து செய்தோம். காயம் ஏற்பட்டது கஷ்டமாக இருந்தது. இருப்பினும் அனைவரும் அதே புத்துணர்ச்சியில் மீண்டும் வேலை பார்த்தார்கள்.

கீர்த்தி சுரேஷ், அஜய்

எத்தனை கட்டமாக படப்பிடிப்பு நடந்தது?

ஸ்டோன் பென்ச் நிறுவனத்தை பொருத்தவரை பணம் இருந்தால்தான் படப்பிடிப்பு ஆரம்பம். படப்பிடிப்பு ஆரம்பித்தால் ஒரே கட்டத்தில் முடித்து விடுவோம். இதுதான் எங்கள் பாலிசி. இதை எப்போதும் பின்பற்றுவோம்.

ஓடிடி ரிலீஸ் குறித்து?

எல்லா திரைப்படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படத்தை எடுக்கிறோம். எங்கள் திரைப்படம் குடும்பம் போன்றது. இந்த சூழ்நிலையில், குடும்ப பாதுகாப்புதான் முக்கியம். அதனால்தான் ஓடிடியில் ரிலீஸ் செய்கிறோம். தியேட்டரும், ஓடிடியும் ஒன்றாகதான் டிராவல் செய்யும். தியேட்டருக்கு அழிவே கிடையாது. இம்முறை மக்களை சென்றடையும் வழி ஓடிடி. அதனால் தான் ரிலீஸ் செய்கிறோம்.

சார்லி சாப்ளின் கதாபாத்திரம் பற்றி?

படம் பார்க்கும் போது அந்த கதாபாத்திரம் ஹைலைட்டாக இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். இயக்குனர் என்ன நினைத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறார். 

சார்லி சாப்ளின் கதாபாத்திரம்

ஓடிடியில் ரிலீசான உடனே தமிழ் ராக்கர்ஸில் வருகிறதே?

பைரசி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் பார்ப்பது தனி நபரோட விருப்பம். பைரசியை தவிர்க்கதான் திரையுலகம் போராடி வருகிறது. பைரசியில் பார்ப்பதை மக்கள் தான் தவிர்க்க வேண்டும். நம்மால் மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. பைரசியில் படம் பார்க்கிறார்கள் என்று வருத்தப்படுவதா இல்லை, படம் பார்க்கிறார்கள் என்று சந்தோஷப் படுவதா என்று தெரியவில்லை. தயாரிப்பாளராக பார்த்தால் எங்களுக்கு வருத்தம் தான்.

சிறுவன் அஜய் பற்றி?

குட்டி பையனுக்கு படத்தில் பவர்புல் கதாபாத்திரம். கதாபாத்திரத்தோடு ஒன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அவனை மிகவும் பாராட்டவே வேண்டும். இந்த வயதில் அவனிடம் இவ்வளவு பக்குவம் இருப்பது ஆச்சரியம். 

கீர்த்தி சுரேஷ்

படக்குழுவினர் பற்றி?

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்களுடைய படங்கள் எல்லாமே சந்தோஷ் நாராயணனிடம் மட்டுமே செல்லும். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, திருவின் உதவியாளர். ஒளிப்பதிவாளர் திரு, மெர்க்குரி, பேட்ட படங்களில் எங்களுடன் ஒர்க் செய்திருக்கிறார். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு இப்படத்தில் பேசும். திறமையானவர். மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த படங்கள்?

பெண்குயின் திரைப்படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. எங்களுடைய தயாரிப்பில் வெளியான மேயாதமான், மெர்க்குரி திரைப்படங்கள் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதேபோல் பெண்குயின் திரைப்படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும். இனி வரும் படங்களும் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கண்டிப்பாக இருக்கும்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »