தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, திரைப்படத்தில் தான் சந்தித்த மீடூ அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
திரைப்படத்தில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் பலர் மீடூ-வில் பேசி வருகிறார்கள். நடிகர்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவும் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “திரைப்படத்தில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்கிறார்கள். படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். திரைத்துறை கவர்ச்சி மிகுந்தது. அதனால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது.
பாலியல் தொல்லை திரைப்படத்தில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் திரைப்படத்திற்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. நான் நேர்மையாக இருக்க கூடியவள் என்பது மற்றவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் தொந்தரவுகள் இல்லை.
ஆனாலும் சில கஷ்டங்கள் இருந்தன. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை தரவும் தொடங்கி விடுவார்கள்.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
[embedded content]
Source: Malai Malar