அர்ஜுன் டெண்டுல்கரை நோக்கி வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை மிகவும் கொடுமையானது மற்றும் நியாயமற்றது என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம், அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம்பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவருடைய ஏலம் தொடங்கிய போது, எந்தவொரு அணியும் அவரை எடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து அடிப்படை விலைக்கே மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் மட்டையாட்டம் ஆலோசகராக உள்ளதால், அந்த அணி சச்சினின் வாரிசு என்ற அடிப்படையில் அர்ஜுனை ஏலம் எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. பலரும் இதனை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான பர்ஹான் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “அர்ஜுன் டெண்டுல்கரும், நானும் ஒரே ஜிம்முக்கு தான் செல்கிறோம். அங்கு அவர் தனது உடலை பராமரிக்க எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதையும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற அவர் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.
அவரை நோக்கி வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை நியாயமற்றது மற்றும் கொடுமையானது. அவரது உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள், பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவரை கீழே தள்ளி விடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
[embedded content]
Source: Malai Malar