தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்ததை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். நடிப்பு மட்டுமின்றிஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) போட்டி, தேர் போட்டி, போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார் அஜித். எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் உறுப்பினரான அஜித் அவ்வபோது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்குவந்து பயிற்சியை முடித்துவிட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
இதே போல் கடந்த வாரம் நடிகர் அஜித் வாடகை காரில் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைஃபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவரைக் கண்ட காவலர்கள் மற்றும் புகாரளிக்க வந்த பொதுமக்கள் பலர் ஒன்று கூடி அவருடன் செல்ஃபி எடுத்ததால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நடிகர் அஜித் மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதற்காக இன்று பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்கு வாடகை காரில் வந்தார். சுமார் 3 மணி நேரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்ட நடிகர் அஜித் வெளியே வந்து ரசிகர்களிடம் கை அசைத்து காரில் ஏறி சென்றார். நீண்ட நேரமாக காத்திருந்து நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முடியாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
[embedded content]
Source: Malai Malar