Press "Enter" to skip to content

நடுத்தெருவில் நிற்கிறேன்… விமல் மீது தயாரிப்பாளர் மோசடி புகார்

தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது விமல் மீது தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பட்டுக்கோட்டையில் திரையரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தபோது, விமலுடன் பழக்கம் ஏற்பட்டது.

‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க, என்னிடம் விமல், 50 லட்சம் ரூபாய் கேட்டார். என் வீட்டை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன். அதற்காக எனக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், விமல் சொன்ன தேதியில், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.

இது குறித்து பலமுறை, விமலிடம் முறையிட்டபோதும், பணத்தை தரவில்லை. என் வீட்டை விற்று, கடனை அடைத்தேன். விமலுக்கு உதவப் போய், தற்போது நடுத்தெருவில் நிற்கிறேன். இந்நிலையில், தி.மு.க., சார்பில், விமலின் மனைவி, மணப்பாறையில் போட்டியிட போவதாக தகவல் அறிந்தேன். ‘ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு’ என, என்னைப் போன்றவர்கள் நம்பியுள்ள வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் விமலுக்காக, அவரது மனைவிக்கு, ‘சீட்’ கொடுப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »