நடிகர், இயக்குனர், வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய பாலச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
கேரள மாநிலம் கொல்லம், சாஸ்தான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். மலையாள திரையுலகில் நடிகராகவும், திரைக்கதை இயக்குனராகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாலச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு இவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாலச்சந்திரன் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இவருக்கு வயது 70.
பாலச்சந்திரன், மலையாள திரையுலகில் 1991-ம் ஆண்டு வசனகர்த்தாவாக நுழைந்தார். மோகன்லால் நடித்த ‘அங்கிள் பன்’ படத்தில் வசனங்கள் எழுதி பிரபலமானார். அதன்பின்பு அக்னிதேவன், உள்ளடக்கம், பவித்தரம், புனர்திவசம், காமாத்திபாடம் போன்ற படங்களிலும் திரைக்கதை எழுதினார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும், இயக்கவும் செய்தார். இவரது இயக்கத்தில் உருவான இவன் மெகரூபன் படம் பல விருதுகளை பெற்றது. மேலும் இப்படத்திற்காக பாலச்சந்திரனுக்கு கேரள திரைப்பட விருதும் கிடைத்தது.
பாலச்சந்திரனுக்கு ஸ்ரீலதா என்ற மனைவியும், ஸ்ரீகாந்த், பார்வதி என்ற மகனும், மகளும் உள்ளனர். பாலச்சந்திரன் மறைவு செய்தி அறிந்ததும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
[embedded content]
Source: Malai Malar