99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் திரைப்படத்தில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ”இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன்.
திரைப்படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்” என்றார்.
[embedded content]
Source: Malai Malar