தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த். அவரது கருத்துகளுக்கு பெரும் ஆதரவும், எதிர்ப்புகளும் எழுவது வழக்கம். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு எழுந்திருக்கும் நிலையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை, அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சித்தார்த் பதிவு செய்தார். அவரது இந்த கருத்துக்கு பாஜக தொண்டர்கள் பலரும் எதிர்வினையாற்றினர்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச முதல்வரை அவதூறாக பேசியதாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதனிடையே தனது தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் இணையத்தில் கசியவிட்டிருப்பதாகவும் அதனால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் தனக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
[embedded content]
Source: Malai Malar