நடிகர் அருள்நிதியின் 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி உள்ளார்.
‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பிருந்தாவனம்’, ‘கே 13’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்நிலையில், நடிகர் அருள்நிதி, சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அருள்நிதியின் 15-வது படமான இதை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, சமீபத்தில் திரையுலகினருக்கு போட்டு காட்டப்பட்டது. இதில் படத்தை பார்த்த பலரும் அதனை வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளனர். இதில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது.
விஜய்குமார் ராஜேந்திரன், அருள்நிதி
இது குறித்து சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் பி.சக்திவேலன் கூறியதாவது: நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான “களத்தில் சந்திப்போம்” திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.
ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யங்களை தந்தது. அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.
படத்தில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய்வார்த்தையாக உபயோகிப்பார்கள். இப்படத்தை கண்டிப்பாக திரையரங்கத்தில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் 2021 ஜூலை 21 அன்று படத்தின் முதல் பார்வைகை வெளியிடவுள்ளோம்” என்றார்.
[embedded content]
Source: Malai Malar