தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி, அடுத்ததாக தலைநகரம் 2-ம் பாகத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வி.இசட்.துரை, சுந்தர்.சி
இப்படத்திலும் சுந்தர்.சி தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தை வி.இசட்.துரை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
‘தலைநகரம்’ படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது வடிவேலுவின் நகைச்சுவை தான். அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் ‘தலைநகரம் 2’ படத்தில் வடிவேலு நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
[embedded content]
Source: Malai Malar